பதிவு செய்த நாள்
22 அக்2018
06:25
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, எப்படி ரொக்கமற்ற பொருளாதாரம், டிஜிட்டல் பரிவர்த்தனை பற்றி நம் கவனம் திரும்பியதோ, அதேபோல், பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம், நம் பார்வையை வேறு பக்கம் திருப்பியுள்ளது. மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள், பேருந்துகள், லாரிகள், நம் பிரச்னைக்குத் தீர்வாகுமா? எவ்வளவு விரைவில் இவற்றை நோக்கி நாம் நகர முடியும்?
மார்ச், 2018 இறுதியில் இந்தியாவில் மொத்தம், 56 ஆயிரம் மின்வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றில், மின் ஸ்கூட்டர்கள், 54 ஆயிரத்து, 800, மின் கார்கள், 1,200.இதற்கு முந்தைய ஆண்டான, 2017ல் மொத்த மின் வாகனங்கள், 25 ஆயிரம்; அதற்கு முந்தைய ஆண்டான, 2016ல், 22 ஆயிரம் வாகனங்கள் சாலையில் ஓடிக்கொண்டு இருந்தன. ஆக, படிப்படியாக, மின் வாகனங்களின் பயன்பாடு பெருகிவந்துள்ளது.
இந்நிலையில்தான் மத்திய அரசு, 2030க்குள் அனைத்து வாகனங்களும், மின்சாரத்தில் இயங்கவேண்டும் என்ற பெருங்கனவை முன்வைத்தது.அதன் பிறகு, அடுத்த ஐந்தாண்டுகளில், மொத்த வாகனங்களில், 15 சதவீதமேனும் மின் வாகனங்களாக இருக்கவேண்டும் என்று, தன் இலக்கை மாற்றியமைத்துக்கொண்டது.மின் கார்களைவிட, மின் ஸ்கூட்டர்கள் வேகமாக விற்பனையாகின்றன. பல புதிய மாடல் ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், பெட்ரோல் வாகனங்களுக்கு இருக்கும் மவுசு, மின் ஸ்கூட்டர்களுக்கு இல்லை. இன்னமும் அதை ஏதோ மொம்மைக் காரைப் பார்ப்பதுபோல் தான் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இத்தனைக்கும் மின் ஸ்கூட்டரில் சத்தம் இருக்காது. புகை கக்காது. பாலில், விழும் பழம் போல, ‘ஸ்மூத்’தாக சாலையில் நழுவிக்கொண்டு ஓடும். ஆனால், இன்றைய தேதியில் எதிர்காலவியல் ஆர்வலர்களும், நவீன விஞ்ஞான விரும்பிகளும்தான் மின் வாகனங்களை உச்சி முகர்ந்து வருகின்றனர். இந்தக் காதலர்களை மீறி, அனைவர் கவனத்தையும் ஈர்ப்பதில், மின் வாகனங்களுக்குப் பல தடைகள்உண்டு.
முதல் தடை, அதன் பேட்டரி. இப்போதைக்கு மின் வாகனங்களை வீட்டிலேயே சார்ஜ் செய்துகொண்டுதான் வெளியே எடுத்து வரவேண்டும். 40 கி.மீ., வேகத்தில் இயல்பாக வண்டி ஓடுகிறது. ஒருநபர் சுலபமாக உட்கார்ந்து ஓட்டலாம். இரண்டாம் நபர் ஒல்லியாக இருந்தால், பரவாயில்லை. எடை கூடுதலானால், வண்டி லோடு தாங்காது, இழுக்கும்.சில வண்டிகளுக்கு, பல மணிநேரம் சார்ஜ் செய்யவேண்டியுள்ளது. லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்படுகின்றன. அதன் தாங்கும் திறன், மின்சாரத்தைத் தேக்கி வைத்துக்கொள்ளும் திறன் இன்னும் மேம்பட வேண்டும்.ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போவதென்றால், வழியில் சார்ஜ் செய்துகொள்ள நேரலாம். அப்படியானால், வழியில் பெட்ரோல் பங்க் மாதிரி, சார்ஜ் செய்துகொள்ளும், ‘பங்க்’கள் நிறுவப்பட வேண்டும்.
