பதிவு செய்த நாள்
30 மே2018
00:33
தொழில் செய்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை, போதுமான அளவுக்கு, தமிழக அரசு செய்து தராததால் பல நிறுவனங்கள், ஆந்திராவில் தஞ்சம் அடைய துவங்கிஉள்ளன.
தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, ஓசூர் ஆகிய நகரங்கள், உற்பத்தி மண்டலங்களாக திகழ்கின்றன. இந்த மண்டலங்களில், 12 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், இந்தப் பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை, தமிழக அரசு செய்து கொடுப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுகிறது. குறிப்பாக, தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் நிலங்களை பெற்று தர, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது.
இது குறித்து, சிறு, குறு தொழில் நிறுவன சங்கங்கள் கூறியதாவது: தமிழகத்தில், அதிகளவில் இருப்பது சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தான். ஆனால், அவற்றிற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் ஏற்படுத்தித் தரப்படவில்லை. தமிழக அரசு, இன்ஜினியரிங் துறையில் போதிய கவனம் செலுத்தவில்லை. அவற்றுக்குத் தேவைப்படும் நில வசதியை, தமிழக அரசு வழங்கவில்லை.
உதாரணமாக, அம்பத்துார் தொழிற்பேட்டையை சுற்றி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவை அனைத்தும், குடியிருப்பு பகுதிகளுடன் இணைந்து உள்ளதால், அவற்றால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக, அங்கு செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலை உட்பட, பல்வேறு இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்கள், ஆந்திராவில் தஞ்சமடைய திட்டமிட்டு, அங்கு நிலம் வாங்கியுள்ளன.
ஆந்திர அரசு, குறைந்த விலையில் நிலம் ஒதுக்கி, தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததால், அவர்கள் அங்கு செல்ல துவங்கி உள்ளனர். எனவே, தமிழக அரசு, தேவையான தொழில் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள், வேறு மாநிலத்துக்கு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|