பதிவு செய்த நாள்
17 ஆக2018
23:25
புதுடில்லி : மத்திய அரசின் புதிய விதிமுறையை பின்பற்றும் நோக்கத்தில், அதிக எடை தாங்கும், ‘டிரக்’ வாகன தயாரிப்பில், நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
அனைத்து டிரக் வாகனங்களின், ‘ஆக்சில் லோடு’ எனப்படும், எடை தாங்கும் திறனை, 12 – -15 சதவீதம் உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சரக்கு போக்குவரத்து செலவை குறைப்பதற்கான, இந்த விதிமுறை, ஜூலை, 16 முதல் அமலுக்கு வந்தது.
விற்பனை :
இதையடுத்து, சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி பெறும் அனைத்து புதிய டிரக்குகளின் எடை தாங்கும் திறன் சோதிக்கப்படும். புதிய விதிமுறைப்படி, டிரக்குகளின் எடை தாங்கும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பதை, வாகன சோதனை முகமை அமைப்புகள் பரிசோதித்து, சான்று வழங்கும். புதிய விதிமுறைப்படி தயாரிக்கப்படாத டிரக்குகளை, விற்பனை செய்ய முடியாது. அதனால், ‘டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்டு, எய்ச்சர் மோட்டார்ஸ்’ உள்ளிட்ட நிறுவனங்கள், புதிய விதிமுறைப்படி, தற்போதைய டிரக்குகளின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்து, விற்பனைக்கு அனுப்புவதில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
இந்த வகையில், இலகு ரக, நடுத்தர மற்றும் கனரக டிரக்குகள், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச எடையை தாங்கும் வகையில், மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன. அத்துடன், புதிதாக தயாரிக்க உள்ள டிரக்குகளை, விதிமுறைக்கு ஏற்ப தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன.
டாடா மோட்டார்ஸ் :
மத்திய அரசின் அறிவிப்பு வெளியான உடன், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சுறுசுறுப்பாக புதிய டிரக்குகளின் வடிவமைப்பில் மாற்றம் செய்யத் துவங்கி விட்டது.
எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சித்தார்த் லால் கூறியதாவது: எங்கள் கனரக டிரக்குகளில், 5 மற்றும் 8 லிட்டர் திறன் உள்ள புதிய இன்ஜின்கள், இதர வாகனங்களை விட, அதிக எடை தாங்கும் திறன் கொண்டவை. அதனால், தற்போதுள்ள மாடல்களில், சில சிறிய மாற்றங்கள் செய்தால் போதும். அரசின் அறிவிப்பு, எங்களுக்கு சாதகமாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அசோக் லேலண்டு நிறுவனமும், புதிய விதிமுறைப்படி, டிரக்குகளின் சரக்கு தாங்கும் திறனை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
டயர் பிரச்னை :
தயாரிப்பில் உள்ள புதிய டிரக்குகளின், எடை திறனை உடனடியாக உயர்த்த முடியாது. அதற்கு, வாகனத்தை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். மேலும், புதிய எடை திறனுக்கு ஏற்ற டயர்கள், இந்தியாவில் கிடையாது; இறக்குமதி செய்ய வேண்டும். உள்நாட்டில் டயர் தயாரிக்க, 12- – 18 மாதங்கள் ஆகலாம். எனினும், புதிய விதிமுறையை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளோம் என, மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.
கடும் நடவடிக்கை :
நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக எடை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|