பதிவு செய்த நாள்
19 செப்2018
23:40
புதுடில்லி : அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், அவற்றுக்கான சுங்க வரி உயர்வை, மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.
அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலையேற்றம் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால், ரூபாய் வெளி மதிப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது. இந்தாண்டில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 13 சதவீதம் குறைந்துள்ளது. இதில், கடந்த ஆகஸ்ட் முதல், தற்போது வரை, 6 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளது.
செலவினம் :
இத்துடன், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளதால், நாட்டின் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, இலக்கை விஞ்சி, 2.8 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2015- – 16 மற்றும் 2016 -– 17ல், முறையே, 0.6 சதவீதம் மற்றும், 1.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
ஏற்றுமதியை விட, இறக்குமதி உயர்ந்துள்ளதால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. இந்தாண்டு, ஏப்ரல் – ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், வர்த்தகப் பற்றாக்குறை, 8,040 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 6,730 கோடி டாலராக இருந்தது.
இந்த சவாலை சமாளிக்க, மத்திய அரசு, ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அத்துடன், அவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் முடிவு செய்து உள்ளது.
குறுகிய கால தாக்கம் :
இது குறித்து, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், சுபாஷ் சந்திர கார்க் கூறியதாவது: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்படும் திடீர் ஏற்றத்தாழ்வுகள், குறுகிய கால தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம். கடந்த சில வாரங்களில், ரூபாய் வெளி மதிப்பு, 10 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. இது தற்காலிக தாக்கம் தான்.
மத்திய அரசு, ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்கவும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கவும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில், அவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கவும், வரியை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு கடன்களை திரட்ட, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். மேலும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு, அவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என, கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார்.
வேளாண் பொருட்களுக்கு முக்கியத்துவம் :
நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க, நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியா, 3,000 கோடி டாலர் மதிப்பிலான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இதை, 10 ஆயிரம் கோடி டாலராக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வேளாண் பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|