பதிவு செய்த நாள்
02 செப்2018
00:01
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 71 ரூபாய் அளவுக்கு வீழ்ந்துவிட்டது என்ற செய்தி, எல்லாரையும் பயமுறுத்தியுள்ளது. இன்னும், 1 ரூபாய் வரை சரிவடையலாம் என்பது பல பொருளாதார நிபுணர்களின் ஆரூடம். இதை எப்படி புரிந்து கொள்வது; என்ன நடக்கும்?டாலர் ஓர் உலக நாணயம். ஒவ்வொரு நாடும் தன் வர்த்தகத்துக்கு, டாலரையே அடிப்படை நாணயமாக வைத்துள்ளன. இதில் ஏற்படும் டிமாண்ட், சப்ளை தான், எல்லா பிரச்னைக்கும் ஆரம்பம்.
ஒன்று, டாலருக்கான தேவை அதிகமாக இருக்க வேண்டும் அல்லது போதுமான அளவு டாலர், சுழற்சியில் இல்லாமல் இருக்க வேண்டும். இப்போது இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன.
அன்னிய செலாவணி சந்தையில் நடைபெறும் வர்த்தகத்தில், விலை ஏற்ற இறக்கங்கள் மிகவும் சகஜம். ஆனால், கடுமையான வீழ்ச்சி, உயர்வு போன்ற அசாதாரண நிகழ்வுகளுக்கு நிச்சயம் பல காரணங்களை சொல்ல முடியும்.
அமெரிக்கா வளர்ச்சி
இதற்கெல்லாம் ஆரம்பம், வழக்கம்போல், அமெரிக்கா தான். அங்கே, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின், பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.வேலைவாய்ப்புகள் உயர்ந்து வருகின்றன. பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது, பணவீக்கமும் அதிகரிக்கும். அதை கட்டுப்படுத்த, வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டியது அவசியம். அப்போது தான் பொருளாதாரத்தைச் சமநிலைப்படுத்த முடியும்.இந்த நடைமுறை தான் அமெரிக்காவிலும் பின்பற்றப்படுகிறது.
இந்தாண்டு, ஏப்ரல் – ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில், 4.2 சதவீத அளவுக்கு அமெரிக்கா வளர்ச்சி அடைந்துள்ளது. இது, 2016, ஏப்ரல் – ஜூன் காலாண்டில், 1.3 சதவீதமாக இருந்தது. ஆக, இரண்டு ஆண்டுகளில், வளர்ச்சி, 200 சதவீதத்தை தாண்டியுள்ளது.இதையொட்டி, அந்நாட்டின் பணவீக்கம், 2 சதவீதத்தை எட்டியுள்ளது. இது, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 3 சதவீதத்தைத் தொடலாம் என்பது கணிப்பு. உடனே அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்த துவங்கிவிட்டது.
கடந்த, 2016ல் அந்நாட்டில் வட்டி விகிதம் பூஜ்ஜியமாக இருந்தது. அதனால், நல்ல வருவாய் ஈட்டக்கூடிய நாடுகளில் முதலீடு செய்யலாம் என, பல்வேறு பண்டுகளும், முதலீட்டாளர்களும், வளரும் நாடுகளை நோக்கி நகர்ந்தனர்.தற்போது, அமெரிக்காவில் வட்டி விகிதம், 2 சதவீதமாக உயர்ந்துவிட்டதால், பல பண்டுகளும், முதலீட்டாளர்களும், பல்வேறு நாடுகளில் இருந்து தங்கள் முதலீடுகளைப் திரும்ப எடுத்து, அமெரிக்காவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், டாலர் தேவை அதிகமாகிவிட்டது. இதனால், சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதையொட்டி, வர்த்தகம் செய்து வரும் பிற நாடுகளில், நாணயங்கள் தத்தமது மதிப்புகளை இழந்து வருகின்றன.இந்திய ரூபாயும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தாண்டில் மட்டும், டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு, 11சதவீதம் சரிந்துள்ளது.
உள்நாட்டு பிரச்னைகள்
நாம் மட்டும் இந்த பாதிப்பைச் சந்திக்கவில்லை. பல நாட்டு கரன்சிகளும் சரிவைச் சந்தித்துள்ளன. துருக்கியின், லிராவில், 40 சதவீத சரிவு; அர்ஜென்டினாவின், பெசோவில், 50 சதவீத சரிவு; பிரேசிலின், ரியால், 20 சதவீத சரிவு; ரஷ்யாவின், ரூபிள், 15 சதவீத சரிவை சந்தித்துள்ளன. ஆசிய நாடுகளின் கரன்சி மதிப்பும் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கென்றே இருக்கும் பிற பிரச்னைகளும் சேர்ந்து கொண்டுள்ளன. முக்கியமானது நடப்பு கணக்கு பற்றாக்குறை.அதாவது, நாம் ஏற்றுமதி செய்து பெறும் வருவாய்க்கும், இறக்குமதி செய்வதன் மூலம் ஆகும் செலவுக்கும் இடையே உள்ள இடைவெளி தான், நடப்பு கணக்கு பற்றாக்குறை.நம் ஏற்றுமதியை விட, இறக்குமதி மிக அதிகம். இதனால், நாம் பிற நாடுகளுக்குத் தர வேண்டிய தொகையும் அதிகம்.
