பதிவு செய்த நாள்
18 ஜூலை2018
23:27
புதுடில்லி : மத்திய அரசு, லாரி, டிரக் உள்ளிட்ட கனரக வாகனங்களில் கொண்டு செல்லும் சரக்கின் எடை அளவை, 25 சதவீதம் உயர்த்தி நிர்ணயித்துள்ளது. அத்துடன், வர்த்தக வாகனங்களுக்கு, எப்.சி., எனப்படும் தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு காலத்தை, ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. இதனால், சரக்கு போக்குவரத்து நிறுவனங்களின் செலவினம் குறையும்.
இது குறித்து, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், நிதின் கட்கரி கூறியதாவது: சர்வதேச நாடுகளை பின்பற்றி, கனரக வாகனங்களில் அனுமதிக்கப்படும் சரக்கின் எடை, 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 16 டன் வாகனம், 19 டன் சரக்கை கொண்டு செல்லலாம். 25 மற்றும் 32 டன் வாகனங்கள் முறையே, 28.5 டன் மற்றும் 42 டன் சரக்கை கொண்டு செல்லலாம். இதனால், சரக்கு போக்குவரத்து செலவினம், 2 சதவீதம் குறையும். வளர்ந்த நாடுகளில், சரக்கு போக்குவரத்து செலவு, 8 சதவீதமாக உள்ளது. இது, இந்தியாவில், 13 – -14 சதவீதமாக உள்ளது.
தற்போது, கனரக வாகனங்கள் அதிநவீன தொழில்நுட்பங்களில் தயாரிக்கப்படுகின்றன. இந்திய சாலைகளின் தரமும் மேம்பட்டுள்ளது. இதன் காரணமாக, கனரக வாகனங்களில், சரக்கு எடையளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த, 1983ம் ஆண்டுக்கு பின், தற்போது தான், வாகன சுமை தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை அமல்படுத்த, அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால், அளவிற்கதிகமான எடையுடன் வாகனங்கள் செல்வது குறையும்.
விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, கூடுதல் சரக்கை அகற்றிய பிறகே, போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறையால், சாலை போக்குவரத்தில் லஞ்ச ஊழலும் கட்டுக்குள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு முக்கியம் :
புதிய விதிமுறை குறித்து, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், அபய் பிரோடியா கூறியதாவது: நாட்டில், வர்த்தக வாகன போக்குவரத்தினை முன்னேற்றும் வகையில், மத்திய அரசு எடுத்த சரியான நடவடிக்கை இது. இருப்பினும், இந்த விதிமுறை, புதிய வாகனங்களுக்கு மட்டுமே பொருந்துமாறு இருந்தால் நல்லது. தற்போது இயங்கி வரும் பழைய வாகனங்களில், கூடுதல் சுமை ஏற்றுவது பாதுகாப்பானதாக இருக்காது. எனவே, பாதுகாப்பை முன்னிட்டு, புதிய வாகனங்களுக்கு மட்டுமே அதிக சுமை ஏற்றும் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|