பதிவு செய்த நாள்
15 அக்2018
23:48
மும்பை:இந்தியாவைச் சேர்ந்த, 74 நிறுவனங்கள், ஜெர்மனியில், 94,270 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ள தகவல், ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.இ.ஒய்., எனும் நிறுவனம், இந்தோ- ஜெர்மன் வர்த்தக சபை மற்றும் இந்திய தொழிலக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஜெர்மனியில் உள்ள, 74 நிறுவனங்கள், 94,270 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளன; மேலும், 23,300 பேருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி உள்ளன.வாகனம், உலோகம், ரசாயனம், தொழில்நுட்ப சேவை என, முக்கியமான நான்கு துறைகளின் வருவாயில், 95 சதவீதத்தையும், வேலைவாய்ப்பில், 89 சதவீதத்தையும் இந்த இந்திய நிறுவனங்கள் ஈர்த்துள்ளன.
ஜெர்மனியில், 213 இந்திய நிறுவனங்களின் துணை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், 74 நிறுவனங்கள், ஆண்டுக்கு, 85.70 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களாக உள்ளன. இவற்றின் மொத்த ஆண்டு வருவாய், 94,270 கோடி ரூபாய்.சிறப்பான உள்கட்டமைப்பு, சாதகமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வசதி, புத்தாக்கத்துக்கான வாய்ப்பு, திறன்மிகு ஊழியர்கள் ஆகியவை, பிரமாதமான வணிக சூழலை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன.மேலும், தற்போதைய சூழலில், ஐரோப்பிய சந்தை, இந்திய நிறுவனங்களுக்கு முக்கியமான ஒன்றாகி உள்ளது.
கட்டுபடியாகும் விலையில் தரமான வாழ்க்கை வாழும் சூழலும், இந்திய முதலீட்டாளர்களை ஜெர்மனி நோக்கி ஈர்த்து உள்ளது.அரசால் இலவசமாக வழங்கப்படும் கல்வியும், அதன் தரமும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஏற்ற இடமாக ஜெர்மனியை மாற்றியுள்ளது. பாதுகாப்பு விஷயமும் மேம்பட்டதாக இருப்பதால், இந்திய முதலீட்டாளர்கள் ஜெர்மனியை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|