பதிவு செய்த நாள்
20 ஆக2018
07:07
சித்தாந்தம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை முதலீட்டு துறையோடு நாம் அதிகம் சம்பந்தப்படுத்துவதில்லை. அவற்றை வர்த்தகத்திற்கும், முதலீட்டிற்கும் அப்பாற்பட்ட அம்சங்களாக தனிமைப்படுத்தி பார்ப்பதையே பலரும் விரும்புகின்றனர்.அப்படி அணுகுவதால், முதலீடு பற்றிய உட்புரிதல் நம்மில் பலருக்கு ஏற்படுவதில்லை. நாம் முதலீடுகளை அணுகும் முறை, மேலோட்டமாக அமைவதன் முக்கிய காரணம், அடிப்படை புரிதலில் இருக்கும் இடைவெளியும், முழுமையின்மையும் மட்டுமே.
முதலீட்டை சரியாக புரிந்துணர வேண்டுமானால், நாம், இந்த மூன்று அம்சங்களை பற்றிய சரியான புரிதலை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.சித்தாந்தங்களில் இருந்து மட்டுமே ஒருவரின் புரிதல் நோக்கிய பயணம் துவங்க வேண்டும்.ஒருவர் முதலீட்டு கலையை கற்க விரும்பினால், முதலில் வெவ்வேறு சித்தாந்தங்களை புரிந்துணர வேண்டும். முதலீட்டு சித்தாந்தங்கள் பல, முதலீட்டு அறிஞர்கள் மொழிந்து வழிவருபவை. வெவ்வேறு காலகட்டங்களில், பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப, புதிய சித்தாந்தங்கள் உருவாகின. அதே சூழல்கள் மீண்டும் உருவாகும் போது, சூழலுக்கு ஏற்ற அந்த சித்தாந்தங்கள் கையாளப்பட்டு, வெற்றியும் காணப்பட்டன.
இதற்கு, 90 ஆண்டு வரலாறு உண்டு. 1929ல் ஏற்பட்ட, ‘கிரேட் டிப்ரெஷன்’ எனும் பெரும் பொருளாதார சரிவுக்கு பின், உருவான இருண்ட பொருளாதார சூழலில் இருந்து பிறந்தது தான் இந்த முதலீட்டு சித்தாந்தங்கள்.மதிப்புசார் முதலீடு இதன் முதல் வடிவம். காலப்போக்கில் பல புதிய முதலீட்டு சித்தாந்தங்கள் உருவாகி வளர்ந்தன. அந்த காலத்திலிருந்த அச்ச உணர்வின் உச்ச நிலையில், யாரும் பங்குகளை வாங்க விரும்பாத சூழலே நிலவியது. அத்தகைய சூழலில், தமக்குள் தைரியத்தை வரவழைத்துக்கொள்ள, ஒரு முதலீட்டாளர் கண்டெடுத்த கணித வழிமுறையே மதிப்புசார் முதலீட்டின் ஆரம்பம்.
அடிப்படையில், நிறுவனத்தை மூடி, அதன் எல்லா சொத்துகளையும் விற்றால் கிடைக்கும் பணத்தை விட குறைவான மதிப்பில், அந்த நிறுவன பங்குகளை வாங்கக் கூட யாரும் விரும்பாத காலகட்டத்தில் பிறந்தது, மதிப்புசார் முதலீடு. அப்படிப்பட்ட சூழலில், துணிவை சேகரிக்க, ஒரு வழிமுறையை உருவாக்கி, அதன் மூலம் வெற்றியும் கண்டவர், பெஞ்சமின் கிரஹாம். இவர் நவீன முதலீட்டின் தந்தையாகவும், மதிப்புசார் முதலீட்டின் நிறுவனராகவும் கருதப்படுபவர்.
அச்சப் பெருக்கு நிலவிய காலகட்டத்தில், கிரஹாம் தன் முதலீட்டு முறையை பயன்படுத்தி வெற்றி கண்டதோடு, நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், அதை பலருக்கு சொல்லியும் தந்தார். இன்று, உலக முதலீட்டாளரின் தலைமகன்களாக விளங்கும் வாரன் பபெட் மற்றும் சார்லி முங்கரும் அவரது பிரதான சீடர்களாக அங்கு பாடம் படித்தனர். இன்றளவிலும், கொலம்பியா பல்கலைக்கழகம் இந்த சித்தாந்தத்தின் தலைமையிடமாக விளங்குகிறது. பங்குகளை வாங்கவே கூடாது என்ற அச்ச சூழலில் பிறந்து, இந்த சித்தாந்தப்படி செய்தால் நிச்சயம் தோல்வி காண முடியாது என்ற நம்பிக்கையை வளர்த்து, முதலீட்டு வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார் கிரஹாம்.
இன்றளவிலும் மதிப்புசார் முதலீட்டு சித்தாந்தம் பலராலும் கற்கப்பட்டு, பிரயோகிக்கப்படுகிறது.பிற சித்தாந்தங்கள் குறித்து, அடுத்த வாரம் சொல்கிறேன்...
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|