பதிவு செய்த நாள்
13 ஆக2018
00:19
இந்தியாவில் மின் வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான கொள்கை முன்வரைவை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. வளர்ந்து வரும் மின் வணிகத் துறையின் சவால்களை எதிர்கொள்ள, இத்தகைய ஒரு முயற்சி தேவை என்பது பல ஆண்டு கோரிக்கை. ஆனால், இந்தக் கொள்கை முன்வரைவு வரவேற்பைவிட விமர்சனங்களையே அதிகம் பெற்றுள்ளது, ஏன்?
இன்றைக்கு எத்தனை பேர் கடைகளுக்குப் போய் ஆடைகள் வாங்குகிறீர்கள்? மின்னணு சாதனங்களை வாங்குகிறீர்கள்? ஓட்டல்களுக்குப் போகிறீர்கள்? எல்லாமே கையடக்க செல்போனிலோ, மடிக்கணினியிலோ செய்துகொள்கிறீர்கள் தானே? அதுவும், நினைத்தே பார்க்க முடியாத தள்ளுபடி விலையில்.எந்த மின் வணிக நிறுவனம் ‘ஆபர்’ போடுகிறது என்று காத்திருந்து தெரிந்துகொண்டு, மளிகை சாமான்கள் உட்பட, எல்லாவற்றையும் இணையத்தின் வழியாகவே வாங்கும் பழக்கம், பெருநகரங்களில் மட்டுமல்ல, சிறு நகரங்களிலும் பெருகிக்கொண்டு இருக்கிறது.
இதனால் தான், வேறு எந்தத் துறையும் காணாத வளர்ச்சியை, மின் வர்த்தகத் துறை பெற்றுள்ளது. 2017ல் இந்திய மின் வணிகத் துறையின் மூலம் நடந்த விற்பனை, 1.38 லட்சம் கோடி ரூபாய். ஆனால், இங்கே மின் வணிகத்துக்கு இருக்கும் வாய்ப்பு, 3.5 லட்சம் கோடி ரூபாய் என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்கா
அமெரிக்காவையும், சீனாவையும் ஒப்பிடும்போது, நம்முடைய விற்பனை மிக மிகச் சொற்பம். அந்த விற்பனையிலும், முன்னணியில் இருப்பவை, மின்னணு சாதனங்களும் – 49 சதவீதம், ஆடைகளும்தான் – 29 சதவீதம். ஆனால், வளர்ந்து வரும் இணைய பயன்பாடு, மொபைல் சேவைகள் ஆகியவற்றால், மின் வணிகம் பன்மடங்கு அதிகரிக்கப் போவது உறுதி.தற்போது, இந்தியாவில் உள்ள, 39 கோடி இணைய பயனர்களில், சுமார், 40 சதவீதம் பேர்தான், அதாவது, 16 கோடி பேர் தான் மின் வணிக வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். இதிலும், 90 சதவீதம் பேர், அதாவது, 14 கோடி பேர் வசதியான பின்னணியைக் கொண்டவர்கள்.
இந்தத் தகவல்கள், ஒரு செய்தியை உரக்கச் சொல்கிறது. இங்கே மின் வணிகம் வளர்வதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம். அப்படியானால், அடுத்த கேள்விகள் எழுவது சகஜம் தானே?எல்லாவற்றையும் இணையத்திலேயே வாங்கிவிட்டால், வழக்கமான கடைகளின் கதி என்ன? அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத தள்ளுபடியை வழங்கி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும்போது, போட்டியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுவிடுகிறதே. சமமான போட்டி இல்லாத சூழல் உருவாகிவிடுகிறதே.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தான், அமேசானும், வால்மார்டும் இந்தியச் சந்தைக்குள் நுழைய முயற்சி செய்கின்றன. அவற்றோடு சாதாரண கடைகளால் எப்படிப் போட்டி போட முடியும்?
மேலும், இணையத்திலும் எண்ணற்ற பிரச்னைகள். குறிப்பாக வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவது முக்கியமானது. அவர்கள் எங்கே போய் புகார் அளிப்பது? அதற்கான தீர்வுமுறைகள் என்னென்ன? வாடிக்கையாளர்களைப் பற்றி திரட்டப்படும் தகவல்கள் எங்கே சேமிக்கப்படுகின்றன? அவற்றின் பாதுகாப்புக்கு யார் உறுதி அளிப்பது?
ஒரு துறை வளரும் வேகத்தில், கூடவே பிரச்னைகளும், சிக்கல்களும் அதைவிட வேகமாக வளர்ந்துவருகின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இந்திய மின் வணிகத்துக்கென ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என, கோரப்பட்டது. அதன்படி, பொருட்கள் மீதான ‘அதிரடி, அபார’ தள்ளுபடி விளையாட்டை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மின் வணிக நிறுவனங்கள் படிப்படியாக நிறுத்திவிட வேண்டும்.
