பதிவு செய்த நாள்
10 ஆக2018
00:48
புதுடில்லி:வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததில், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படும், 0.35 சதவீத கணக்குகளை மட்டுமே ஆய்வு செய்ய, வருமான வரி துறை முடிவு செய்து உள்ளது.
இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், சுஷில் சந்திரா கூறியதாவது.வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாங்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செலுத்துவோர் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.கடந்த, 2017- – 18ம் வரி மதிப்பீட்டு ஆண்டில், 6.86 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், 0.35 சதவீதத்தினரின் கணக்கு விபரங்கள் மட்டுமே, ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால், எஞ்சிய, 99.65 சதவீதம் பேர் நிம்மதியாக இருக்கலாம்.
வருமான வரி துறை, 0.15 சதவீத கணக்குகளின் ஆய்வுக்கு, ஓர் எல்லை வகுத்துள்ளது. இதர, 20 சதவீத கணக்குகளில், அதிக அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால், அவை முழுமையாக ஆய்வுசெய்யப்படும்.
தப்ப முடியாது
அதேசமயம், குறைவான கணக்குகளை ஆய்வு செய்வதால், வருமான வரி துறை, வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில், மென்மையான போக்கை கடைபிடிப்பதாக கூற முடியாது. அதை, நேர்மையாக வரி செலுத்தி கணக்கு காட்டுவோர் மீது, நாங்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கருதலாம்.அதிகமாக வரி ஏய்ப்பு செய்வோர் என, சந்தேகிக்கப்படும் நபர்கள் மட்டுமே, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர். பலர், வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்து வரி ஏய்ப்பு செய்வர்.
அத்தகையோர், நாட்டின் எல்லை தாண்டினால், பணம் பாதுகாப்பாக இருக்கும் என, நினைக்கின்றனர். அது தவறு.தற்போது, வருமான வரி துறையினர், பல நாடுகளுடன், ‘டிபாசிட்’ விபரங்களை தன்னிச்சையாக பெறும் நடைமுறை அமலுக்கு வந்து விட்டது. இதன் காரணமாக, வெளிநாடுகள் உடனான நம் பொருளாதார எல்லைகள், நெருக்கமாக வந்துள்ளன.
அதனால், வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்து வரி ஏய்ப்புசெய்வோரும், இனி தப்ப முடியாது.வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறை மேலும் சுலபமாக வேண்டும். வரி ஏய்ப்பு செய்வோர் மீதான நடவடிக்கை கடுமையாக்கப்பட வேண்டும். இது தான் எங்கள் நோக்கம்.
எங்களிடம் உள்ள தகவல்கள் அடிப்படையில், வரி ஏய்ப்பாளர்களுக்கு அச்சம் உண்டாக்கும் வகையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, வரி ஏய்ப்பு தொடர்பாக, 4,700 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வசூல் ரூ.10.03 லட்சம் கோடி
நேரடி வருமான வரிகள் வாரிய தலைவர் தெரிவித்தபடி, 6.86 கோடி வருமான வரி கணக்குகளில், 24 ஆயிரம் கணக்குகள் மட்டுமே, ஆய்வு செய்யப்படும். அவற்றில், வரையறைக்கு உட்பட்டு, 10 ஆயிரத்து, 280 கணக்குகளும், 13 ஆயிரத்து, 720 கணக்குகள் முழுமையாகவும் ஆய்வு செய்யப்படும்.
மத்திய நேரடி வரிகள் வாரியம், 2017 -– 18ம் நிதியாண்டில், வருமான வரி மற்றும் நிறுவனங்கள் வரியாக, 10.03 லட்சம் கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது, 2016- – 17ம் நிதியாண்டை விட, 18 சதவீதம் அதிகம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|