பதிவு செய்த நாள்
22 அக்2018
06:23
சரிந்து வரும் பங்குகளை வாங்க நினைப்பது இயல்பு. பங்கு விலை, ‘மள மள’வென்று குறையும் போது, நமக்கு அவை மலிவாகத் தோன்றும். குறிப்பாக, சமீப காலத்தில் உச்சம் தொட்ட பங்குகள், அந்த உச்ச விலையில் இருந்து சரியும் போது, அவை மலிவாகி விட்டதாக நம்மில் பலர் எண்ணுகின்றனர்.ஆனால், உண்மை அதுவல்ல!
சரிவில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் முன், அந்த பங்குகளின் விலை உயர்வை புரிந்து கொள்ள வேண்டும். உயர்வு எப்படி ஏற்பட்டது என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே, வீழ்ச்சிக் காலங்களில் நாம் சரியாக நடப்போம். அந்தப் புரிதலை வளர்க்க முற்படுவோம்.சந்தை உச்சத்தில், நாம் கடந்து வந்த பாதையைக் காணத் தவறி விடுவது இயல்பு.
நேரமின்மை மற்றும் அவசர புத்தி, நம்மை ஆட்டிப்படைக்கும். அது நம்முடைய பங்கு மதிப்பீட்டிலும், பங்குகளின் விலை உயர்விலும் பிரதிபலிக்கும். எப்படியாவது வாங்குவது என்ற எண்ணம், முதலீட்டாளர் நடத்தையை பாதிக்கும்.உச்சம் தொடும் காலகட்டங்களில், சந்தையின் பிடித்தமான பங்குகளின் விலை, அவற்றின் நியாயமான மதிப்பை விட, பல மடங்கு அதிகமாகப் பெருகி விடும். சந்தை, அவற்றை மிக அதிக மதிப்பில் வாங்கத் துணிந்துவிடும்.
அந்த பங்குகளின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகள், மிகைப்படுத்தி பேசப்படும். அந்த நிறுவனங்களின் பங்குகளின் மீது ஒட்டுமொத்த முதலீட்டு நிறுவனங்களின் ஆர்வம் குவிந்து இருக்கும். அந்த நேரத்தில் தோன்றும் உச்ச விலை, பலரது கவனத்தை ஈர்க்கும். சாமானிய முதலீட்டாளர்கள், அந்த பங்குகளை வாங்க ஏங்குவர். அவற்றின் மதிப்பு அவர்களை தடுக்கும்.சமீப பங்கு விலை உயர்வு ஒரு பக்கம் ஈர்க்கும்; இன்னொரு பக்கம் அச்சுறுத்தும். அந்த விலை எப்போது குறையும் என்ற ஏக்கம், முதலீட்டாளர்கள் மனதில் கூடும். பங்கு விலை கூடக் கூட, அந்த ஏக்கம் பெருகும்.
ஆனால், பங்கு விலை எளிதில் குறையாது. அப்படியே குறைந்தாலும், அந்த நேரத்தில், பல முதலீட்டாளர்கள் வாங்க விரைந்து, பங்கின் விலையை மீண்டும் உயர்த்தி விடுவர். இதுவே, சந்தையின் எதிர்கால மதிப்பீட்டை மிகைப்படுத்தும்.இனி இந்த பங்குகள் அதிகம் வீழாது என்ற ஒருமித்த கருத்து சந்தையில் உருவாகிவிடும். முதலீட்டாளர்கள், விலை வீழ்ச்சி காணாத பங்குகளின் மீது, தங்கள் மதிப்பீட்டை தொடர்ந்து உயர்த்திக்கொண்டே போவர்.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மற்றும் வீட்டு நிதி கடன் நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உச்சம் தொட்ட காலம் முடிந்து, ஒரு புதிய அத்தியாயம் துவங்கி உள்ளது.விலை வீழ்ச்சியே இல்லாத சூழல் மாறி, தொடர் வீழ்ச்சி சூழல் நிலவுகிறது. இப்போதும் பல முதலீட்டாளர்கள், உச்சத்தில் காட்டிய அவசரத்தை கையெடுக்கின்றனர்.
உச்ச விலையில் இருந்து ஏற்பட்ட வீழ்ச்சியைப் பார்த்து, அந்த பங்குகள் மலிவாகிவிட்டதாக நினைக்கின்றனர். உண்மையில், மதிப்பு சார்ந்த ஆய்வு செய்தால், அவை மலிவாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.வரும் காலங்களில், இந்த துறை சார்ந்த மாற்றங்களின் தாக்கம், அவற்றின் எதிர்காலத்தை பற்றிய நம் எதிர்ப்பார்ப்புகளை, வழி நடத்த வேண்டும். அவசரம், நம் முதலீட்டு எதிர்காலத்திற்கு நிச்சயம் உதவாது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|