பதிவு செய்த நாள்
08 மே2018
02:51
புதுடில்லி:‘இந்தியாவில், 2030ம் ஆண்டில், 24.50 கோடி திறன் வல்லுனர்கள் கூடுதலாக இருப்பர்’ என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த, ஆலோசனை நிறுவனமான கோர்ன் பெரி, உலகளவில், பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் திறன் வல்லுனர்கள் குறித்து, ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை:அமெரிக்கா, சீனா உட்பட, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும், 20 நாடுகளில், 2030ல், 8.52 கோடி திறன் வல்லுனர்களுக்கு பற்றாக்குறை இருக்கும்.ஆனால், இதே காலத்தில், இந்தியாவில் மட்டும், குறிப்பாக, நிதி மற்றும் வர்த்தகச் சேவைகளில், தேவையை விட, கூடுதலாக, 24 கோடி திறமையான ஊழியர்கள் இருப்பர்.இதற்கு, மத்திய அரசின், பல்வேறு திறன் பயிற்சி திட்டங்கள் துணை புரியும். வேலை செய்யும் திறன் உள்ளோரை அதிகமாக கொண்டுள்ள நாடாக, இந்தியா விளங்குகிறது. அதனால், இங்கு பணித் திறன் கொண்டோர் அதிகம் இருப்பர்.
அடுத்த, 12 ஆண்டுகளில், குறிப்பாக, நிதிச் சேவைகள் துறையில், 11 லட்சம்; தொழில்நுட்பம், ஊடகம், தொலைதொடர்பு துறையில், 13 லட்சம்; தயாரிப்பு துறையில், 24.4 லட்சம் திறன் வல்லுனர்கள் உபரியாக இருப்பர்.
இந்தியா தவிர, இதர நாடுகள் அனைத்திலும், 2030ல், தொழில்நுட்பம், ஊடகம், தொலைதொடர்பு துறையில், வல்லுனர்களுக்கு பற்றாக்குறை இருக்கும்.இந்தியாவில், தேவையை விட, திறன் வல்லுனர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், வேலைவாய்ப்பு மற்றும் வேலை உருவாக்கம் என்ற இரண்டு சவால்களை, மத்திய அரசு சந்திக்க நேரிடும்.இந்த சவால்களை எதிர்கொள்ள, மத்திய அரசு ஏற்கனவே, ‘திறன் இந்தியா’ உட்பட, பல்வேறு திறன் பயிற்சி மற்றும் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்களால் பெறும் பயன்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கத் தவறினால், வேலையில்லா திண்டாட்டப் பிரச்னையை இந்தியா எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.
திறமையான தொழிலாளர்களுக்கு ஏற்பட உள்ள தட்டுப்பாடு, பல துறைகளில் சர்வதேச மையங்களாக விளங்கும் நாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கும்.தற்போது, சர்வதேச நிதிச் சந்தையாக, பிரிட்டன் தலைநகர் லண்டன் விளங்குகிறது. தொழில்நுட்பத்தின் தலைமையிடமாக, அமெரிக்கா பெயரெடுத்துள்ளது. தயாரிப்பு சந்தை என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது.திறன் வல்லுனர்களின் பற்றாக்குறையால், இதே சிறப்புகளை இந்நாடுகள் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், வரும் ஆண்டுகளில், நிறுவனங்கள், அவற்றின் தலைமை செயல்பாடுகளை, அதிக அளவில் திறமையான வல்லுனர்கள் உள்ள இடங்களுக்கு மாற்றும் நிலை ஏற்படலாம்.இது, இந்தியாவின் சிறப்பான வளர்ச்சிக்கு சாதகமான அம்சமாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
20 நாடுகள்
இந்தியா, அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, நெதர்லாந்து, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஹாங்காங், இந்தோனேஷியா, ஜப்பான், மலேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய, 20 நாடுகளில், திறன் வல்லுனர்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|