பதிவு செய்த நாள்
23 செப்2018
23:33
‘பொதுத் துறை வங்கிகளான, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்கப்படும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது வரவேற்பையும், சந்தேகங்களையும் ஒருங்கே எழுப்பியுள்ளது.
இதனால் ஏற்படக்கூடிய பயன்கள் என்னென்ன?
இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளை இணைத்து, எண்ணிக்கையைக் குறைத்து, வலுவான வங்கிகளாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசும், தற்போதைய பாரதிய ஜனதா தலைமையிலான அரசும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.சென்ற முறை பாரத ஸ்டேட் வங்கியோடு, அதன் ஐந்து துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. தற்போது, பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகள் இணைக்கப்பட உள்ளன.
இதை எப்படி புரிந்து கொள்வது?
வங்கித் துறையில் இன்று உள்ள முக்கியமான பிரச்னை, வாராக்கடன். இதில் தலைமூழ்கி தத்தளிக்கும் வங்கிகள், 11; அதில் தேனா வங்கியும் ஒன்று.
வாராக்கடன் :
இவற்றையெல்லாம், ‘உடனடி நடவடிக்கை தேவைப்படும்’ வங்கிகள் என, ஆர்.பி.ஐ., வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள வங்கிகளால், ஆர்.பி.ஐ., கட்டுப்பாட்டின் படி, புதிய கிளைகளைத் துவங்க முடியாது; புதிதாக பணியாளர்களை நியமிக்க முடியாது; புதிதாக கடன்களைக் கொடுக்க முடியாது; வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ளவும் முடியாது. ஆனால், வாராக்கடனில் இருந்து மீள வேண்டும்.
காலைக் கட்டிக்கொண்டு நீச்சலடிப்பதற்கு ஒப்பானது இது. வேறு வழியில்லாமல் இவ்வங்கிகளை, அரசு தான் மீட்டாக வேண்டும். அதனால் தான், பாங்க் ஆப் பரோடா மற்றும் விஜயா வங்கி என்ற இரண்டு வலிமையான குதிரைகளை, தேனா வங்கி என்ற சோனி குதிரையோடு இணைக்கவிருக்கின்றனர். இவை மூன்றும் சேர்ந்து, இந்தியாவின் மூன்றாவது வலிமையான வங்கியை உருவாக்கும் என்பதே எதிர்பார்ப்பு.
ஏற்கனவே வாராக்கடனில் தத்தளிக்கும், ஐ.டி.பி.ஐ., வங்கியை, எல்.ஐ.சி., கையகப்படுத்துவதன் மூலம், அந்த வங்கியைக் காப்பாற்ற, மத்திய அரசு முயற்சி செய்தது; தற்போது தேனா வங்கி.
சவால்கள் :
இணைப்புக்கான காரணங்களில் ஒன்று, பொதுத்துறை வங்கிகளுக்கான தலைமைகளைத் தேடி நியமிப்பதில் உள்ள சிக்கல். இந்தியாவிலுள்ள, 21 பொதுத் துறை வங்கிகள் பலவற்றில் தலைவர்களோ, நிர்வாக இயக்குனர்களோ பல மாதங்களாக நியமிக்கப்படவில்லை. அந்தந்த வங்கிகளில், அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கும் ஆரோக்கியமான மனிதவள நெறிமுறை, பின்பற்றப்படவில்லை. இதனால், வங்கிகளை இணைத்துவிட்டால், தலைவர் பற்றாக்குறையைத் தீர்த்துவிடலாம் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு இருக்கலாம் என்பது, பொருளாதார நிபுணர்கள் கருத்து.
இந்த மூன்று வங்கிகளையும் உடனடியாக இணைப்பதற்கு இன்னொரு அடிப்படை, இவை பயன்படுத்தும் வங்கித் துறை மென்பொருள். இன்போசிஸ் நிறுவனத்தின் பின்னக்கல், 10 என்ற தொழில்நுட்பத்தை இவை மூன்றுமே பயன்படுத்துவதால், இவற்றின் வங்கிச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் இருக்காது என, கருதப்படுகிறது. வங்கிகளை இணைப்பதன் மூலம், அவற்றிடம் இருக்கக்கூடிய வசதி, வாய்ப்புகள் பங்கிட்டுக் கொள்ளப்படும்; செலவுகள் குறையும்; சேவைகள் மேம்படும் என, மத்திய அரசு கருதுகிறது. ஆனால், இணைப்புகளின் மூலம், எதிர்பார்க்கப்பட்ட பலன்கள் கிடைத்துள்ளனவா... என்பது மிகப்பெரும் கேள்விக்குறி.
