பதிவு செய்த நாள்
19 ஜூலை2018
23:56
புதுடில்லி : கடும் எதிர்ப்புக்குள்ளான, ‘நிதி தீர்வு – சேமிப்பு காப்பீடு’ மசோதாவை திரும்பப் பெற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த, 2017, ஆக., 10ல், இந்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ‘பெயில் இன்’ மற்றும் வங்கி டெபாசிட்டிற்கான காப்பீடு குறித்த இரு பிரிவுகளுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது.ஒரு வங்கி திவாலாகும் பட்சத்தில், அதற்கான தீர்வு நடவடிக்கையில், வாடிக்கையாளர்களையும் பொறுப்பேற்க, பெயில் இன் பிரிவு வழிவகை செய்கிறது. இதன்படி, திவாலான வங்கியின் வாடிக்கையாளருக்கு, அவர் செய்த டெபாசிட்டில், குறிப்பிட்ட சதவீதம் ரொக்கமாகவும், எஞ்சிய தொகை, வங்கி பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களாகவும் வழங்கப்படும்.
இந்த அம்சம், வங்கி டெபாசிட்தாரர்கள் இடையே சந்தேகத்தையும், பீதியையும் கிளப்பியது. டெபாசிட் செய்த முழு தொகையும், திரும்பக் கிடைக்காதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
எதிர்ப்பு :
அதனால் பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும், பெயில் இன் பிரிவை நீக்க வேண்டும் என, கோரினர். ஆனால், ‘இந்த பிரிவு, அசாதாரண சூழலுக்குத் தான் பொருந்தும்; குறிப்பாக, பொதுத் துறை வங்கிகளில் இந்த பிரிவை பயன்படுத்தும் நிலை வராது’ என, மத்திய அரசு சமாதானம் கூறியது. அடுத்து, வரைவு மசோதாவில், தற்போதைய காப்பீட்டு வரம்பு நீக்கத்திற்கும் எதிர்ப்பு எழுந்தது.
வங்கி டெபாசிட்டுகளில், தற்போது, ஒரு லட்சம் ரூபாய் வரை, காப்பீட்டு வசதி உள்ளது. வரைவு மசோதாவில், இந்த வரம்பு நீக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக, புதிதாக அமைக்கப்படும் தீர்வுக் கழகம், டெபாசிட்டுகளுக்கான காப்பீடு குறித்து முடிவு செய்யும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரிவிற்கும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு, ‘டெபாசிட் வரம்பை உயர்த்தி முடிவு செய்யும் அதிகாரம், தீர்வுக் கழகத்திற்கு வழங்கப்படும் என்பதால், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட டெபாசிட்டிற்கும், காப்பீட்டு வசதி கிடைக்கும்.
‘இதனால், அதிகம் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களும் பயன் பெறுவர்’ என, தெரிவித்தது.எனினும், எதிர்ப்பு காரணமாக, வரைவு மசோதா, பார்லி., நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதன் அறிக்கை இன்னும் வராத சூழலில், பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நிதி தீர்வு – சேமிப்பு காப்பீடு மசோதாவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் வர உள்ள சூழலில், மசோதாவை திரும்பப் பெறுவதே சிறந்த வழி என, மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|