பதிவு செய்த நாள்
23 ஏப்2018
00:55
நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஏழை, எளியவர்களும், மத்தியமர்களும் திண்டாடும் விலையுயர்வை கட்டுப்படுத்தவே முடியாதா?
இந்தக் கட்டுரை எழுதப்படும்போது, சென்னையில் பெட்ரோல் விலை, 76.99 ரூபாய்; டீசல் விலை, 69.06 ரூபாய். ஏப்ரல் மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை, 50 காசுகளும், டீசல் விலை, 90 காசுகளும் உயர்ந்துள்ளன. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 4 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு, 5 முதல், -6 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளன.
ஏன் விலை உயர்வு?
இதைக் குறைப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் இருந்தும், அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. முதலில் ஏன் விலை உயர்வு?சர்வதேச அளவில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், சில ஆண்டுகளாக நெருக்கடியில் இருந்தன. அமெரிக்கா பெரும்பாலும், சவுதி அரேபியா போன்ற நாடுகளிடம் தான், கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஆனால், சமீப ஆண்டுகளில், அமெரிக்காவிலேயே ஷேல் காஸ் எடுத்தல், கச்சா எண்ணெய் துரப்பணம் ஆகியவை வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளன. இதனால், வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துவிட்டது.
விளைவாக, கச்சா எண்ணெயின் விலை சரியத் துவங்கியது. இதனால், பெரும் பயனை அடைந்த நாடுகளில் ஒன்று இந்தியா.இன்னொரு பக்கம், சரியும் விலையை நிறுத்த வேண்டும் என, எண்ணெய் உற்பத்தி செய்யும், ‘ஒபெக்’ நாடுகள் கங்கணம் கட்டின. உற்பத்தியைக் குறைத்தன; புதிய துரப்பணப் பணிகளை நிறுத்தின.தற்போது, அமெரிக்காவில், எண்ணெய் உற்பத்தி, சற்று தேக்கமடைந்துள்ளது. அவர்கள் எப்படியிருந்தாலும், ஒபெக் நாடுகளை நாடி வர வேண்டிய தேவை இருக்கிறது. அவ்வளவு தான், ஒபெக் நாடுகள், கச்சா எண்ணெய் விலை உயரட்டும் என்று ஜாலியாக காத்துக் கொண்டிருக்கின்றன. தற்போது, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 74 டாலர்.
இதன் பாதிப்பையே, நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். காங்கிரசின் இரண்டாம் ஆட்சிக் காலத்தில், கச்சா எண்ணெயின் சந்தை விலையோடு, பெட்ரோலின் சில்லரை விலை இணைக்கப்பட்டது. பா.ஜ., தலைமையிலான அரசு வந்த முதல் ஆண்டில்,டீசலின் விலையையும் சந்தை விலையோடு இணைந்தது.இப்பொருட்களின் சில்லரை விலை நிர்ணயம், எண்ணெய் நிறுவனங்களிடமே விடப்பட்டது. அவர்கள் முதலில் மாதத்துக்கு ஒரு முறையும், பின்னர் மாதத்துக்கு இரண்டு முறையும் மாற்றியமைத்தனர். சென்ற ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பின், அனுதினமும் விலை மாற்றத்தைச் செய்வது என்ற முடிவுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வந்தன. அதுதான், இன்று எமனாக வந்து வாய்த்திருக்கிறது.
இதையெல்லாம், இன்று கொஞ்சம் வேறு மாதிரி திரும்பிப் பார்ப்போம். அன்றைய காலகட்டத்தில், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட அரசு மானியம் கொடுத்தது. அதனால், எக்கச்சக்க நஷ்டம். இன்றைக்கு வாருங்கள்...பணவீக்கம் உயர்வு, சர்வதேச கச்சா எண்ணெய் விலையுயர்வை, அப்படியே மக்களுக்கு வழங்கிவிட்டால், எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்காது அல்லவா என்று சொல்லப்பட்டது.எண்ணெய் நிறுவனங்களுக்கு, தற்போது எந்த நஷ்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. அவை, பெட்ரோல், டீசல் விற்பனையில், லிட்டருக்கு 3 – 3.10 ரூபாய் வரை லாபம் பார்க்கின்றன என, தெரிவிக்கிறது ஆய்வு அறிக்கை. வழக்கமாக, 2 – 2.50 ரூபாய் வரை மட்டுமே, லாபம் பார்த்தன இவை. அதற்கு முன், நஷ்டமே பார்த்துக்கொண்டிருந்தன. இத்தகைய உபரி லாபத்தை, இன்றைக்கு எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துக் கொள்ளலாமே?
இன்னொரு பெரிய வாய்ப்பு, வரி குறைப்பு. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளிவரும், பெட்ரோல், டீசலின் அடக்க விலை, 35 ரூபாய் மட்டுமே. மத்திய – மாநில அரசுகள் போடும், கலால் வரி தான் மிச்சமெல்லாம். நவம்பர், 2014 முதல், ஜனவரி, 2016 வரை, மத்திய அரசு ஒன்பது முறை கலால் வரியை உயர்த்தியது. இதே சமயத்தில் தான், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தது.அதனால், கிடைத்த லாபம் அனைத்தையும் மத்திய அரசும், மாநில அரசுகளும் எடுத்துகொண்டன. அவை மக்களுக்கு வழங்கப்படவில்லை. எல்லாம் நம்ம அரசு தானே, நமக்காகச் செய்வதற்குத் தானே நிதி திரட்டுகின்றனர் என்று பொறுமை காத்தனர்
மக்கள். நடுவில் ஒரே ஒரு முறை மட்டும், 2 ரூபாய் குறைக்கப்பட்டது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, சில்லரை விலை கடுமையாக உயரும் போது, கலால் வரியைக் குறைத்து கொஞ்சமேனும் நிம்மதி தரலாமே அரசாங்கம்? அப்படி ஒரு எண்ணம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.கலால் வரியில், 42 சதவீதம் மாநிலங்களுக்குச் செல்ல, மிச்சமுள்ள தொகை, மத்திய அரசுக்கு செல்கிறது. சென்ற முறை, மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது, வாட் வரியையும் குறைக்கச் சொல்லி மாநில அரசுகளை வலியுறுத்தியது. மஹாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம் தவிர, வேறு எந்த மாநிலமும், தங்களது வரியைக் குறைத்துக் கொள்ளவில்லை.
மத்திய அரசு செய்யவில்லை என்றாலும், மாநில அரசு தங்கள் வரி வருவாயைக் குறைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்று, மக்கள் விரும்புகின்றனர்.அறிகுறியே இல்லைபெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், அதனால் நேரடியாக, 10 ரூபாய் விலை குறையும் என்பது இன்னொரு வாதம். ஜி.எஸ்.டி., அமலான நாள் முதல் பேசப்படுகிறதே தவிர, இந்தத் திசையில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை.
அடிப்படையில், பெட்ரோல், டீசல் வரி வருவாய், மத்திய – மாநில அரசுகளின் அட்சய பாத்திரம். வளர்ச்சிப் பணிகளும், சமூகநலத் திட்டங்களும் மறைமுக வருவாயை நம்பியே செயல்படுகின்றன. ஏற்கனவே மக்கள் தலையில் கட்டப்பட்ட சுமையை, தங்கள் தோள் மீது மாற்றிக்கொள்ள இரண்டு அரசுகளும் தயக்கம் காட்டுகின்றன. இந்நிலையில், மக்களின் வலியைப் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பது அரசுகளுக்கு அழகல்ல.
-ஆர்.வெங்கடேஷ்,பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|