பதிவு செய்த நாள்
24 ஜூன்2018
01:10
புதுடில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த, ‘கூகுள்’ நிறுவனம், ‘அமேசான், வால்மார்ட்’ நிறுவனங்களை பின்பற்றி, இந்தியாவில் முதன் முதலாக, மின்னணு வணிகத்தில் களமிறங்க உள்ளது.வலைதள தேடல் பொறி நிறுவனமான கூகுள், இயந்திர மனிதன், ஆளில்லாமல் பறக்கும், ‘டிரோன்’, ஓட்டுனரின்றி செல்லும் கார் உள்ளிட்ட, பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. ஆனால், வலைதளங்களில் பொருட்களை விற்பனை செய்யும், மின்னணு வணிகத்தில் மட்டும் இறங்கவில்லை. இந்நிலையில், இந்தியாவில், ‘பிளிப்கார்ட்’ நிறுவனம் மூலம், மின் வணிகத்தில் நுழைய முயன்றது. அதற்குள், அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் முந்திக் கொண்டு, பிளிப்கார்ட்டின், 77 சதவீத பங்குகளை, 1.06 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதாக அறிவித்தது.
கைவிட்டது : அதன் பின்னரும், பிளிப்கார்ட் நிறுவனத்தில், 13 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய, கூகுள் நிறுவனம் முன்வந்தது. ஆனால், பிளிப்கார்ட் பங்குகளை, மிக அதிக மதிப்பில் வாங்கியதாக, வால்மார்ட் பங்கு முதலீட்டாளர்கள் புலம்புவதால், முதலீடு செய்யும் திட்டத்தை, கூகுள் கைவிட்டது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், சீனாவின், ஜே.டி., டாட் காம் என்ற மின்னணு வணிக நிறுவனத்தில், 55 கோடி டாலர் முதலீடு செய்வதாக அறிவித்த கூகுள், இந்தியாவில் மின்னணு வணிகத்தில் நேரடியாக களமிறங்க உள்ளது.
இது குறித்து, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கூகுள் நிறுவனம், சர்வதேச அளவில் மின்னணு வணிகத்தில் களமிறங்க உள்ளது. அதற்கு, முதன் முதலாக, பிரமாண்ட சந்தை வாய்ப்புள்ள இந்தியாவை தேர்வு செய்துள்ளது. தீபாவளி நெருக்கத்தில், புதிய நிறுவனம் உதயமாகும் என, தெரிகிறது.
முன்னேற்பாடு : சில ஆண்டுகளாகவே, மின்னணு வணிகத்தில் இறங்குவதற்கான முன்னேற்பாடுகளை கூகுள் செய்து வந்தது. குறிப்பாக, விற்பனையாளர்களை அடையாளம் காண, 2,000க்கும் அதிகமான பயிற்சிப் பட்டறைகளில் இணைந்து செயல்பட்டது. இதன் விளைவாக, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்களை, நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது.மேலும், வர்த்தக அமைப்புகளின், மின்னணு விற்பனை திட்டங்களில் பங்கு கொண்டது. அத்துடன், மின்னணு வர்த்தகத்தில், பணப் பரிவர்த்தனை களை சுலபமாக மேற் கொள்ள, ‘தேஸ்’ என்ற, ‘ஆப்’பையும் அறிமுகப்படுத்தியது.
வலுவான கட்டமைப்பு : ‘டாடா டிரஸ்ட்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘சாத்தி’ திட்டத்தின் கீழ், கிராமப்புற பெண்களுக்கு இணையத்தை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்து வருகிறது. இதில், 48 ஆயிரம் பெண்கள் பயன் பெற்றுள்ளனர். இத்துடன், 1.80 கோடி, ‘ஜி – மெயில்’ சந்தாதாரர்கள் உள்ளிட்ட வலுவான கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. அதனால், மின்னணு வணிகத்தில் கூகுள் இறங்கினால், சுலபமாக வெற்றி பெறும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
போட்டி சுலபம் : இந்திய மின்னணு வணிகத்தின் சந்தை மதிப்பு, 2.57 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, 2020ல், 6 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சந்தையில், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் போட்டியை, கூகுள் சுலபமாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதாக, சந்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|