பதிவு செய்த நாள்
24 ஜூன்2018
01:09
புதுடில்லி: இந்தியாவில், விரைவில் துவக்கவுள்ள பணப் பரிவர்த்தனை சேவை தொடர்பான விதிமுறைகளை மேம்படுத்துவதில், ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை: மொபைல் போனில் தகவல்கள், படங்கள் ஆகிய வற்றை பகிர்ந்து கொள்ளும் வசதியை, நிறுவனம் வழங்கி வருகிறது. இதையடுத்து, விரைவில் பணப் பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக, வங்கிகள் உடன், ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக சோதனை அடிப்படையில், பணப் பரிவர்த்தனை சேவை நடைபெற்று வருகிறது. இச்சேவையில், தகவல் திருட்டு, பண மோசடி, தனி நபர் விபரங்கள் கசிவு போன்ற இடர்ப்பாடுகள் இல்லாமல், பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைக்கு, கொள்கைகள், விதிமுறைகள் ஆகியவை உருவாக்கப் பட்டுள்ளன. தனி நபர் தகவல் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால், பணப் பரிவர்த்தனையில் பரிமாறும், ‘டெபிட்’ கார்டின் இறுதி ஆறு இலக்கங்களை எந்த காலத்திலும் சேமிப்பதில்லை என, வாட்ஸ் ஆப் கொள்கை முடிவு எடுத்து உள்ளது. அதுபோல, யு.பி.ஐ., சேவையிலும், ‘பின்’ எனப்படும் சங்கேத எண், சேகரிக்கப்பட மாட்டாது. அதேசமயம், பணப் பரிவர்த்தனையில், தாய் நிறுவனமான, ‘பேஸ்புக்’ வசம் உள்ள கட்டமைப்பு வசதிகளை, வாட்ஸ் ஆப் பயன்படுத்திக் கொள்ளும். பேஸ்புக் நிறுவனமும், பணப் பரிவர்த்தனை தகவல்களை, வர்த்தக நோக்கில் பயன்படுத்தாது. சேவை நிறுவனம் என்ற வகையில், வாட்ஸ் ஆப் பயனரின், யு.பி.ஐ., சார்ந்த பணப் பரிமாற்ற செயல்களுக்கு மட்டுமே பேஸ்புக் உதவும்.பணப் பரிவர்த்தனை தொடர்பான கொள்கைகள், விதிமுறைகள் ஆகிய வற்றை மேம்படுத்தும் பணி முடிந்ததும், வர்த்தக ரீதியிலான சேவையை வாட்ஸ் ஆப் துவக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும்... : பணப் பரிவர்த்தனை சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும், அவற்றின் தகவல் தொகுப்பை, இந்தியாவில் உள்ள, ‘சர்வர்’களில் மட்டுமே சேமிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையை, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் பின்பற்றுகிறதா எனக் கண்காணிக்குமாறு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|