பதிவு செய்த நாள்
04 மே2018
00:49
புதுடில்லி,:‘சென்னை அருகே, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள மொபைல் போன் தொழிற்சாலைகளில், இந்தாண்டு, 8,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என, இந்திய மொபைல் போன் நிறுவனங்கள் கூட்டமைப்பான, ஐ.சி.ஏ., மதிப்பிட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதுாரில், 2014க்கு முன், மொபைல் போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில், ‘நோக்கியா, மோட்டரோலா’ உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. இவற்றில், 33 ஆயிரத்து, 200 பேர் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி பிரச்னை தொடர்பாக, நோக்கியா, 2014, நவ., 1ல் மூடப்பட்டது.
மூன்று நிறுவனங்கள்
இதையடுத்து, இந்நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் அளித்து வந்த நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும், 25 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்தனர்.தற்போது, மூன்று நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.அவற்றில், பிளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனம், அதிகபட்சமாக, 11 ஆயிரம் தொழிலாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. பாக்ஸ்கான், சல்காம்ப் ஆகிய நிறுவனங்கள், தலா, 7,000 பேருடன் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், ஐ.சி.ஏ., தலைவர் பங்கஜ் மொகிந்த்ரூ, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விபரம்:ஸ்ரீபெரும்புதுாரில், மீண்டும், லைட் ஆன், மோட்டரோலா நிறுவனங்கள் இயங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால், இந்தாண்டு இறுதிக்குள், மேலும், -8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த இரு தொழிற்சாலைகளை திறக்க தாமதம் ஆனாலும், மேற்குறிப்பிட்ட வேலைவாய்ப்புகள் கிடைக்கும்; அதற்கான முயற்சியும் நடக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, நோக்கியா வரி பிரச்னை தொடர்பாக, அதன் தாய் நிறுவனம் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், விரைவில் நோக்கியாவும் பணிகளை துவக்கும் எனத் தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|