பதிவு செய்த நாள்
22 ஆக2018
00:53
புதுடில்லி : ‘மத்திய அரசின் பங்கு மூலதன உதவியால், பொதுத் துறை வங்கிகள், மூலதன இருப்பை சமாளிக்கலாம் என்றாலும், அவற்றின் இடர்ப்பாட்டு கடன் பிரச்னை நீடிக்கும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்விசஸ்’ தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை: மத்திய அரசு, துவக்கத்தில் மதிப்பிட்டதை விட, வங்கிகளின் மூலதன பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனினும், மறு பங்கு மூலதன திட்டம், வாராக் கடன் ஒதுக்கீடு, கடன் வளர்ச்சி போன்றவற்றால், பொதுத் துறை வங்கிகளின் மூலதன இருப்பு விகிதம், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை எட்டும்.
பங்கு மூலதனத்தை ஈர்ப்பதன் மூலம், 2019 மார்ச்சுக்குள், அனைத்து பொதுத் துறை வங்கிகளின், மூலதன இருப்பு விகிதம், குறைந்தபட்சம், 8 சதவீதத்தை தொடும். இது, ‘பேசல்–3’ விதிமுறையில், இந்தியாவுக்கு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அளவான, 5.5 சதவீதத்தை விட, 2.5 சதவீதம் அதிகம். அதனால், இந்திய வங்கிகள், சர்வதேச வங்கிகளுக்கு நிகரான பங்கு மூலதன இருப்பை கொண்டிருக்கும்.
கடன் வளர்ச்சி :
பொதுத் துறை வங்கிகள், மூலதனத்தை அதிகரிக்கும் சவாலை சமாளிக்க, மத்திய அரசின் மறு பங்கு மூலதன திட்டம் உதவும். எனினும், மூலதன இருப்பு விகிதத்தை தக்க வைத்துக் கொள்ள, வங்கிகளின் கடன் வளர்ச்சி, 5 -– 6 சதவீதமாக இருக்க வேண்டும். அத்துடன், அகற்றப்பட்ட வாராக் கடன் பிரிவில், அதிக அளவில் இடர்ப்பாட்டு கடன்கள் சேராமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். அவ்வாறு சேரும்பட்சத்தில், கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு, அதிக அளவில் மூலதனம் தேவைப்படும். மத்திய அரசின் உதவி, மூலதன இருப்பு விகித உயர்வு ஆகியவை, வங்கித் துறைக்கு தற்காலிக நிவாரணமாகவே இருக்கும்.
சீர்திருத்தங்கள் :
வங்கிகள், இடர்ப்பாட்டு கடன்களை, ‘அகற்றப்பட்ட கடன்’ பிரிவிற்கு மாற்றுவது குறைய வேண்டும். அதற்கான அடிப்படை சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அவ்வாறின்றி, வங்கிகள் இடர்ப்பாட்டை சந்திக்கும் போதெல்லாம், மத்திய அரசு பங்கு மூலதன உதவி செய்தால், அது, அரசின் நிதி இருப்பை விழுங்கி விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பங்கு மூலதனம் :
இந்திய வங்கிகள், 2019, ஏப்.,௧ முதல்,‘பேசல்–3’ விதிமுறைப்படி, 8 சதவீத மூலதன இருப்பு விகிதத்தை பராமரிக்க வேண்டும். வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்குவதால், பொதுத் துறையைச் சேர்ந்த, பெரும்பான்மை வங்கிகள், கடந்த நிதியாண்டில், இழப்பை சந்தித்துள்ளன. அதனால், ‘பேசல்–3’ விதிமுறையை பின்பற்றுவது, பொதுத் துறை வங்கிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதால், மத்திய அரசு, மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ் உதவ முன்வந்தது.
அதன்படி, பொதுத் துறை வங்கிகளுக்கான, 2.11 லட்சம் கோடி ரூபாய் பங்கு மூலதனத்தில், இந்தாண்டு மார்ச் வரை, 90 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டிற்கு நிர்ணயித்த, 65 ஆயிரம் கோடி ரூபாயில், ஜூலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட, ஐந்து வங்கிகளுக்கு, 11,300 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. எஞ்சிய தொகை, நடப்பு நிதியாண்டிற்குள் அளிக்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|