பதிவு செய்த நாள்
23 ஜூன்2018
00:25
ஈரோடு: பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், மின்னணு முறையில் பண பரிவர்த்தனை துவங்கியது முதல், 75.12 கோடி ரூபாய் மதிப்பில், மஞ்சள் ஏலம் நடந்துள்ளது.இதுபற்றி, மாவட்ட விற்பனை குழு செயலர் மற்றும் துணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது: பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கடந்தாண்டு மார்ச், 8 முதல், மின்னணு பரிவர்த்தனை மூலம், மஞ்சள் ஏலத்துக்கான தொகை, விவசாயி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம், பிடித்தம் ஏதும் இன்றி, முழுமையான தொகை, விவசாயிக்கு சென்று அடைகிறது.நேற்று முன்தினம் வரை, 5,341 விவசாயிகளுக்கு, ஒரு லட்சத்து, 5,600 குவிண்டால் மஞ்சளுக்கு, 75 கோடியே, 11 லட்சத்து, 78 ஆயிரத்து, 858 ரூபாய்க்கு மின்னணு பரிவர்த்தனை மூலம், பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.தேசிய வேளாண் சந்தை எனப்படும், ‘இ–நாம்’, இங்கு அமல்படுத்தப்பட்டு, தேசிய அளவிலான வியாபாரிகள், இங்கு மஞ்சளை ஏலம் எடுப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் முழு அளவில் வங்கி கணக்கு விபரம், ‘ஆதார்’ அட்டை எண் போன்றவை பெறப்பட்டு, இப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுபோன்று, இம்மாவட்டத்தில் உள்ள, 18 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலும், மின்னணு பரிவர்த்தனையில், பணம் பரிமாற்றத்தை செயல்படுத்த தேவையான பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|