பதிவு செய்த நாள்
16 ஆக2018
00:13
புதுடில்லி:நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், ஏப்., – ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், இ.எம்.எப்., எனப்படும், பங்கு மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்கள் மூலம், 43,300 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளன.
இது குறித்து, இந்திய மியூச்சுவல் பண்டு கூட்டமைப்பான – ‘ஆம்பி’ வெளியிட்டுள்ள அறிக்கை:
பங்கு சந்தை ஏற்றம்
கடந்த ஜூலையில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின், இ.எம்.எப்., திட்டங்களில், 10,585 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இது, ஏப்ரலில், 12,409 கோடி; மே, 12,070 கோடி; ஜூனில், 8,237 கோடி ரூபாயாக இருந்தது.இந்தாண்டு, மார்ச் இறுதி நிலவரப்படி, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும், இ.எம்.எப்., திட்டங்களின் மதிப்பு, 7.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, 10 சதவீதம் உயர்ந்து, ஜூலை இறுதியில், 8.30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், ஜூலையில், மியூச்சுவல் பண்டு திட்டங்களில் இருந்து, 32 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வெளியேறியுள்ளது.இதில், கருவூல பில்கள், 'சர்டிபிகேட் ஆப் டிபாசிட், கமர்சியல் பேப்பர் ' ஆகியவை சார்ந்த, 31 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள், திரும்பப் பெறப்பட்டுள்ளன.அரசு கடன் பத்திர முதலீட்டு திட்டங்களில் இருந்து, 7,950 கோடி ரூபாய்; ‘கோல்டு எக்ஸ்சேஞ் டிரேட் பண்டு’ மூலம், 50 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
இந்தியா புல்ஸ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின், இ.எம்.எப்., பிரிவு தலைவர், சுமித் பட்னாகர் கூறியதாவது:முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டு வரும், ஏப்., – ஜூன் காலாண்டு நிதி நிலை அறிக்கைகள், சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளன. அத்துடன், நாடு தழுவிய அளவில், பருவ மழை பொழிவும் நன்கு உள்ளது. அதனால், பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.இது, பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், அதிக அளவில் முதலீடுகள் குவிய வழி வகை செய்துள்ளது.
விழிப்புணர்வு
மேலும், கடந்த சில ஆண்டுகளாக, மக்களிடம், முதலீடுகள் தொடர்பான விழிப்புணர்வு பெருகியுள்ளது. இந்தியாவின் கட்டமைப்பு வலுவாக உள்ளதை உணர்ந்து, மிகுந்த முதிர்ச்சியுடன், நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்கின்றனர். இதற்கு, எஸ்.ஐ.பி., எனப்படும் தவணையில் முதலீடு செய்யும் வசதியுள்ள, மியூச்சுவல் பண்டு முதலீட்டு திட்டங்களின் வளர்ச்சி, எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
அதுமட்டுமின்றி, வேறு எந்த முதலீட்டு திட்டங்களிலும், இரட்டை இலக்க வருவாய் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத சூழலில், நீண்ட கால அளவில், அத்தகைய வாய்ப்பை தரக் கூடிய, இ.எம்.எப்., திட்டங்களில், முதலீடுகள் குவிவதில் வியப்பேதுமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
42 நிறுவனங்கள்
இந்திய மியூச்சுவல் பண்டு துறையில், 42 நிறுவனங்கள் உள்ளன. இவை, பல்வேறு மியூச்சுவல் பண்டு திட்டங்கள் மூலம், 23 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை நிர்வகித்து வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|