பதிவு செய்த நாள்
07 மே2018
00:49
இந்தியாவின், வங்கி நிரந்தர சேமிப்புகளின் வளர்ச்சி விகிதம், கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துவிட்டது என்ற செய்தி, எல்லாரையும் கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டது. இது சொல்லும் செய்தி என்ன?
இந்திய பொதுத்துறை வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும், பெருநிறுவனங்கள் துவங்கி, ஓய்வூதியர்கள் வரை பலரும் நிரந்தர சேமிப்புகளை செய்து வருகின்றனர். இதை பாதுகாப்பான முதலீடு என்றே பலரும் கருதுகின்றனர். நிலையான வட்டி கிடைத்து வருவதாலேயே, ஓய்வூதியர்கள் நிரந்தர சேமிப்பை நம்பியுள்ளனர்.
இந்நிலையில், 2017 – -18 நிதியாண்டில், இப்படி செய்யப்பட்டு வரும் நிரந்தர சேமிப்புத் தொகை பெருமளவு வளரவில்லை. அதாவது, 2017 மார்ச் மாதத்தில், இந்திய பொதுத்துறை வங்கிகளில் இருந்த நிரந்தர சேமிப்பு, 107.58 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 15.8 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருந்தது.
ஆனால், மார்ச் 2018ல் இந்த வளர்ச்சி, 6.7 சதவீத அளவுக்கு மட்டுமே உயர்ந்து, மொத்த நிரந்தர சேமிப்புத் தொகை, 114.75 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இந்த வளர்ச்சி விகிதம், கடந்த, 50 ஆண்டுகளில் மிகவும் குறைவானது என்பதே வருத்தம் ஏற்படுத்தும் செய்தி.
காரணங்கள் பல
கடந்த, 2016ம் ஆண்டு நவம்பர் –டிசம்பர் மாதங்களில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, ஏராளமான தொகை வங்கிக்கு வந்து சேர்ந்தது. அதனால், அப்போது நிரந்தர சேமிப்புகளும் அதிகரித்தன. அதன் பின், பல்வேறு காரணங்களால், சேமிப்புத் தொகைகள் எடுக்கப்பட்டுவிட்டன.இந்நிலையில், சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டு, சேமிப்பு வளரவில்லை என்று சொல்வதில் அர்த்தமில்லை என்ற வாதம் வைக்கப்படுகிறது. இதைவிட முக்கியமான வாதம், வட்டி விகிதம்.
சேமிப்புகளுக்கு கிடைத்து வரும் வட்டி விகிதம் உயராத நிலையில், பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை வேறு முதலீடுகளுக்கு மாற்றி வருகின்றனர். குறிப்பாக, ‘மியூச்சுவல் பண்டு’ களுக்கு. கடந்த இரண்டு ஆண்டுகளில், பரஸ்பர சகாய நிதிகளில் சேர்ந்து வரும் தொகை ஆச்சரியத்தை அளிக்கிறது.கடந்த, 2018 மார்ச் மாதம் வரை, இந்திய மியூச்சுவல் பண்டுகளில் சேர்ந்துள்ள மொத்த தொகை, 23.05 லட்சம் கோடி ரூபாய். இதில், 4.75 லட்சம் கோடி ரூபாய், கடந்த ஓராண்டில் மட்டும் வந்து சேர்ந்துள்ளது.
இதேபோல், காப்பீடுகளில் செய்யப்படும் முதலீடுகளும் உயர்ந்துள்ளன. மார்ச் 2017ல், 1.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்த முதல் தவணை பாலிசி தொகை, மார்ச் 2018ல், 1.93 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மக்கள் ‘பாதுகாப்பை’ மறந்துவிட்டு, ‘ரிஸ்க்’ எடுக்கத் தயாராகிவிட்டனர் என்று எடுத்துக் கொள்வதா; பொருளாதார ரீதியான கல்வியும், புரிதலும் இந்திய மத்தியமர்கள் மத்தியில் பரவி வருவதன் சான்றாக எடுத்துக் கொள்வதா? அல்லது வேறு வழியே இல்லாமல், நிரந்தர சேமிப்புகள் ஈட்டித்தரும் வருவாயைவிட, மியூச்சுவல் பண்டுகளும், இன்சூரன்ஸ் முதலீடு களும் கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் முதலீடு செய்கின்றனரா என்ற குழப்பம் நிலவுகிறது.