முக்கியமாக கச்சா எண்ணெய். நம் எரிபொருள் தேவையில், ௮0 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறோம். இது மட்டுமல்ல. உரங்கள், மருந்துகள், இரும்பு தாது ஆகியவற்றையும் இறக்குமதி செய்கிறோம்.இவை எல்லாவற்றையும் வாங்க, நமக்கு டாலர் தேவை. டாலரோ அரிதாகிக் கொண்டே வருகிறது. அதனால், கூடுதல் விலை கொடுத்து, டாலரை வாங்க வேண்டிய நிலை. இதனாலும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு சரிவு தொடர்கிறது.
பாதிப்பு
ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நேரடியாக நம் கண்ணுக்குத் தெரியக் கூடியது. பணவீக்கமும் இதனோடு சேர்ந்து கொள்ள, வீட்டு உபயோகப் பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் சாதனங்கள் ஆகியவற்றின் விலை, கணிசமாக உயர்ந்துவிடும்.
உதாரணமாக, தங்கம், வைரம், நிலக்கரி ஆகியவற்றின் விலை உயர்ந்துவிடும். எலக்ட்ரானிக் கருவிகள், தொலைதொடர்பு சாதனங்கள், பல்வேறு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதிரிபாகங்கள், ரசாயனங்கள், மருந்துகள், பிளாஸ்டிக், சமையல் எண்ணெய், அச்சுக் காகிதம், உருக்கு, தாதுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துவிடும்.உங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் படித்தால், அவர்களுக்காக நீங்கள் செய்யும் செலவுகள் உயர்ந்துவிடும். வெளிநாட்டு சுற்றுலா செல்வதால், கொஞ்சம் கூடுதலாகச் செலவாகும்.
என்ன தீர்வு?
ஒவ்வொரு நாடும் தத்தமது நாணயத்தின் மதிப்பைக் காப்பாற்ற, வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன. உதாரணமாக, அர்ஜென்டினா சமீபத்தில், அடிப்படை வட்டி விகிதத்தை, 15 சதவீதம் உயர்த்தி, 60 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.இந்தோனேஷியா, இதேபோல் உயர்த்தியுள்ளது. இந்தியா, இந்த அளவுக்கு இல்லையென்றாலும், இன்னும் உயர்த்தலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.
ஏற்கனவே, 6.5 சதவீதமாக இருக்கும் வட்டி விகிதம், இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் இரண்டு முறை உயர்த்தப்படலாம் என்ற ஹேஷ்யம் சொல்லப்படுகிறது. இதன் மூலம், பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, அதன் மூலம் பணவீக்கத்தைக் குறைக்கலாம் என்பது ஒரு திட்டம்.
இரண்டாவது வழிமுறை, அன்னிய செலாவணி சந்தையில் நுழைந்து, டாலர்களை வாங்கிக் குவிப்பது. இந்தோனேஷியா இதைச் செய்திருக்கிறது. அதாவது தம்மிடம் இருக்கும் சேமிப்புகளைக் கொட்டி, டாலரை வாங்குவது.இதை, ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது சிறிய அளவில் செய்து வருகிறது. ஆனால், இது நிரந்தரத் தீர்வு அல்ல. அன்னிய செலாவணி கையிருப்பு இதனால் குறைந்துபோய், வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.
மூன்றாவது வழிமுறை, இறக்குமதி வரியை உயர்த்துவது. இதனால், உள்நாட்டிலேயே தயாரிக்கக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்யவிடாமல் தடுக்கலாம்.இந்தோனேஷியா, 100 பொருட்களை இனங்கண்டு, அவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. அதன் மூலம், தேவையற்ற வகையில் அன்னிய செலாவணி கரையாமல் சமாளிக்கிறது.
இந்தியாவும் இதேபோல், எதையெல்லாம் உள்நாட்டில் உற்பத்தி செய்யலாம் என, ஒரு பட்டியல் தயாரித்து, அவற்றின் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கலாம். கடந்த, 2013ல் ரூபாய் மதிப்பு சரிந்தபோது, தங்கத்தின் இறக்குமதி மீது இந்தியா கூடுதல் வரி விதித்தது நினைவிருக்கலாம்.
நான்காவது வழிமுறை, உடனடி பலனைத் தரக்கூடியது. மன்மோகன் சிங்கும், ரகுராம் ராஜனும் இதை முன்னரே செய்திருக்கின்றனர். அதாவது, வங்கிகளில், அன்னிய செலாவணியில், ‘டிபாசிட்’ செய்யும், எப்.சி.என்.ஆர்.,வைப்பு கணக்கிற்கு, கவர்ச்சிகரமான வட்டி வழங்கலாம். இதனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தம் நாட்டில் உள்ள வங்கிகளில் இருந்து, 1 சதவீதத்துக்கு கடன் வாங்கி, அதிக அளவில் டாலரில் டிபாசிட் செய்ய முன்வருவர்.
இதன்மூலம், இந்தியாவுக்குத் தேவைப்படும் அன்னிய செலாவணி பெருமளவு வந்து கொட்டும். உடனடியாக, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 68 ரூபாய்க்கு உயர்ந்துவிட வாய்ப்புண்டு.எல்லாவற்றுக்கும் மேல், தற்சார்பு ஒன்று தான் நம்முடைய பல பொருளாதார நோய்களுக்கு ஒரே தீர்வு.நம் இந்தியச் சந்தை மிகப்பெரிய சந்தை. நமக்காக உற்பத்தி செய்து, நம் மக்கள் மத்தியிலேயே விற்பனையை மேற்கொண்டு, உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஒன்றே நல்ல தீர்வு.
அமெரிக்கா அப்படித் தான் இப்போது தற்சார்பை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவிடம் இருந்து நாம், எதையெதையோ கற்றுக் கொள்கிறோம், இதையும் கற்றுக்கொள்வோமே!
– ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|