பதிவு செய்த நாள்
12 அக்2018
23:57
புதுடில்லி:மத்திய அரசு, மின்னணு மற்றும் மொபைல் போன் சாதனங்கள் தயாரிப்பில் இடம்பெறும் பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 10 சதவீதம் உயர்த்தி, 20 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
மேலும், மொபைல் போன் மற்றும் போக்குவரத்துக்கான மின்னணு சாதனங்களில் பயன்படும், பி.சி.பி., இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு ரத்து செய்யப்பட்டு, 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.இதனால், இறக்குமதி பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்கள், மொபல் போன் உள்ளிட்ட தொலை தொடர்பு சாதனங்கள் விலை அதிகரிக்கும்.
நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்துள்ளதால், வர்த்தகப் பற்றாக்குறை உயர்ந்து உள்ளது. இதை கட்டுப்படுத்த, அவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ரூபாய் மதிப்பு சரிவால், கச்சா எண்ணெய் உட்பட, நாட்டின் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது.இதன் தாக்கத்தால், நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இதை சமாளிக்கும் நோக்கிலும், மின்னணு, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகள் சார்ந்த பொருட்களுக்கு, இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த, 2002க்கு பின், இந்தாண்டு தான், ரூபாய் வெளி மதிப்பு, தொடர்ந்து சரிந்து வருகிறது. வரும் டிசம்பருக்குள், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 75ஐ எட்டும் என, 'புளும்பெர்க்' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.இந்தாண்டு, தற்போது வரை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 13 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்து உள்ளது.
மத்திய அரசு, செப்., 26ல், 19 பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதையடுத்து, தற்போது மீண்டும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு, நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|