காப்பீடு, ஓய்வூதியம், பங்குச் சந்தை, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளை நெறிப்படுத்த, சுயேச்சையான ஆணையங்கள் செயல்படுவது போல், மின் வணிகத்துக்கும் ஒரு தனி ஆணையம் ஏற்படுத்தப்படும். இந்த ஆணையம், வாடிக்கையாளர்களின் புகார்களைக் கையாளுவது உட்பட, பல்வேறு கட்டுப்பாடுகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளும்.பல்வேறு மின் வணிக நிறுவனங்கள் இணைந்து, புதிய நிறுவனங்கள் உருவாவதை ஒழுங்குபடுத்த, இந்திய சந்தைப் போட்டி கட்டுப்பாட்டு ஆணையம், சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளும்.
எல்லாவற்றுக்கும் மேல், இந்தியாவில் செய்யப்படும் விற்பனைகள், திரட்டப்படும் வாடிக்கையாளர்களின் விபரங்கள் ஆகியவற்றை மின் வணிக நிறுவனங்கள், இந்தியாவுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். தேசப் பாதுகாப்பு கருதியும், வாடிக்கையாளர்களின் சேவைகளை மேம்படுத்தவும், இத்தகைய தகவல் சேமிப்பு இந்தியாவுக்குள் இருக்கவேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.
விமர்சனங்கள்கொள்கை குறிப்பு
விபரங்கள் வெளியானவுடனேயே, ஒரே விவாதங்கள். அரசாங்கம் தேவையில்லாமல் தலையை நுழைக்கிறது என, கூப்பாடு. இன்னொரு, ‘லைசென்ஸ் ராஜ்’ காலம் ஏற்பட்டுவிடுமோ என, அச்சம். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாததால் தான், மின் வணிகம் இவ்வளவு விரைவாக வளர்கிறது. இதை அப்படியே அனுமதிக்கவேண்டுமே அன்றி, கட்டுப்பாடுகள் விதிப்பது, முட்டுக்கட்டையாகவே முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்டிருக்கும்
வேலைவாய்ப்புகளும், தொழில்முன்னேற்றமும் பாதிக்கப்படும் என்ற மிரட்டலும் கூடவே சொல்லப்படுகிறது.இன்னொரு விஷயம், இணைய வணிகம் என்பது, ‘தள்ளுபடி’ விலையில்தான் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தக் கொள்கை முன்வரைவு, அதற்குத்தான், ‘ஆப்பு’ வைக்கிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக, ‘தள்ளுபடிகள்’ தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றால், இணைய வணிகமே படுத்துவிடாதா... என்ற அச்சத்தை மின் வணிக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.பெரிய மின் வணிக நிறுவனங்கள், இப்படிப்பட்ட கொள்கையை அரசாங்கம் எடுத்துவிடாமல் தடுக்க, பல முயற்சிகளில் இறங்குவதாகவும் செய்திகள் வருகின்றன.இன்னொருபுறம், மின் வணிகத்தால் சாதாரண சில்லறை வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களால் போட்டி போட முடியவில்லை.
அதற்கு வஞ்சம் தீர்க்கும்விதமாகத்தான், மின் வணிக நிறுவனங்களுக்கு, அரசாங்கத்தின் மூலம், கடிவாளம் போடப் பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.ஒரு புதிய துறை ஆரம்பிக்கும்போது, குழப்பமாகவே இருக்கும். வணிகம் பெருகவும், பயனர்கள் அதிகரிக்கவும் ஆரம்பிக்கும்போது, அதை நெறிப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்கான தேவை தன்னிச்சையாகவே எழும்.
மின் வணிகத் துறையும் இதற்கு விலக்கல்ல. தள்ளுபடிகளுக்கு ஆசைப்பட்டு, இணையத் திருட்டுகளிலும், சுரண்டலிலும் வாடிக்கையாளர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது. அதேபோல், அவர்களுடைய புகார்களுக்கு, உரிய தீர்வும் காணப்பட வேண்டும். அதற்கு வலுசேர்க்கும் அமைப்பும், நெறிமுறைகளும் உருவாவதும் வரவேற்கத்தக்கதே. மேலும், மின் வணிக வரைவு கொள்கையில் நிலவும் மாறுபட்ட கருத்துகளுக்கு தீர்வு காணும் நோக்கில், அதை மறுபரிசீலனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்திருப்பதும், பாராட்டத்தக்கதே.
– ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|