பதிவு செய்த நாள்
22 அக்2018
06:21
ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது, மோசடி வலையில் சிக்கி ஏமாறுவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியம்.‘ஆன்லைன் ஷாப்பிங்’ பிரபலமாகி இருப்பதால், இணையத்தின் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் அதிகரித்திருப்பது போலவே, ஆன்லைன் ஷாப்பிங்கில் மோசடி செய்வதும் அதிகரித்துள்ளது. இணைய மோசடி அதிகரிப்பதன் காரணமாக, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, கவனமாக இருப்பது அவசியமாகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கில் மோசடிக்கு இலக்காகாமல் இருக்க, மனதில் கொள்ள வேண்டிய அம்சங்களை பார்க்கலாம்.
மோசடி தளங்கள்!
இணையத்தில் உலா வரும் போது, அதிகம் அறியப்படாத ஷாப்பிங் தளங்களும் கண்ணில் படலாம். அதிலும் குறிப்பாக பொருட்களை வாங்கும் நோக்கத்துடன் வலை வீசிக்கொண்டிருக்கும் போது, அறிமுகம் இல்லாத இ- – காமர்ஸ் தளங்கள் கவனத்தை ஈர்க்கலாம். ஷாப்பிங் செய்பவர்கள், இந்த வகை தளங்களில் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவை எல்லாமே மோசடி தளங்கள் என்று சொல்ல முடியாது என்றாலும், இது போன்ற தளங்களில் தான், நுகர்வோர் ஏமாற்றப்படுவது அதிகம் நடக்கிறது. எனவே, அறிமுகம் இல்லாத ஷாப்பிங் தளத்தை பயன்படுத்துவதற்கு முன், அந்த தளத்தில் விற்பனையாளர் மற்றும் அவரது தொடர்பு முகவரி இடம்பெற்றுள்ளனவா... என்று பார்க்க வேண்டும்.
நம்பகமான தளம் எனில், இந்த விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.அதே போல, விற்கப்படும் பொருட்கள் தொடர்பான விபரங்கள் தெளிவாக இருக்கின்றனவா? அவற்றை திரும்பி செலுத்துவது தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளனவா? என்றும் கவனிக்க வேண்டும். சேவைக்கான விமர்சன பகுதியில், நுகர்வோர் தெரிவித்துள்ள கருத்துகள் இடம்பெற்றுள்ளனவா? என்றும் பார்க்க வேண்டும். பணம் செலுத்தும் வசதி பக்கத்தில் பாதுகாப்பான பரிவர்த்தனைக்கான, ‘பேட்லாக்’ குறியீடும் இடம்பெற்றிருக்க வேண்டும். இவை இல்லை எனில், அந்த தளம் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கலாம்.
இணையத்தில் தள்ளுபடி சகஜம் என்றாலும், ஒரு இணையதளம் நம்ப முடியாத அளவுக்கு தள்ளுபடி அளித்தால், அது உண்மை தானா... என்பதை உறுதி செய்ய வேண்டும். பெரும்பாலும் அதிக அறிமுகம் இல்லாத தளங்களில் பொருட்களை வாங்கும் போது, டிஜிட்டல் முறையில் பணத்தை முன்கூட்டியே செலுத்தாமல், பொருட்களை பெற்றுக்கொண்ட பின் பணம் செலுத்தும் வசதியை நாடலாம்.
முறையீடு வசதி!
‘கேஷ் ஆன் டெலிவரி’ வசதி இல்லாததே கூட, மோசடி தளங்களை அடையாளம் காண உதவும்.மேலும், முன்னணி இ- – காமர்ஸ் தளங்களில் பொருட்களை வாங்கும் போது கூட, சிறிய எழுத்திலான நிபந்தனைகளை கவனமாக படித்து பார்க்க வேண்டும். ஏனெனில் சிறிய எழுத்து நிபந்தனைகளில் மறைந்திருக்கும் விஷயங்கள் பின்னர் சிக்கலாகலாம்.
உதாரணமாக, செல்போனை வாங்கும் போது, அது பயன்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட போன் எனும் விபரம் சிறிய எழுத்தில் மறைந்திருக்கலாம். எல்லாம் சரி, முன்னெச்சரிக்கையை மீறி ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாந்தால் என்ன செய்வது? விற்பனையாளரை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், சமூக ஊடக சேவையில் முறையிடலாம். வாக்ஸ்யா (voxya.com/) நுகர்வோருக்கான உதவி சேவை, அரசின் நுகர்வோர் சேவையையும் (consumerhelpline.gov.in/) நாடலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|