பதிவு செய்த நாள்
25 ஜூன்2018
06:23
கடனுக்கான வட்டி விகிதம் உயரத்துவங்கிய சூழலில், அதிகரிக்கும் மாதத்தவணையை சமாளிக்கும் வழிகளை ஆராய்வது அவசியமாகிறது.
வட்டி விகித சூழல் மாறத் துவங்கியுள்ளது. வீட்டுக்கடன், வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயரத்துவங்கியுள்ளது. அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை, 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்குப்பிறகு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே ஒரு சில வங்கிகள் கடனுக்கான எம்.சி.எல்.ஆர்., வட்டி விகிதத்தை உயர்த்தின. ஒரு சில வங்கிகள் பேஸ் ரேட் விகிதத்தையும் உயர்த்தியுள்ளன. இனி மேலும் பல வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்புள்ளது.
பணவீக்கம் போன்ற காரணங்களினால் ரிசர்வ் வங்கி வரும் மாதங்களில் மேலும் 25 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். உள்நாட்டு மற்றும் சர்வதேச போக்குகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வட்டி விகிதம் ஓரளவு உயர வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
செலவு அதிகரிப்பு :
வட்டி விகிதம் உயரும் போக்கு காரணமாக கடனுக்கான மாதத்தவணை அதிகரிப்பதை எதிர்கொள்ள வாடிக்கையாளர்கள் தயாராக இருக்க வேண்டும். இதனால் செலவும் அதிகரிக்கும் என்பதால், இதை சமாளிப்பதற்கான வழிகளை பின்பற்றுவது நல்லது. வங்கிகள் நிலையான மற்றும் மாறும் வட்டி விகிதத்தில்கடன் வழங்குகின்றன. பொதுவாக வட்டி விகிதம் உயரும் சூழலில் மாறும் வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி விகிதத்திற்கு மாறலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், எம்.சி.எல்.ஆர்., விகிதத்தில் கடன் பெற்றவர்கள் உடனடியாக கடன் விகிதத்தை மாற்ற முயற்சிக்க வேண்டாம் என, வல்லுனர்கள் சொல்கின்றனர்.
தற்போதைய நிலையில், நிலையான வட்டி விகிதத்தை விட மாறும் வட்டி விகிதம் குறைவாகவே உள்ளது. மேலும், எம்.சி.எல்.ஆர்., விகிதத்தில், கடன் விகிதம் மாறுவதற்கான ரிசெட் ஷரத்து அடிப்படையிலேயே வட்டி விகிதம் மாறும். இதற்கான காலம் ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டாக இருக்கலாம். அதே நேரத்தில் புதிதாக கடன் பெறுபவர்களும் மாறும் வட்டி விகிதத்தையே தேர்வு செய்யலாம்.
கடன் சுமையை குறைக்க வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்தும் மாதத்தவணையை அதிகரிக்க முன்வரலாம். பொதுவாக வட்டி விகிதம் உயரும் போது வங்கிகள், மாதத்தவணையை உயர்த்தாமல் அதை செலுத்துவதற்கான காலத்தை உயர்த்துகின்றன.
வட்டியில் சேமிக்கலாம் :
இதனால் கடனை கூடுதல் காலம் செலுத்த வேண்டியிருக்கும். வட்டி விகிதம் மேலும் உயரும் போது கடனுக்கான காலமும் உயரும். இதைவிட, வாடிக்கையாளர்கள் மாதத்தவணையை அதிகரித்து கடனுக்கான காலத்தை அதிகரிக்காமல் வைத்திருப்பதே ஏற்றதாக அமையும். இதன் மூலம் வட்டியில் சேமிக்கலாம்.தற்போதைய வங்கியை விட கடனை குறைந்த வட்டி விகிதம் அளிக்கும் வங்கிக்கு மாற்றும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம். இதற்காக, வீட்டுக்கடன் சந்தையில் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.
ஆனால், வட்டி விகிதத்தை மட்டும் ஒப்பிடமால், பிற பொருந்தக்கூடிய கட்டணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கடனுக்கான அசலில் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்த வாய்ப்பிருக்கிறதா என்றும் பரிசீலிக்கலாம். கணிசமான தொகையை முன்கூட்டியே செலுத்தினால் அதற்கேற்ப அசல் குறைந்து வட்டி சுமையும் குறையும். குறைந்த பலன் தரக்கூடிய வைப்பு நிதிகளில் முதலீடு செய்வதைவிட கடனுக்கான ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவது பொருத்தமாக இருக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|