பதிவு செய்த நாள்
14 மே2018
00:29
கச்சா எண்ணெய்
சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், தொடர்ந்து ஒன்பது மாதங்களாக உயர்ந்து வருகிறது.
தற்போது எண்ணெய் விலையானது, நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில், 1 பேரல், 71.88 டாலர் என்ற உச்சத்தை கண்டு, 70.52 டாலர் என்ற நிலையில், கடந்த வெள்ளியன்று வர்த்தகம் முடிவுற்றது.ஒபெக் மற்றும் நான் ஒபெக் உறுப்பு நாடுகள் மேற்கொண்ட உற்பத்தி குறைப்பு ஒப்பந்தம் காரணமாகவும், சந்தையில் எண்ணெய் இருப்பு விகிதம், கடந்த ஐந்து ஆண்டு சராசரியை விட குறைவாக இருக்கிறது.இதனால், தட்டுப்பாடு நிலவும் என்ற அச்சத்தில், எண்ணெய் விலை, கிடு கிடு என உயர ஆரம்பித்தது. அத்துடன், அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயர்வு, ஆசிய நாணயங்களின் மதிப்பில் சரிவை உண்டாக்கியது.
இக்காரணங்களால், உள்நாட்டிலும் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மேலும், ஈரான் நாட்டின் மீது, 2015ம் ஆண்டு, அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது. அதை தற்போது விலக்கியுள்ளது. இதன் காரணமாக, ஈரான் எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், அமெரிக்க எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, எண்ணெய் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படலாம்.
இருப்பினும், வரும், 22ம் தேதி, ஒபெக் மற்றும் நான் ஒபெக் உறுப்பு நாடுகளின் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வரும் காலங்களில் உற்பத்தி குறைப்பு குறித்து ஆலோசிக்க உள்ளனர்.இந்த சூழலில், டபுள்யு.டி.ஐ., எண்ணெய் விலை, 75 டாலர் வரை உயர வாய்ப்புள்ளது. எம்.சி.எக்ஸ்., பொருள் வணிகத்தில், 1 பேரல் தற்போது, 4,790 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது.
தங்கம் வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலைகள் கடந்த வாரம் குறைந்து, சரிவில் வியாபாரம் நடைபெற்றது.அமெரிக்க சந்தையில் வட்டி விகிதம் வரும் கூட்டத்தில் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பாலும், அமெரிக்கா- – ---ஈரான் இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கா, ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடையை விலக்கல், போன்ற காரணங்களால் நிலவி வந்த அசாதாரண சூழல் குறைந்தது காரணமாகவும், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் சிறிது சரிவு, கடந்த வாரம் ஏற்பட்டது.
அத்துடன் அமெரிக்க நாணய குறியீடான டாலர் இண்டெக்ஸ் மதிப்பு, பிறநாட்டு நாணயங்களுக்கு எதிராக அதிகரித்ததும் ஒரு காரணமாகும். மேலும், சிரியா நாட்டின் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற கண்ணோட்டமும் விலைக்கு பாதகமாக அமைந்தது.பேங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர், கடந்த வாரம் பேசுகையில், வரும் மாதங்களில் கணிசமான அளவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த, 2009ம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி பன்னாட்டு நிதியத்திடமிருந்து, 200 டன் தங்கத்தை கொள்முதல் செய்தது. தற்போது, கடந்த மார்ச் மாதத்தில், 2.5 டன் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.இதன் மூலம், மொத்த தங்கம் இருப்பு, மார்ச், 2018ல், 560.3 டன்னாக உயர்ந்தது. உலகின் அனைத்து மத்திய ரிசர்வ் வங்கிகளும் அன்னியச் செலாவணிக்காக தங்க இருப்பை வைத்துக்கொள்கின்றன. இதில், அமெரிக்கா, 8,133.5 டன்னுடன் முதலிடத்திலும்; ஜெர்மனி, 3,372.2 டன்னுடன் இரண்டாவது இடத்திலும்; இந்தியா, 560.3 டன்னுடன், 11வது இடத்திலும் உள்ளன.
செம்பு
சில வாரங்களாக சரிவில் இருந்து வந்த செம்பு விலை, கடந்த வாரம் சிறிது உயர்ந்து வர்த்தகமாகியது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு மற்றும் அலுமினியத்துக்கு, அமெரிக்கா அதிகமான இறக்குமதி வரி விதித்ததன் காரணமாக, கடந்த சில வாரங்களாக விலையில் சரிவு ஏற்பட்டது. இருப்பினும், அமெரிக்க இறக்குமதி குறையாமல், சீனாவின் ஏற்றுமதி அதிகரித்தது. இதன் விளைவாக, விலையேற்றம் கண்டது. மேலும், சீனாவின் தொழில் துறை தேவை, செம்பு விலைக்கு சாதகமாக அமைந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|