பதிவு செய்த நாள்
25 ஜூன்2018
06:31
பங்குகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் தொடர்ச்சியான உறவு முறைகள் உண்டு. அந்த உறவு முறைகள் விருப்பு, வெறுப்பு சார்ந்து வகைப்படுத்தலாம்.சில பங்குகள் அனைவராலும் தொடர்ந்து விரும்பி கையிருப்பில் இருப்பவை. அவற்றை விற்கவே கூடாது என்று அனைவரும் எண்ணக்கூடும். ‘புளூசிப் பங்கு’கள் என்று அவற்றை சந்தை வகைப்படுத்தி கொண்டாடும்.
ஆனாலும், அவை சந்தை யில் தினசரி வர்த்தகம் செய்வோர் வசம் பெரும்பாலும் இருக்காது. விலை ஏறியவுடன், அவற்றை விற்கும் போக்கு பெரும்பான்மை முதலீட்டாளர்களிடம் உண்டு. விலை சற்றே உயரும் போது, மிக சிறந்த பங்குகளையும் விற்கும் போக்கு அனைத்து வர்த்தகர்களிடத்திலும் தென்படும். முக்கியமாக, தின வர்த்தகர்களிடம் இதை நாம் பெரிதும் காணலாம்.
பெரிதும் விரும்பும் பங்குகளை விற்று விட்டு, பெரும்பான்மையான முதலீட்டாளர்கள், எந்த வகை பங்குகளை கையிருப்பில் வைத்திருக்கின்றனர்? பெரும்பான்மையான பங்கு முதலீட்டாளர்கள், விற்க முடியாத பங்குகளையே தொடர்ந்து கையிருப்பில் வைத்திருப்பர். அவசரம் சார்ந்து இந்த முதலீட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதால், விரும்பி வாங்கிய பங்குகளிலும் ஒரு காலகட்டத்தில் வெறுப்பு ஏற்படும் சூழல் வரலாம்.நிறுவன மாற்றங்கள், நம் எதிர்பார்ப்புகளில் இருந்து மாறுபடும் சூழலில், ஏமாற்றம் ஏற்படக்கூடும். அப்படி ஏமாற்றம் ஏற்பட்டும் கூட, விலைச்சரிவு கண்டதால், நாம் அவற்றை விற்காத சூழல் அமையக்கூடும்.
நஷ்டம் ஏற்பட்டால், அந்த பங்குகள் மீண்டும் லாபத்திற்கு வரும் வரை காத்திருப்பதை மட்டுமே பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் விரும்புவர்.ஆனால், பல பங்குகள் அந்த விலையை மீண்டும் காண்பதே இல்லை. அடிப்படை இன்றி, விலை உயர்வு காணும் பெரும்பான்மை பங்குகள் இந்த வகையை சேரும். அவற்றை காத்து, காலம் கடப்பது, இழப்பை எந்த வகையிலும் சரி செய்யாது.இழப்பை ஈடு செய்ய, முதலீட்டு தவறுகளை கையாளும் துணிவும், நேர்மையும் வேண்டும். கடந்த ஓராண்டில், பல பங்குகள் எட்டிய உயர் விலையில் இருந்து சரிவைக் கண்டுள்ளன. அந்த சரிவில் இருந்து மீள, இன்னும் பல்லாண்டு ஆகும்.
பல பங்கு மதிப்பீடுகள், விலையில்லா நிலைக்கு கூட போகலாம். அதுவரை காத்திருந்து, நிரந்தர நஷ்டம் அடையாமல், இதோடு நஷ்டத்தை நிறுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் காட்டுவது இப்போதைய உடனடி தேவை.அடிப்படைத் தன்மை கொண்ட பங்குகள் சில மட்டும், இழந்த மதிப்பை மீட்டு, மீண்டும் உயரக் கூடியவை. அவற்றை தெளிவாக அடையாளம் காண்பது அவசியம்.அவை அல்லாத பிற பங்குகளை மாற்றி அமைக்க வேண்டியதை, ஒவ்வொரு முதலீட்டாளரும் ஏற்க வேண்டும். நஷ்டம் அடைந்ததை பற்றி கவலைப்படாமல், அடுத்து தலையெடுக்கும் முதலீட்டு மாற்றங்கள், லாபம் ஏற்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும்.இப்போது, புதிதாக அமையும் பங்கு உறவுகள், நெடுங்காலம் நிலைக்கும் வண்ணம் தேர்வுகளை அமைத்துக் கொள்வது மிக முக்கியம்.
நஷ்டம் அடையும் சூழலில், ஆய்வு நேரத்தை அதிகம் செலவிட்டு, நிதானமான முடிவுகள் எடுக்க பழக வேண்டும். அந்த முடிவுகள், தொலைநோக்கு பார்வை கொண்டு எடுப்பது மிக முக்கியம்.இனி வரும் மாதங்களில் சந்தை என்ன ஆகும் என்பதை கடந்து, நம் கையிருப்பு பங்குகள் என்ன ஆகுமென்றும், அவற்றில் நாம் என்ன செய்ய வேண்டுமென்ற மனத்தெளிவு உடனடியாக ஏற்பட வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|