பதிவு செய்த நாள்
12 ஜூலை2018
00:22
புதுடில்லி:கைத்தறி துணி வகைகள், கைவினை பொருட்கள், ‘சானிட்டரி நாப்கின்’ உள்ளிட்டவற்றுக்கான, ஜி.எஸ்.டி.,யை குறைப்பது குறித்து, அடுத்த வாரம் நடைபெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என, தெரிகிறது.
டில்லியில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 28வது கூட்டம், அதன் தலைவர் அருண் ஜெட்லி தலைமையில், வரும், 21ம் தேதி நடைபெற உள்ளது.இதில், வரி வருவாயில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாத பொருட்களின், ஜி.எஸ்.டி., குறைக்கப்படும் என, தெரிகிறது.
கோரிக்கை
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரும்பாலான கைத்தறி ஜவுளி வகைகள், கைவினை பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள் ஆகியவற்றுக்கு, ஜி.எஸ்.டி., 12 சதவீதமாக உள்ளது. இதை முற்றிலுமாக நீக்க வேண்டும் என, கைத்தறி துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இத்துடன், சில பொருட்களின் வரியை குறைக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமைப்பு சாரா துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொது சுகாதாரம் சார்ந்த பொருட்களின் நுகர்வை அதிகரிக்கவும் உதவும் பிரிவுகளில், வரி குறைப்பு அவசியம் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த கோரிக்கைகளுடன், ஒரு சில சேவைகளுக்கான வரியை குறைப்பது குறித்தும், கவுன்சில் பரிசீலிக்கும் என தெரிகிறது.
குறைப்பு
கடந்த, 2017 நவம்பரில், 28 சதவீத வரி பிரிவில் இருந்து, 178 பொருட்கள் நீக்கப்பட்டன. உணவகங்களுக்கான வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்தாண்டு, ஜனவரியில், 54 சேவைகளுக்கும், 29 பொருட்களுக்கும் வரி குறைக்கப்பட்டது.இவ்வாறு, வரி குறைக்கப்பட்ட போதிலும், கடந்த நிதியாண்டில், ஒன்பது மாதங்களில், ஜி.எஸ்.டி., மூலம், 7.41 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதாவது, சராசரியாக, மாதம், 89,885 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரலில் வரி வசூல், 1.03 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. இது, மே மற்றும் ஜூன் மாதங்களில் முறையே, 94,016 கோடி மற்றும் 95,610 கோடி ரூபாயாக உள்ளது.எனவே, வரி வருவாயில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத, அதேசமயம், வேலைவாய்ப்பையும், நுகர்வையும் அதிகரிக்க உதவும் பிரிவுகளில், வரியை குறைக்கவோ அல்லதுநீக்கவோ, ஜி.எஸ்.டி., கவுன்சில் துணிந்து முடிவெடுக்கும் என, தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலிக்க உள்ள முக்கிய அம்சங்கள்
* ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலை மேலும் எளிமையாக்கும் வழிமுறை
* ஏற்றுமதியாளர்கள் உள்ளீட்டு வரி பயனை பெறுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பது
* ஜி.எஸ்.டி.என்., நிறுவனத்தை, பொதுத் துறை நிறுவனமாக மாற்றுவது
* ஓராண்டு விற்பனை – கொள்முதல் விபரங்களுடன் கணக்கு தாக்கல் செய்வதற்கான, ‘ஜி.எஸ்.டி.ஆர் – 9’ படிவம் அறிமுகம்
* மாநிலங்களின் வரி சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்தியில் ஒரே அமைப்பை ஏற்படுத்துவது
* இயற்கை எரிவாயுவை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வருவது
* ஜி.எஸ்.டி., பிரிவுகளை, நான்கில் இருந்து, மூன்று அல்லது இரண்டாக குறைப்பது
* ஒரே நாடு; ஒரே சாலை வரி திட்டம்
* ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனைகளுக்கு சலுகை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|