பதிவு செய்த நாள்
17 செப்2018
00:17
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனைகளின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஐந்து அம்ச செயல்திட்டம் ஒன்றை அறிவித்தார். தற்போது, அரசு எடுத்து வரும் இத்தகைய முயற்சிகளுக்கு பலன் எப்படி இருக்கும்? இவை போதுமானவையா?
இன்றைய நிலையில், இந்தியாவில் டாலருக்கான தேவை, மிகவும் அதிகமாகிவிட்டது. ஆனால், அதற்கான சப்ளையோ குறைவு. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியும், சீனாவோடு அமெரிக்கா மேற்கொண்டு வரும் வர்த்தகப் போரும், இதற்கான முக்கிய காரணங்கள். அதேபோல், நம் உள்நாட்டு காரணங்களில் முக்கியமானது, நடப்பு கணக்குப் பற்றாக்குறை. அதாவது, ஏற்றுமதி குறைவு, இறக்குமதியோ அதிகம். இந்நிலையில், நாம் வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய தொகை கூடிக்கொண்டே போய்விட்டது.
சமீபத்தில், 2018 -– 19ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நம் நடப்பு கணக்குப் பற்றாக்குறை, மொத்த, ஜி.டி.பி.,யோடு ஒப்பிடும் போது, 2.4 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இதற்கு முந்தைய காலாண்டில் இது, 1.9 சதவீதமாக இருந்தது. இவையெல்லாம் சேர்ந்தே, நம் ரூபாயின் மதிப்பு சரிவுக்குக் காரணங்களாகியுள்ளன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 72 ரூபாய்க்கு மேல் சென்றபோது, பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கத் துவங்கினர்.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தலையிட்டு, இந்நிலையை சீர் செய்ய வேண்டும், எனக் கோரினர். அதன் தொடர்ச்சியாக, பிரதமர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. இதன் பின்னணியில், ஐந்து அம்ச செயல்திட்டத்தை, நிதி அமைச்சர், அருண் ஜெட்லி வெளியிட்டார். ‘இப்படி ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறது’ என்ற செய்தி வெளியானவுடனேயே, வெள்ளிக்கிழமை மாலை, ரூபாய் மதிப்பு சற்று தலைநிமிரத் துவங்கியது, கவனிக்கத்தக்கது. அரசு, நிலைமையை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது. நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்ற செய்தியே, சந்தைக்குப் பெரும் தெம்பைக் கொடுத்தது.
மேலும், சில நாட்களாக, மத்திய அரசு, செலாவணி சந்தையில் தலையிட்டு, அவ்வப்போது, டாலர்களை வாங்கியதும், சந்தைக்கு நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. நிதி அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்துள்ள நடவடிக்கைகளை, இப்படிப் பிரித்து புரிந்து கொள்ளலாம். அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துதல். எவையெல்லாம் அத்தியாவசியமற்ற பொருட்கள் என்பதற்கான ஒரு பட்டியல், அனைத்து துறைகளோடும் சேர்ந்து தயாரிக்கப்படும் என்றும், அதன் பின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஏற்று மதிக்கு அதிகம் வாய்ப்பு உள்ளவற்றையும் கண் டறிந்து ஊக்கமளிப்பது.
வெளிநாடுகளில் இருந்து டாலர் முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளன. கடன் பத்திரங்களை வெளியிடுவதில் உள்ள வட்டி சுமைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. பெருநிறுவனங்களின் கடன் பத்திரங்களை வாங்குவதற்கு இருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. உள்நாட்டு வங்கிகளில் இருந்து கடன் பெற முடியாத நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து கடன்களை பெறுவதற்கு இருந்த கட்டுப்பாடுகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக, 8 முதல், 10 பில்லியன் டாலர்கள் (அதிகபட்சம், 57 ஆயிரம் கோடி ரூபாய்) வரை இந்தியாவுக்குள் வரும் என, மத்திய அரசு நம்புகிறது.
