பதிவு செய்த நாள்
18 ஜூலை2018
23:31
மும்பை : மும்பையில், திலக் மேத்தா என்ற, 13 வயது சிறுவன், கூரியர் சேவைக்காக உருவாக்கிய, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம், நேற்று முதல் வர்த்தக ரீதியில் செயல்படத் துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் தோன்றியதன் பின்னணியில், சுவாரஸ்யமான சம்பவம் உள்ளது.
மாணவன் :
மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவன், திலக் மேத்தாவுக்கு, ஒரு நாள் அவசரமாக சில புத்தகங்கள் தேவைப்பட்டன. இரவு, வேலையில் இருந்து களைப்புடன் வீடு திரும்பும் தந்தையை, நகர்ப்புறத்தில் மட்டும் கிடைக்கும் அந்த புத்தகங்களை வாங்கி வரச் சொல்ல, சிறுவனின் மனம் இடம்கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் தான், இது போன்ற புத்தகங்கள், ஆவணங்கள் போன்றவற்றை, வீடு தேடி கொடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவங்கினால் என்ன என்ற சிந்தனை, திலக் மேத்தாவுக்கு உதித்தது.
அதை தந்தையிடம் கூற, அவர் ஆதரவு தெரிவித்ததுடன், தான் தலைமை செயல் அதிகாரியாக உள்ள, ருஷாப் சீலிங்க் என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் உதவியை பெற்றுத் தருவதாகவும் கூறினார். இதையடுத்து, கனஷ்யாம் பரேக் என்ற வங்கி அதிகாரியிடம், திலக் தன் திட்டத்தை விவரித்தார். அதில் ஏற்பட்ட நம்பிக்கையால், கனஷ்யாம், வங்கி வேலையை உதறிவிட்டு, திலக் துவக்கும் நிறுவனத்தில், தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க முன்வந்தார்.
இதையடுத்து, உருவானது தான், ‘பேப்பர்ஸ் அண்டு பார்சல்ஸ்’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம். சுருக்கமாக, பி.என்.பி., என, அழைக்கப்படுகிறது. தொழில் துவங்குவதற்கான மூலதனத்தை, ருஷாப் சீலிங்க் வழங்க, திலக் மேத்தா, தன் தொழிலுக்கான மொபைல், ‘ஆப்’பை உருவாக்கி, சேவையை துவக்கினார். பி.என்.பி., 200 பணியாளர்களுடன், கடந்த நான்கு மாதங்களாக, மொபைல் ஆப் வாயிலாக, மும்பையின் தாதர் பகுதியில் இருந்து, ‘பார்சல்’ சேவையை, சோதனை முறையில் வழங்கி வந்தது. அத்துடன், மும்பையின் பிரசித்தி பெற்ற, ‘டப்பாவாலா’ அமைப்பைச் சேர்ந்த, 300 பேரையும், தன் சேவைக்கு பயன்படுத்திக் கொண்டது. நேற்று முதல், பி.என்.பி., நிறுவனம், வர்த்தக ரீதியிலான சேவையை துவக்கியுள்ளது.
விரிவாக்கம் :
இது குறித்து, திலக் மேத்தா கூறியதாவது: ஒருவர், நிறுவனத்தின், ‘ஆப்’பை பதிவிறக்கி, புத்தகங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பெற, ‘ஆர்டர்’ தரலாம். மதியம், 2:30 மணிக்குள் ஆர்டர் அளித்தால், அன்றே பார்சல் வீடு தேடி வந்து விடும். மேலும், பார்சல் எந்த வழியாக வருகிறது என்பதையும், மொபைல் போனில் அறியலாம். தற்போது, 3 கிலோ வரையிலான பார்சல்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இதற்கு, எடையை பொறுத்து, 40 – 180 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனை கூடங்கள், கொய்மலர் அங்காடிகள் ஆகியவை ஆர்டர் வழங்குகின்றன. தினமும், 1,200 பார்சல்கள் அனுப்பப்படுகின்றன. நிறுவனத்தின் சேவையை, மும்பை தவிர, பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பி.என்.பி., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, கனஷ்யாம் பரேக் கூறுகையில், ‘‘மும்பை நகருக்குள் நடைபெறும் கூரியர் சேவையில், 20 சதவீதத்தை கைப்பற்றவும், 2020ல் வருவாயை, 100 கோடி ரூபாயாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்,'' என்றார்.
‘டப்பாவாலா’
மும்பையில், உணவு எடுத்துச் செல்லும் சேவையில் ஈடுபட்டுள்ள, ‘டப்பாவாலா’ எனப்படுவோரில், 300 பேர், பி.என்.பி., நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்க்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|