உலகெங்கும் வங்கி இணைப்புகளால் எதிர்பார்க்கப்பட்ட பலன்களில், 30 சதவீதமே கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கிறது ஓர் ஆய்வு. மாறாக, பல பிரச்னைகள் தான் தலைதுாக்கியுள்ளன. முக்கியமாக, ஒரே பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளின் கிளைகள் இருக்கலாம். உபரியாக இருக்கக்கூடிய கிளைகளை மூட வேண்டும். பணியாளர்களை வேறு கிளைகளுக்கு மாற்ற வேண்டும் அல்லது வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி இணைப்பில், அடுத்த சில ஆண்டுகளில் பல பணியாளர்கள் ஓய்வு பெறுவர் என்பதால், அவர்களை நீக்க வேண்டிய தேவை எழாது என்று சொல்லப்படுகிறது.
மேலாளர்கள், துணைப் பொது மேலாளர்கள், பொது மேலாளர்கள் என, ஒவ்வொரு வங்கியும் தனித்தனியே ஒரு அதிகார அடுக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும். வங்கிகள் இணைக்கப்படும்போது, எந்த மேலாளர், எந்த உயரதிகாரிக்குப் பதில் சொல்ல வேண்டும், யாருடைய உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதையெல்லாம் நிர்ணயிப்பது, அடுத்த ஒரு பெரிய சவால். மேலும், ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு வேலை கலாசாரம் இருக்கும். அவற்றை ஒருங்கிணைப்பது அடுத்த ஒரு சவால்.
லாபம் ஈட்டுமா?
வங்கிகளை இணைப்பதால், அவை லாபமீட்டத் துவங்கிவிடுமா... என்பது தான் முக்கியமான கேள்வி. வங்கிகளின் முக்கியமான தொழில் கடன் கொடுப்பது. தகுதி பார்த்து, தரம் உணர்ந்து, திரும்பி வரக்கூடிய கடன்களைக் கொடுப்பது மட்டுமே வங்கிகளை காப்பாற்றும். வங்கிகளை இணைப்பதால், கடனின் தரத்தில் எந்தப் பெரும் மாறுதலும் ஏற்படப் போவதில்லை. கடன் வழங்கும் நடைமுறைகளில் முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறை ஏற்பட்டால் தான், நம்பிக்கை ஏற்படும். பெரிய வங்கிகளாக இருந்தால், அவற்றால் எத்தகைய நஷ்டங்களையும் தாங்கிக்கொள்ள இயலும் என்பது, மற்றொரு தவறான புரிதல். சின்ன வங்கிகள் நஷ்டமடைந்தால், அவற்றை ஏதேனும் ஒரு பெரிய வங்கியோடு இணைத்துக் காப்பாற்றிவிட முடியும்.
வங்கி நஷ்டமடைந்தால்?
இந்தியாவுக்கு எதற்கு இத்தனை பொதுத்துறை வங்கிகள் என்ற கேள்வியே தவறு. அமெரிக்காவில், 7,000 வங்கிகளும்; ஜெர்மனியில், 1,800 வங்கிகளும்; ஸ்பெயினில், 300 வங்கிகளும் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் இத்தனை வங்கிகள் தான் இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சின்ன வங்கிகளாக இருந்தால், அவை இயங்கும் பகுதியையும், அங்குள்ளோரின் தேவைகளையும் நன்கு புரிந்துகொள்ள முடியும்; அதற்கேற்ப சேவைகளை வழங்கி, லாபமீட்ட முடியும். பெரிய வங்கிகளாக மாறிவிட்டால், சட்ட திட்டங்களும், நெறிமுறைகளும், கெடுபிடிகளும் கோலோச்சத் துவங்கிவிடும். வங்கி பக்கமே பலர் வர முடியாத அளவுக்கு அதன் பிரமாண்டமே பயமுறுத்தி துரத்திவிடும்.
வங்கியின் தரம் என்பது, அவற்றை இணைப்பதில் இல்லை; செம்மையாக நடத்துவதிலும், மேம்படுத்துவதிலுமே இருக்கிறது. லட்சோப லட்சம் மக்களின் வியர்வையிலும், கண்ணீரிலும் உருவான சேமிப்புகளை நிர்வகிக்கிறோம் என்ற பொறுப்புணர்வு அவசியம். இப்போதைக்கு பேலன்ஸ் ஷீட்டுகள் தான் இணைந்துள்ளன; அதிலுள்ள லாப அளவு உயர்ந்தால் தான், இந்த இணைப்புகளுக்கு நியாயம் கிடைக்கும்.
–ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|