பதிவு செய்த நாள்
23 ஜூன்2018
00:28
புதுடில்லி: ‘‘பிற நாடுகளுடன் வர்த்தகம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும், சுமுக தீர்வு காணப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
டில்லியில், ஐந்தாவது, இந்திய சர்வதேச குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள், ‘ஸ்டார்ட் அப்’ கண்காட்சியை, சுரேஷ் பிரபு துவக்கி வைத்து பேசியதாவது:பெரிய நிறுவனங்களை போலன்றி, குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், சமமான வளத்தை ஏற்படுத்தி வருகின்றன.தொழில்மயமாக்கத்திலும், புதுமையான கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதிலும், ஏற்றுமதியிலும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.அதனால், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவது முக்கியம். அதற்காகவே, மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை, மேலும் ஏராளமான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, புதிய இந்தியாவை வழி நடத்தக் கூடியதாக உருவெடுக்கும்.
நட்பு நாடுகள் : உலகின் பல்வேறு நாடுகளுடன் நமக்கு உள்ள வர்த்தக உரசல்களுக்கு தீர்வு காண முயற்சி நடக்கிறது. அனைத்து நாடுகளுடன் நட்புறவை தொடரவே நாம் விரும்புகிறோம்.அது, தெற்காசியாவாக இருந்தாலும், ஜப்பான் உட்பட, துாரக் கிழக்காசிய நாடுகளாக இருந்தாலும், அவை, நமக்கு நல்லதொரு நட்பு நாடுகள் தான். அதுபோல, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளிடத்திலும், இந்தியா நட்பைக் கடைபிடிக்கிறது.இதை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகளின் வர்த்தக அமைச்சர்களை, தனிப்பட்ட முறையில் சந்தித்த போதும் நான் தெளிவுபடுத்தியுள்ளேன்.எந்த நாட்டிற்கும் நாம் எதிரானவர்கள் அல்ல. அனைத்து நாடுகளுடன் இணக்கமான நல்லுறவை பேணவே, இந்தியா விரும்புகிறது.இங்கு கூடியிருக்கும் பன்னாட்டு வர்த்தகப் பிரதிநிதிகள் அனைவருக்கும், நட்புக் கரம் நீட்டுகிறேன். உங்கள் உத்திகளுடன், எங்களோடு இணைந்து செயல்பட வாருங்கள். இந்த உலகை மேம்படுத்தி, பரஸ்பரம் பயன் பெறுவோம்.எந்த வர்த்தகத்திலும் பயன் பெற வேண்டும் என்பது தான், இந்தியாவின் வெளிப்படையான நிலைப்பாடு; அது, பிற நாட்டின் பாதிப்பில் கிடைக்கக் கூடாது என்பதில், நாம் உறுதியாக உள்ளோம்.நாமும், நம்முடன் வர்த்தகம் புரியும் நாடும் பயன் பெற வேண்டும். அதற்கு, நாம் இணைந்து புதிய வர்த்தக நெறிகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கனடா, பிரேசில்அமெரிக்கா, உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதிக்கு, முறையே, 25 மற்றும்,10 சதவீதம் வரி விதித்துள்ளது.இந்தியா, ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கே, உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்களை, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதால், வரி விலக்கு கோரியது. அதை நிராகரித்த டிரம்ப் அரசு, பிரேசில், கனடாவுக்கு மட்டும், வரி விலக்கு அளித்துள்ளது.இதையடுத்து, நேற்று முன்தினம், மத்திய அரசு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், பாதாம், ஆப்பிள், வால்நட் உள்ளிட்ட, 29 பொருட்களுக்கு, 50 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. இதை நியாயப்படுத்தும்வகையில், சுரேஷ் பிரபு பேசியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|