பதிவு செய்த நாள்
14 ஆக2018
01:18
மும்பை:‘வாராக் கடன், மோசமான நிதி நிலை ஆகியவற்றுக்கு ஈடாக, மூலதனத்தை அதிகரிக்காத வரை, இந்திய வங்கி துறையின் வளர்ச்சி குறித்த மதிப்பீடு, எதிர்மறை பிரிவிலேயே நீடிக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ எச்சரித்து உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:வங்கிகளின், 15,100 கோடி டாலர் வாராக் கடன், அத்துறையின் பலவீனமான நிதியாதாரத்திற்கு இடர்ப்பாடான அம்சமாகவே உள்ளது.இதற்கு, வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியுள்ளதும், கடனை திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் மந்தநிலையும் காரணம் எனலாம்.
பலவீனம்
மோசமான நிதி நிலை, அதிகரித்து வரும் வாராக் கடன் ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில், வங்கிகள், அவற்றின் பலவீனமான மூலதன ஆதாயத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு செய்யாத வரை, வங்கி துறை, எதிர்மறை வளர்ச்சிப் பிரிவிலேயே இருக்க நேரிடும்.
பொது துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளில், 11 வங்கிகளின், மூலதன இருப்பு விகிதம், ‘பேசல் – 3’ விதிமுறைப்படி, நிர்ணயிக்கப்பட்டுள்ள, 8 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.இந்த விதிமுறை, 2019, ஏப்ரலில் அமலாக உள்ளது. இத்தகைய சூழலில், இந்திய வங்கிகளுக்கு, மூலதன இருப்பு விகிதத்தை உயர்த்திக் கொள்ள, 4,000 – 5,000 கோடி டாலர் தேவை என,மதிப்பிடப்பட்டுள்ளது.இதில், பெரும்பான்மை தொகை, பொது துறை வங்கிகளுக்கு தேவைப்படும். ஆனால், அதை, பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டிக் கொள்ள முடியாதபடி, பொது துறை வங்கிகளின் மூலதன இருப்பு விகிதம் பலவீனமாக உள்ளது.அதனால், மத்திய அரசு, பொது துறை வங்கி களுக்கு, மேலும் அதிக அளவில் பங்கு மூலதனம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.மறு பங்கு மூலதனம்கடந்த, 2017, அக்டோபரில், ‘மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், பொது துறை வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய் பங்கு மூலதனமாக வழங்கப்படும்’ என, மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, கடன்பத்திரங்கள் மூலம் வழங்க வேண்டிய, 1.35 லட்சம் கோடி ரூபாயில், 71 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்தொகை, வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்கியதால் உண்டான இழப்பை ஈடு செய்து விட்டதால், வங்கி களின் மூலதன இருப்பு விகிதம் உயரவில்லை.மேலும், மறு பங்கு மூலதன திட்டத்தில், வங்கிகள், நிதிச் சந்தையில் இருந்து, 58 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டிக் கொள்ள வேண்டும். வங்கி துறை உள்ள சூழலில், இது சாத்தியமாக வாய்ப்பில்லை.
அதனால், பொது துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு மேலும் பங்கு மூலதனம் அளிக்க வேண்டிய சூழல் உருவாகும்.எனினும், வங்கி துறையின் வாராக் கடன்களை குறைக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ஆறுதல் அளிப்பதாக உள்ளன.அதேசமயம், சில்லரை மற்றும் சிறிய, நடுத்தர நிறுவன துறைகளால் ஏற்படவுள்ள புதிய இடர்ப்பாடுகளை, வங்கிகள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்பது தான் கேள்வி. அதனால், வாராக் கடனாக மாற வாய்ப்புள்ள கடன்கள் அதிகரிக்க கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|