இதன் மூலம், நம் டாலர் தேவை, ஓரளவுக்கு பூர்த்தியாகும். ரூபாயின் மதிப்பு படிப்படியாக தலைநிமிரும். இந்நிலையில், பல்வேறு முதலீட்டு ஆலோசனை நிறுவனங்கள் ஒருபக்கம் நம்பிக்கையையும், மறுபக்கம் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன. இந்த நடவடிக்கைகளால், உடனடியாக டாலர்கள் வந்து கொட்ட வாய்ப்பில்லை என்பது முதல் விமர்சனம். அரசு இதுவரை இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், எங்கே வருவாய் அதிகம் என்பதை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பார்க்கவே செய்வர்.
அமெரிக்காவில் தற்சமயம் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், அவர்களுடைய முதலீடுகளுக்கு அங்கேயே போதிய வருவாய் கிடைத்து வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்வதன் மூலம் கிடைத்து வந்த வருவாயோடு ஒப்பிடும்போது, அமெரிக்க வருவாய் சற்று குறைவு தான். ஆனாலும், அது நிலையானதாக, ஏற்றத்தாழ்வுகள் அற்றதாக இருக்கிறது.
ஆனால், இந்தியாவோ, தொடர்ச்சியாக நடப்பு கணக்குப் பற்றாக்குறை, பணவீக்கம் ஆகியவற்றால் தளர்வுற்று இருக்கும்போது, இங்கே போதிய வருவாய் ஈட்ட முடியாத நிலை. அதனால், அன்னிய முதலீட்டாளர்கள் இங்கே வந்து டாலர்களைக் கொட்டுவதற்கான போதிய கவர்ச்சி, அரசின் திட்டங்களில் இல்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. இரண்டாவது, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது. பெட்ரோலியப் பொருட்களைத் தவிர, மற்ற அனைத்தையுமே இந்த வரையறைக்குள் கொண்டு வந்து விடலாம். இதில் பெரும் பாதிப்பை அடையப்போவது தங்கம், பல்வேறு இயந்திரங்களின் உதிரி பாகங்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவை தான்.
இறக்குமதி மீதான தீர்வைகளை சற்று அதிகப்படுத்தினால், இப்பொருட்களின் இறக்குமதியில் சற்று தொய்வு ஏற்படும், இதனால், உள்நாட்டில் இருந்து டாலர் வெளிநாடு போவது சற்று குறைய வாய்ப்புண்டு. அப்போதும், கூடுதல் விலை கொடுத்து வாங்க முன் வருபவர்கள் இருப்பர். ‘அவர்களுக்குச் சேவை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. எந்தப் பொருட்கள் எல்லாம் இந்தப் பட்டியலில் இடம்பெறப் போகின்றன என்பது, இனிமேல் தான் தெரியவரும். இங்கே இறக்குமதி செய்பவர்களின் தொழில் பாதிக்காமல், கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு பட்டியலே தயாராகும் என்பதே எதிர்பார்ப்பு. இந்த ஐந்து அம்ச செயல்திட்டத்தை இப்படிப் புரிந்துகொள்ளலாம். டாலர் முதலீடுகள் வர வேண்டிய சாலையில் உள்ள குண்டு குழிகளைச் செப்பனிட்டு, தார் பூசி மேம்படுத்தி இருக்கிறோம்.
அதில், நாளைக்கே டாலர்கள் உருண்டு ஓடிவரும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், இந்த வழியில் உள்ள தடைகளால் சற்று பின்வாங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள், இனிமேல் துணிச்சலோடு பயணம் செய்ய முன்வருவர். எந்த செயல்திட்டமும் வாய் பேச்சிலோ, காகிதத்திலோ இருந்து பலன் இல்லை. அதை விரைந்து நடைமுறைப்படுத்தும் போது தான், சாதக பாதகங்கள் தெரியவரும். போதுமான டாலர், இந்தியச் சந்தைக்குள் ஓடிவரத் துவங்கினால் தான், அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவும், அங்கீகாரமும் கிடைத்ததாக பொருள். திங்கட்கிழமை சந்தை, இதற்குச் சாதகமான பதிலை வைத்துக் காத்திருக்கும் என்று நம்புவோம்!
–ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|