பதிவு செய்த நாள்
16 அக்2018
23:42
ஈரோடு : பீஹார் தொழிலாளர்கள் வெளியேற்றத்தால், குஜராத்தில் டையிங், பிரின்டிங் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஈரோட்டில் தினமும், 40 லட்சம் மீட்டர் வரை துணி தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், 50 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இதில், 20 ஆயிரம் விசைத்தறிகளில், இலவச வேட்டி, சேலை, சீருடை துணிகள், பிற தேவைக்கான துணிகள் நெசவாகும். மீதி, 30 ஆயிரம் விசைத்தறிகளில், ரேயான் கிரே துணிகள், ‘காட்டன்’ காடா துணி தயாரிக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, குஜராத் மாநிலத்தில் பல்வேறு பிரச்னையால், பீஹார் மாநிலத்தை சேர்ந்த பிளீச்சிங், பிரின்டிங், டையிங் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் பல, ‘யூனிட்டுகள்’ நிறுத்தப்பட்டன.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் இருந்து குஜராத் சென்ற துணிகளை, பிரின்டிங், டையிங் செய்ய முடியவில்லை. கடந்த ஒரு வாரத்தில், மூன்று நாட்கள் விசைத்தறி ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் ஆகியோர் கூறியதாவது: குஜராத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், தீபாவளி நேரமான தற்போது, புதிய துணி தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்காலிக விசைத்தறி நிறுத்தத்தால், நேரடியாக, 40 ஆயிரம் பேர், மறைமுகமாக, 50 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து, ஜவுளித் தொழில் தடையின்றி செயல்பட, தீபாவளி தயாரிப்பு பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நுால் விலையை, மாதம் ஒரு முறை உயர்த்த வேண்டும். தற்போதைய நிலையால், புது ஆடை தயாரிப்பு, தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது போன்றவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|