கடந்த ஓராண்டில், வங்கித் துறையில் ஏற்பட்டு வரும் மோசடிகளும், வாராக்கடன் பிரச்னையும், மக்களை அச்சமடைய வைத்துள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நாளையே வங்கிகள் திவாலாகுமானால், முதலீட்டாளர்களின் சேமிப்புகளில் இருந்து எடுத்து வங்கிகளைக் காப்பாற்றும், ‘பெயில் -இன்’ நடைமுறை அமலுக்கு வருமோ என்ற அச்சமும் இதற்குப் பின்னே இருக்கலாம்.
வேறு கோணம்
இதே விஷயத்தை இன்னொரு முனையில் இருந்து பார்ப்போம். அதாவது, இந்திய குடும்பங்களில் நிதிச் சேமிப்புகள் எப்படி பங்கிடப்பட்டுள்ளன என்பதைக் கணக்கிட, ஆர்.பி.ஐ., ஒரு குழுவை அமைத்தது. அதன் அறிக்கையில் பல சுவாரசியங்கள் உள்ளன.அதில் முக்கியமானது, இந்திய குடும்பங்களின், 95 சதவீத சேமிப்புகள், வீடு, மனை, தங்கம், வெள்ளி ஆகியவற்றிலும் வாகனங்களிலும் முதலீடு செய்யப்படுகின்றன. நிதி முதலீடுகள் என்பது வெறும், 5 சதவீதம். இதில் தான் மியூச்சுவல் பண்டுகள், நிரந்தர சேமிப்புகள், காப்பீடு, தபால் ஆபீஸ் சேமிப்பு எல்லாம் அடங்கும்.
இதேபோல், இந்திய குடும்பங்கள் வைத்திருக்கும் சொத்துகள் பற்றிய கணக்கும் இருக்கிறது. மொத்த சொத்தில், 77 சதவீதம், வீடாகவோ, மனையாகவோ இருக்க, 11 சதவீதம் தங்கமாகவும், 7 சதவீதம் வாகனங்களாகவும் இருக்கின்றன. மிச்சமுள்ள, 5 சதவீத சொத்து தான் சேமிப்புப் பத்திரங்கள், நிதி முதலீடுகள் போன்றவை.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, மக்கள் தங்கள் சேமிப்புகளை பழைய, தெரிந்த, நம்பிக்கையான முதலீடுகளான அசையா சொத்துகளிலும், நகைகளிலும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர் என்பது தெளிவு.தங்க இறக்குமதி மதிப்பீடும் இதைத்தான் சுட்டுகிறது. 2016ம் ஆண்டில், 558 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட, 2017ம் ஆண்டிலோ, 888 டன் இறக்குமதி செய்யப்பட்டது. 2018ல் இன்னும், 10 சதவீதம் கூடுதலாக இறக்குமதி செய்யப்படலாம் என்பது இத்துறை நிபுணர்கள் கருத்து.
ஆக, மக்கள் சேமிக்காமல் இல்லை. சேமிக்கின்றனர்; அதை நிலமாகவும், கட்டடங்களாகவும் ஆபரணங்களாகவும் சேமிக்கின்றனர். நிரந்தர சேமிப்புகளை விட, இத்தகைய முதலீடுகளே இவர்களை ஈர்க்கின்றன. இங்கே தான் பிரச்னையே.
முட்டுக்கட்டை
வீடுகளும், மனைகளும், நகைகளும் வாங்குவதற்கு பெரிய நிதித்துறை அறிவு தேவையில்லை. ஆனால், நவீன நிதிக் கருவிகளான வங்கி சேமிப்புகள், மியூச்சுவல் பண்டுகள், பங்குகள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய ஓரளவுக்கு புரிதலும் முயற்சியும் வேண்டும்.ரியல் எஸ்டேட்டும், தங்கமும் தான், இந்திய வளர்ச்சிக்கான உண்மையான முட்டுக்கட்டைகள். இவற்றிலிருந்து மக்கள் விலகி, நவீன நிதிக் கருவிகளில் முதலீடு செய்யத் துவங்கினால், வங்கிகளின் கஜானாக்கள் நிரம்பும்.
அதன்மூலம், தொழில் துறைக்கு கடன் கொடுப்பது அதிகரிக்கும். தொழில் வளரும். வேலைவாய்ப்புகள் பெருகும். நிதிச் சுழற்சி அதிகரிக்கும்; சுபிட்சம் ஏற்படும்.ஆனால், இப்போது நடப்பதோ, இதற்கு நேர் எதிரான பாதுகாப்புவாதம். வங்கிச் சேமிப்பு விகிதம் குறைவது என்பது, ‘பாதுகாப்புவாத’த்தால் ஏற்படும் பாதிப்பு. முற்றிலும் மாற்றி யோசித்தாலன்றி, இந்தச் சிக்கலில் இருந்து வெளிவரமுடியாது.
ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|