பதிவு செய்த நாள்
23 ஏப்2018
00:53
பங்குச் சந்தை, தொடர்ந்து சரிவை சந்திக்கும் என்று, மார்ச் மாதத்தில் நிலவிய பரவலான எதிர்பார்ப்பு, ஏப்ரல் மாதத்தில் பொய்த்ததாகவே தோன்றுகிறது. சந்தையின் குறுகிய கால போக்கை யாராலும் சரியாக கணிக்க முடியாது என்பதையே, சந்தையின் இந்த நகர்வு மீண்டும் நிரூபிக்கிறது.
இதை முதலில் ஏற்பதும், அந்த ஏற்பின் அடிப்படையில், நம் முதலீட்டு முடிவுகளை எடுப்பதை குறிக்கோளாக அமைத்துக் கொள்வதும் நல்லது.நெடுங்கால மாற்றங்களை ஏற்படுத்தும் பொருளாதார நகர்வுகளின் மேல், நம் முழு கவனமும் இருக்க வேண்டிய தருணம் இது. உலக சந்தையில், கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை ஏற்றம் காண்கிறது. இது, ரூபாயின் மதிப்பை பாதிக்கும். நாட்டின் அன்னிய செலாவணி தேவைகளைக் கூட்டும். இது இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியை அதிகரிக்கும்.
இதனால், வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும். இது, ரூபாயின் மதிப்பை குறைக்கும். இந்த சூழலில், அரசுக்கு இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று, ஏற்றுமதி பெருக்கம் ஏற்படுத்துவது. இன்னொன்று, இறக்குமதியை கட்டுக்கோப்பாக வைப்பது.திறந்த முறையில் வர்த்தகம் நடத்திய சூழல் மாறி, ஒருவித கட்டுப்பாடான போக்கை கையெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு வரும். இதை, சந்தை உணர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.ஐ.டி., நிறுவன பங்குகள் உச்சம் தொடத் துவங்கி உள்ளன. தொடர்ந்து ஏற்றுமதியில் சிறக்கும் நிறுவன பங்குகளின் மதிப்பு கூடும். கச்சா எண்ணெயையும், அதன் உப பொருட்களையும் நம்பி நடக்கும் நிறுவன பங்குகளும் சிக்கல்களை சந்திக்கும்.
எரிபொருள் நுகர்வு, மக்களின் சேமிப்பை குறைக்கும். நிறுவன நிகர லாபமும் பாதிப்புக்கு ஆளாகும். இது, ஒரு புதிய பொருளாதார சூழல். 2014க்கு பின், இப்போது தான் இந்த சூழல் உருவெடுத்துஉள்ளது. அனேகமாக, இந்த சூழல் தொடர வாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது. அப்படி தொடர்ந்தால், சந்தையில் அதன் தாக்கம் பற்றி இன்னும் தெளிவான புரிதல் ஏற்பட வேண்டும். அதற்கு சில காலம் ஆகும். மேலும், 2018 மார்ச் மாத ஆண்டுக் கணக்குகள் தணிக்கை முடிந்து, வெளிவர துவங்கி உள்ளன. அவை எதிர்கால மாற்றங்களை பிரதிபலிக்காது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்கால லாபப் போக்கை புதிய சூழலுக்கு ஏற்ப நிர்ணயிப்பது, ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை. இதை சிறக்க செய்யவே, நம் முழு கவனத்தையும் இப்போது செலுத்த வேண்டும்.பொருளாதார மாற்றங்கள் வேகம் பிடிக்கும் சூழலில், அவற்றை எதிர்பார்த்து, முன் நகர்வுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.அரசுகள் பற்றாக்குறை சுமையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். இதற்கு, நாட்டின் வரி மேலாண்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி வழி வகுக்க வேண்டும். அந்த வகையில், நாம் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறோம்.
நம் பொருளாதாரம் போகும் திசை சரியாகவே தோன்றுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுத்த சீர்திருத்தங்கள் அரசுக்கு உதவும். ஜி.எஸ்.டி., நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும், இடைக்கால சவால்களை எதிர்கொள்ளவும் கைகொடுக்கும். வருவாய் பெருக்கம், வரி ஏய்ப்பு குறைப்பு ஆகிய நன்மைகள் தெளிவாக அமையும்.ஆனால், அரசுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால், பணவீக்கம். ஒரு பக்கம் அரசே வேளாண் விளைபொருட்களின் விலையை ஏற்ற வாக்களித்துள்ளது. இன்னொரு புறம், பண வீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம். இவற்றின் அடிப்படை முரணை அரசு எப்படி கையாள்கிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இது, முதலீட்டாளர்கள் முன்னெடுக்க வேண்டிய முயற்சி. இதைச் செய்யாமல், முதலீட்டு முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் நேரும் நேரத்தில் நாம், சந்தையின் சிறு மாற்றங்களை சார்ந்தே இருப்பதும், வெறும் நிறுவன பார்வை மட்டும் கொண்டு நடப்பதும் நல்லதல்ல.எங்கெல்லாம் பாதிப்பு வருமோ, அந்த துறை மற்றும் நிறுவன பங்குகளை தவிர்ப்பதும், விற்பதும் அவசியம். குறியீடு மற்றும் ஆவணச் சான்று இல்லாமல், இத்தகைய முடிவை எடுக்க வேண்டிய சூழல் விரைவில் உருவாகலாம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|