பதிவு செய்த நாள்
16 மே2018
00:49
நியூயார்க்:‘இந்தியாவில், மரபு சாரா எரிசக்தி துறையில், அடுத்த, நான்கு ஆண்டுகளில், மூன்று லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என, ஐ.நா., சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள, ‘பசுமை குடில்கள் சார்ந்த, சர்வதேச வேலைவாய்ப்பு மற்றும் சமூக பார்வை’ என்ற ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியா, 2022ல், மரபு சாரா எரிசக்தி மூலம், 175 கிகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கை எட்ட, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்ற, மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் தேவைப்படுவர்.கீழ் தளம் மற்றும் கூரைகளில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி சாதனங்கள் மற்றும் காற்றாலை திட்டங்களுக்கான வல்லுனர்களின் தேவையும் அதிகம் இருக்கும்.
எனினும், இந்த தேவைப்பாடு, சூரிய மின்சக்தி உற்பத்திக்கான மூலக்கூறு சாதனங்களை எந்த அளவிற்கு தயாரிக்க முடியும் என்பதை பொறுத்து உள்ளது. இத்தகைய சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி திறன் உயர்த்தப்பட வேண்டும்.அத்துடன், மரபு சாரா எரிசக்தி துறையில் பணிபுரிவதற்கான தொழிற் பயிற்சி திட்டங்களை அமல்படுத்த வேண்டும். நடைமுறையில் உள்ள, சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி ஆகியவற்றுக்கான பயிற்சி திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசு, 2012 – -17ம் ஐந்தாண்டு திட்டத்தில், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அதன்படி, தேசிய அளவில் பசுமை எரிசக்திக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டன.அவற்றின் அடிப்படையில், 2015ல், பசுமைக்குடில் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கான திறன் பயிற்சி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.இக்கவுன்சில் வழிகாட்டுதல்படி, நீர் மேலாண்மை திட்ட உதவியாளர் முதல், சூரிய மின்சக்தி திட்ட மேலாளர் வரையிலான வேலைகளுக்கு, 26 புதிய தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சி கல்வி திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியா, மரபுசாரா எரிசக்தி துறையின் பங்களிப்பை அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும், மின் உற்பத்தியில், 80 சதவீதத்தை, அதிக மாசு உண்டாக்கும், நிலக்கரி, டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களை சார்ந்து உள்ளது.
இத்தகைய எரிபொருள்களில் இருந்து, சூரிய மின்சக்தி, காற்றாலை போன்ற, பசுமை குடில் சார்ந்த பொருளாதாரத்தில் மாறும்போது, பல்வேறு துறைகளில், 60 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது.குறிப்பாக, பெட்ரோலியம் உற்பத்தி மற்றும் சுத்தி கரிப்பு துறைகளில், 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் பணி இழப்பிற்கு உள்ளாவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலிடம்
மரபு சாரா எரிசக்தி மூலம், மின்சார கார் முதல் பசுமை கட்டடங்கள் வரை, பல்வேறு திட்டங்களில், அரசு மற்றும் தனியார் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த முதலீடுகள் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியதில், ஆசிய – பசுபிக் பிராந்திய நாடுகள் முதலிடத்தில் உள்ளன. இங்கு, 1.40 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், முறையே, 30 லட்சம் மற்றும் 20 லட்சம் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|