பதிவு செய்த நாள்
09 அக்2018
23:32
வாஷிங்டன்:'இந்திய பொருளாதாரம், இந்தாண்டு, 7.3 சதவீதமாகவும், 2019ல், 7.4 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி காணும்' என, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள, பாலி தீவில், பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.அதில், சர்வதேச பொருளாதார நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை, பன்னாட்டு நிதியம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இந்தியாவில், சில ஆண்டுகளாக முக்கிய சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஜி.எஸ்.டி., நிறுவன திவால் சட்டம், பணவீக்கம் அடிப்படையிலான நிதிக் கொள்கை, தொழில் துவங்கும் நடைமுறைகளை எளிமையாக்கியது ஆகியவற்றை கூறலாம்.தளர்வுபல துறைகளில், கட்டுப்பாடுகளை தளர்த்தி, அன்னிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்ற, பல்வேறு அடிப்படை சீர்திருத்தங்களால், இந்தியாவில் தேவைப்பாடு அதிகரித்து, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழி கோலப்பட்டுள்ளது.அதனால், நடப்பாண்டு, இந்தியாவின் பொருளாதாரம், 7.3 சதவீத வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2017ல், 6.7 சதவீதமாக இருந்தது.சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளவிலான இறுக்கமான நிதிச் சூழல் போன்றவற்றால், 2019ல், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி, ஏப்ரல் மதிப்பீட்டை விட, சற்று குறைவாக, 7.4 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.ஜி.எஸ்.டி., மற்றும் அன்னியச் செலாவணி மதிப்பின் தாக்கத்தையும் மீறிய இந்த வளர்ச்சிக்கு, தனியார் துறையில் தேவை அதிகரித்து வருவதும், பெருகி வரும் முதலீடுகளும் துணை நிற்கும்.
இந்தியாவின் நடுத்தர கால வளர்ச்சி, 7.75 சதவீதமாக இருக்கும். இதுவும், ஏப்ரல் மதிப்பீட்டை விட, அரை சதவீதம் குறைவுதான்.சீர்திருத்தம்இந்த கணிப்புகள் உண்மையாகும்பட்சத்தில், இந்தியா, உலகில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டு வரும் நாடு என்ற சிறப்பை, மீண்டும் பெறும். அதுமட்டுமின்றி, இந்தாண்டு, வேகமான பொருளாதார வளர்ச்சியில், சீனாவை விஞ்சி, 0.7 சதவீதம் ; 2019ல், 1.2 சதவீதம் என்ற அளவில் முன்னேற்றம் காணும்.
இந்தியாவில், வர்த்தகச் சூழல் இன்னும் மேம்பாடு காண வேண்டும். அத்துடன், தொழிலாளர் துறை, ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றில் மேலும் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகத்தை மேம்படுத்தி, வங்கிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளை, சீர்படுத்த வேண்டும். இதன் மூலம், மீண்டும் வங்கிகளின் கடன் வளர்ச்சியை அதிகரிக்கவும், வங்கித் துறையின் கடன் வழங்கும் திறனை மேம்படுத்தவும் முடியும்.
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு, இந்தியா முன்னுரிமை அளிக்க வேண்டும்.அதிக வட்டிச் சுமையும்,கடன் பத்திர வட்டி வருவாய் உயர்வும், இடர்ப்பாட்டுக்குரியவை என்பதால், அவற்றை உன்னிப்பாக கவனித்து வர வேண்டும்.இத்தகைய நடவடிக்கைகளுடன், மேலும் மானியங்களை குறைத்து, அதிகமானோரை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வருவதும், வளர்ச்சிக்கு முக்கியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு
அமெரிக்கா, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதால், மறுமதிப்பீட்டில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக இருந்தது. இது, இந்தாண்டு, 6.6 சதவீதமாகவும், 2019ல், 6.2 சதவீதமாகவும் குறையும்.
பன்னாட்டு நிதியம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|