பதிவு செய்த நாள்
15 மே2018
02:49
புதுடில்லி:'நாட்டின் தொழில் துறை உற்பத்தி சற்று மேம்பட்டுள்ளதால், இந்தாண்டு ஜன., - மார்ச் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.7 சதவீதமாக வளர்ச்சி கண்டிருக்கும்' என, ஜப்பானைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறுவனமான, 'நோமுரா' தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தியாவில், முதலீடுகள் பெருகி வருகின்றன. மக்களின் தேவையும், நுகர்வும், அதிகரித்துள்ளது. இந்த முக்கிய அம்சங்கள் காரணமாக, இந்திய பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருவது தெரிகிறது.குறிப்பாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறுகிய காலத்திற்கு வளர்ச்சி சாத்தியம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, இறுக்கமான நிதிச்சூழல் போன்றவற்றால், வளர்ச்சி வேகம் சற்று குறையவும் வாய்ப்பு உள்ளது.தொழில்: இந்தாண்டு, ஜன., - மார்ச் வரையிலான முதல் காலாண்டில், தொழில் துறை உற்பத்தி, சராசரி வளர்ச்சியை கண்டுள்ளது. அதனால், இத்துறை சார்ந்த நிறுவனங்களின், ஒட்டுமொத்த தொழில் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.நடப்பாண்டின், முதல் காலாண்டில், தொழில் துறையின் சராசரி வளர்ச்சி, 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது, முந்தைய, 2017, அக்., - டிசம்பர் காலாண்டில், 5.9 சதவீதமாக இருந்தது.
மார்ச்சில், தயாரிப்பு துறை வளர்ச்சி குறைந்துள்ள போதிலும், காலாண்டு அடிப்படையில், தொழில் துறை உற்பத்தி, 0.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக, முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.7 சதவீதமாக உயர்ந்திருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சி, கடந்த ஆண்டு, அக்., - டிசம்பர் காலாண்டில், 7.2 சதவீதமாக இருந்தது. ஆக, கடந்த ஆண்டின், நான்காவது காலாண்டை விட, நடப்பாண்டின், முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 0.5 சதவீதம் அதிகரித்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|