பதிவு செய்த நாள்
10 அக்2018
23:34
புதுடில்லி:போலிகளை ஒழிக்க, 'ஆடிட்டர்' சான்றளிக்கும் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கைக்கு, தனி அடையாள எண்ணுடன், வலைதளத்தில் பதிவு செய்யும் திட்டம், 2019, ஜன., 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
இது குறித்து, ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய பட்டயக் கணக்காளர் மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:கணக்கு தணிக்கை நிறுவனங்கள் அல்லது 'ஆடிட்டர்' எனப்படும் பட்டயக் கணக்காளர்கள், நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கையை தயாரித்து சான்று அளிக்கின்றனர். சமீப காலமாக, பட்டயக் கணக்காளர்களின் கையெழுத்து, கணக்கு தணிக்கை நிறுவனங்களின் முத்திரை ஆகியவற்றுடன் போலி ஆவணங்கள் புழங்குவதாக கூறப்படுகிறது.
நிறுவனங்கள், இதுபோன்ற போலி ஆவணங்கள் மூலம், நிதியாதாரம் வலுவாக உள்ளதாக வங்கிகளை ஏமாற்றி, கடன் பெறுவது கவனத்திற்கு வந்துள்ளது.பினோத் குமார் அகர்வாலா வழக்கில், இத்தகைய மோசடி நடந்திருப்பது, மையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.இது போன்ற மோசடிகள், ஐ.சி.ஏ.ஐ.,யில் பதிவு செய்து, கணக்கு தணிக்கை தொழில் புரியும், 2.92 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை பாதிப்பதாக உள்ளது.
‘உதின்’ திட்டம்
இத்தகைய மோசடிகளை தடுக்க, ‘உதின்’ எனப்படும், தனித்துவ ஆவண அடையாள எண்ணுடன், ஆவணங்களை பதிவதற்கான, வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் வரவு – செலவு கணக்கை தணிக்கை செய்து சான்றளிக்கும் அனைத்து பட்டயக் கணக்காளர்களும், அந்த ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி எண் அளித்து, உதின் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதன் மூலம், உறுப்பினர்கள் சான்றளித்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை, சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.இந்த நடைமுறையை, அனைத்து பட்டயக் கணக்காளர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதனால், நிறுவனங்கள், போலியான கணக்கு தணிக்கை ஆவணங்கள் மூலம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை ஏமாற்றி கடன் பெறுவது தடுக்கப்படும்.அனைத்து பட்டயக் கணக்காளர்களும், 2019, ஜன., 1 முதல், சான்று வழங்கும் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை, உதின் வலைதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலி ஆவண வழக்கு
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, பினோத் குமார் அகர்வாலா, வங்கி கடன் பெற, சொத்து மதிப்பை உண்மைக்கு மாறாக உயர்த்தி காட்டியுள்ளார். இது தொடர்பாக, வருமான வரி துறை தொடர்ந்த வழக்கை விசாரித்த, கோல்கட்டா உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், அகர்வாலா சொத்துக்களை மதிப்பிட்டு, சான்றளித்த கணக்கு தணிக்கை நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தது.
இதுபோன்ற செயல்களால் தான், வங்கிகள் அளிக்கும் கடன் திரும்ப வருவதில்லை என, காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், இந்திய பட்டயக் கணக்காளர் மையம், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டனர்.இதையடுத்து நடந்த விசாரணையில், கணக்கு தணிக்கை நிறுவனம், பினோத் குமார் அகர்வாலாவுக்கு எந்த சான்றும் அளிக்கவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், அந்நிறுவனம், போலி முத்திரை மற்றும் கையெழுத்துடன் மோசடி செய்த பினோத் குமார் அகர்வாலா மீது, கார்க்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.இதுபோன்ற மோசடியை தடுக்கவே, அனைத்து கணக்கு தணிக்கையாளர்களும், சான்று ஆவணங்களுக்கு தனி எண் வழங்கி, உதின் வலைதளத்தில் பதியும் நடைமுறையை, இந்திய பட்டய கணக்காளர் மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|