பதிவு செய்த நாள்
15 ஜூன்2018
00:51
புதுடில்லி:கடந்த,மே மாதம், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 4.43 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, ஏப்ரலில், 3.18 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மே மாதம், 2.26 சதவீதமாகவும் இருந்தது.கச்சா எண்ணெய் விலையேற்றத்தால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து உள்ளது. இதன் தாக்கத்தால், சரக்கு போக்குவரத்து செலவு உயர்ந்து, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை, ஏற்றம் கண்டுள்ளது.
உருளைகிழங்கு
மே மாதம், காய்கறிகள்பணவீக்கம், 2.51 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஏப்ரலில், 0.89 சதவீதம் பின்னடைவைக் கண்டிருந்தது.இதே காலத்தில், எரிபொருள் மற்றும் மின்சார துறையின் பணவீக்கம், 7.85 சதவீதத்தில் இருந்து, 11.22 சதவீதமாக அதிகரித்துள்ளது.உருளைக் கிழங்கு விலை, 67.94 சதவீதத்தில் இருந்து, 81.93 சதவீதம் என்ற உச்சத்தை எட்டியுள்ளது.
பழங்கள் பணவீக்கம், இரட்டை இலக்க உயர்வைக் கண்டு,15.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.அதேசமயம், பருப்பு வகைகளில் பணவாட்டம்ஏற்பட்டுள்ளது. மே மாதம், பருப்பு வகைகளின் பணவாட்டம், 21.13 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.மார்ச் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம், மறுமதிப்பீடு செய்யப்பட்டு, 2.47 சதவீதத்தில் இருந்து, 2.74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என, மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இரு தினங்களுக்கு முன், மே மாதத்திற்கான சில்லரை விலை பணவீக்க புள்ளி விபரம் வெளியிடப்பட்டது. அதில், நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, சில்லரை பணவீக்கம், 4.87 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பழங்கள், காய்கறிகள், எரிபொருள் ஆகியவற்றின் விலையேற்றத்தால், சில்லரை பணவீக்கம் உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி, சில்லரை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது. கடந்த நான்கு மாதங்களாக பணவீக்கம் உயர்ந்துள்ளதை அடுத்து, அதன் இலக்கை, ரிசர்வ் வங்கி, 0.30 சதவீதம் உயர்த்தியுள்ளது.அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, கடந்த, 6ம் தேதி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தி, 6.25 சதவீதமாக நிர்ணயித்தது.
நான்கு ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக, இந்த வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.பணவீக்கம் மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, ஆக., 1ல் நடைபெற உள்ள, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி மேலும் உயர்த்தப்படலாம் என, நிதிச் சேவை துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெய்
மொத்த விலை பணவீக்கம், 14 மாதங்களில் இல்லாத வகையில், 4.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த, 2017, மார்ச்சில், மொத்த விலை பணவீக்கம், அதிகபட்சமாக, 5.11 சதவீதமாக காணப்பட்டது. அது முதல், இறக்கம் கண்டு வந்த நிலையில், கச்சா எண்ணெய் விலையேற்றத்தால், மொத்த விலை பணவீக்கம் உயர்ந்து வருகிறது.கடந்த ஏப்ரலில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 66 டாலராக இருந்தது. இது, தற்போது, 74 டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|