பதிவு செய்த நாள்
12 செப்2018
00:30
புதுடில்லி:வளைகுடா
நாடுகள் தவிர்த்து, அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி
அதிகரித்துள்ள போதிலும், அதன் விலை குறைவதற்கான சூழல்,
தெரியவில்லை.
கடந்த, 2016 வரை, கச்சா எண்ணெய் உற்பத்திக்கு ஏற்ப,
தேவை உயராததால், அதன் விலை, குறைந்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில்,
ஒரு பீப்பாய், ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை, 24 டாலர் வரை கூட
சரிந்தது.
பிரென்ட் கச்சா எண்ணெய் என்பது கச்சா எண்ணெய் ரகங்களில் ஒருவகை. இது அடர்த்தி குறைவாக இருக்கும். பிரென்ட்
கச்சா எண்ணெய் விலை சரிந்ததற்கு, அமெரிக்காவின் கச்சா எண்ணெய்
மற்றும் பாறைகளில் இருந்து எடுக்கப்படும் ‘ஷேல்’ காஸ் உற்பத்தி
அதிகரிப்பு; பொருளாதார தடை நீக்கப்பட்ட பின், ஈரான் மீண்டும் கச்சா
எண்ணெயை சர்வதேச சந்தைக்கு அனுப்பியது ஆகிய காரணங்களை
குறிப்பிடலாம்.
அதனால், இனி கச்சா எண்ணெய் விலை, கட்டுக்குள்
இருக்கும் ; இதனிடையே, வளரும் நாடுகள், உயிரி எரிபொருள் பயன்பாட்டை
அதிகரித்து, கச்சா எண்ணெய் சார்பு நிலையை குறைத்துக் கொள்ளும்
என்பது, சந்தையாளர்களின் அனுமானமாக இருந்தது.
சுத்திகரிப்பு
இந்த
இரு கணிப்புகளும் ஓரளவு சாத்தியமான போதிலும், ஒரு பீப்பாய் கச்சா
எண்ணெய் விலை, கிடுகிடுவென உயர்ந்து, 70–-7௮ டாலரை எட்டியுள்ளது.இதற்கு,
கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’, கச்சா
எண்ணெய் உற்பத்தியை, நாள் ஒன்றுக்கு, 18 லட்சம் பேரல் குறைத்தது
என்பது, பொதுவான காரணம்.
ஆனால், கச்சா எண்ணெய் விலை உயரும்
போதெல்லாம், ‘ஒபெக்’ நாடுகளின் உற்பத்தியை அதிகரிக்க
நிர்பந்திக்கும் அமெரிக்கா, தற்போது மவுனமாக இருப்பது, மற்றொரு காரணம்
எனலாம். அமெரிக்கா,
கச்சா எண்ணெய் உற்பத்தியில், அமெரிக்கா, மூன்றாவது இடத்திற்கு
முன்னேறியுள்ளது. அதன், 'டெக்சாஸ் லைட் ஸ்வீட்' ரக கச்சா எண்ணெய், வளைகுடா நாடுகளின் 'பிரென்ட்' ரக கச்சா எண்ணெய்யை விடவும், அடர்த்தி குறைவானது.
ஆனால்,
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள சுத்திகரிப்பு தொழிற்சாலைகள்,
'பிரென்ட்' கச்சா எண்ணெய்க்கு ஏற்ற, தொழில்நுட்பங்களுடன்
செயல்பட்டு வருகின்றன.அதனால், அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியில், அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.இத்தனைக்கும்,
'பிரன்ட்' ஐ விட, அமெரிக்க கச்சா எண்ணெய் விலை குறைவுதான்.
இருந்தும், சுத்திகரிப்பு செலவினங்கள் காரணமாக, லாப வரம்பு
குறையும் என்பதால், அதிகம் இறக்குமதி செய்வதில்லை.
ஆனால்,
தற்போது பல நாடுகள், அமெரிக்க கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத்
துவங்கியுள்ளன. அதற்காக, நவீன தொழில்நுட்பத்தில், சுத்திகரிப்பு
தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன.இதையடுத்து, அமெரிக்காவின்
கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்தபோதிலும், சர்வதேச சந்தையில்
அதன் விலை குறைவில்லை. இதன் பின்னணியில் தான், அமெரிக்காவின்
அரசியல் விளையாட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு,
அமெரிக்காவை பொருத்தவரை, டாலர் மதிப்பிலும், வர்த்தகப்
பற்றாக்குறையிலும் மிகக் குறைவான தாக்கத்தையே
ஏற்படுத்தியுள்ளது.இன்னும் சொல்வதென்றால், கச்சா எண்ணெய்
விலை உயர்வால், அமெரிக்கா பயனடைந்து வருகிறது; அதன் பொருளாதாரம்,
வளர்ச்சி கண்டு வருகிறது. அமெரிக்கா, நிகர கச்சா எண்ணெய்
உற்பத்தியில், வெகு விரைவில், ரஷ்யாவை விஞ்சும் என, ஆய்வுகள்
கூறுகின்றன.
அதனால் தான், கச்சா எண்ணெய் விலை உயரும்போது,
உற்பத்தியை அதிகரிக்குமாறு, 'ஒபெக்' நாடுகளை நிர்பந்திக்காமல்,
அமெரிக்கா மவுனமாக உள்ளது.மேலும், ஈரான் மீது பொருளாதார
தடையை அமெரிக்கா அறிவித்துள்ளதால், பல நாடுகள், ஈரான் கச்சா
எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.
இந்நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு இந்தாண்டு வரை நீடிக்கும் என, ஒபெக்
நாடுகள் அறிவித்துள்ளன. அதனால், சப்ளைக்கும், தேவைக்கும் உள்ள இடைவெளி மேலும் அதிகரிக்கும் என்பதால், கச்சா எண்ணெய் விலை, குறைய வாய்ப்பில்லை.
நடப்பு கணக்கு
கச்சா
எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவுக்கு இறக்குமதி செலவினம்
அதிகரிக்கும். உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம், அமெரிக்க
டாலரில் தான் நடைபெற்று வருகிறது.
அதனால் எந்த
நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கினாலும், டாலரில் தான் இந்தியா
வாங்க வேண்டும். தற்போது, டாலர் மதிப்பு உயர்ந்து, அதற்கு நிகரான
ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.
அதனால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, இந்தியா
அதிக டாலர்களை தர நேரிட்டுள்ளது. இதனால், நாட்டின் நடப்பு கணக்கு
பற்றாக்குறை சுமை மேலும் அதிகரிக்கும் என, சந்தையாளர்கள்
கருதுகின்றனர்.
மாற்று ஏற்பாடு
இந்தியாவும், சீனாவும்,
கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதத்தை, இறக்குமதி மூலம் பூர்த்தி
செய்து கொள்கின்றன. இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி காரணமாக, கச்சா
எண்ணெய் தேவை, மேலும் உயரவே செய்யும். அதனால், இறக்குமதி
செலவும் அதிகரிக்கும். உயிரி எரிபொருள் மற்றும் மரபு சாரா எரிசக்தி
பயன்பாட்டை அதிகரிப்பது ஒன்றே, லாபகரமான மாற்று ஏற்பாடாக
இருக்கும் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|