அந்த பங்க்களுக்கு எங்கிருந்து மின்சாரத்தைக் கொண்டுவருவது? சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தைத் தயாரித்து, உடனே, வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றவேண்டுமா? அல்லது பக்கத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சார ஒயர் இழுத்து, ‘சப்ளை’ செய்யவேண்டுமா?
எவ்வளவு வேகம்?
இப்போது பெட்ரோல் போடுவது போன்று, ஒருசில நிமிடங்களில் சார்ஜ் செய்துகொள்ள முடியுமா? மழைக்காலத்தில் என்ன செய்வது?ஏ.சி., கரன்டா, டி.சி., கரன்டா? ஒரே சமயத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து நின்றுவிட்டால், அத்தனை வாகனங்களுக்கும் மின்னேற்றம் செய்ய முடியுமா?பக்கத்தில் உள்ள மின் மாற்றி, இத்தகைய அதிகபட்ச தேவையைத் தாங்கி, மின் சப்ளை வழங்குமா? அல்லது படுத்துவிடுமா?
இன்னொரு பெரிய கேள்வி உண்டு. மின் வாகனங்கள் பெருத்தால், அந்த அளவுக்கு நம்மால் மின் உற்பத்தி செய்யமுடியுமா? போதுமான அளவு அனல், புனல், அணு, காற்றாலை, சூரிய ஒளி மின்சார உற்பத்தி செய்யப்படுகிறதா?அரசாங்கத்தால் மட்டுமே மின் தேவையை நிறைவேற்ற முடியுமா? தனியார் உற்பத்தியாளர்களை இதில் களமிறக்க வேண்டுமா?என்ன விலையில், மின்சாரத்தை, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது? நிச்சயம், பெட்ரோல், டீசல் அளவுக்கு இல்லையென்றாலும், மின் உற்பத்தி, பகிர்மானம், உள்கட்டமைப்பு என்று, அத்தனை செலவுகளையும் உள்ளடக்கிய விலையை நிர்ணயம் செய்வதற்கான வரையறை, உருவாக்கப்பட வேண்டுமல்லவா?
மின் வாகனம் என்பதுபுதிய துறையாச்சே, மின்சாரத்தைத் தள்ளுபடி விலையில் தருவீர்களா?இன்னொருபுறம் இதன் விலை, இன்றைய மின் ஸ்கூட்டர்களின் விலையில் பாதியளவை எடுத்துக்கொள்வது அதன் பேட்டரிகள் தான். பிரதமர் அலுவலகம், மின் வாகனங்களுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பியது.ஆனால், மொத்த வாகனத்துக்கும் மானியம் வழங்குவதைவிட, பேட்டரிகளுக்கு வழங்கினால் போதும் என்று கருதுகிறது. இதில், நியாயமில்லாமல் இல்லை.
அதேபோல், மின் கார்களைவிட, பயன்பாட்டில் அதிகம் இருக்கும் மின் ஸ்கூட்டர்களுக்கு, மானியம் தருவது சரியாக இருக்கும் என்றும் கருதுகிறது. இதுவும் சரியான அணுகுமுறைதான்.ஆனால், எவ்வளவு மானியம்? எப்படி கிடைக்கும்? இதில் இன்னும் தெளிவு இல்லை.மின் வாகனங்களுக்கு, 12 சதவீத, ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. ஆனால், சமீப காலம் வரை அதன் பேட்டரிகளுக்கு, 28 சதவீத ஜி.எஸ்.டி., வரி. தற்சமயம், இது, 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. அப்படியும், இந்த வரி மிகவும் அதிகம்தான்.பேட்டரிகள் பற்றி இன்னொரு பிரச்னையையும், இதனோடு சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்சமயம் நம்மிடம், லித்தியம் மற்றும் கோபால்ட் தனிமங்களுக்கான சுரங்கங்கள் ஏதும் இல்லை. அதனால் தான் நாம், லித்தியம் அயான் பேட்டரிகளுக்கு, ஜப்பானையும், சீனாவையும் நம்பிஇருக்கிறோம்.இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே நாம், ஆஸ்திரேலியாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் லித்தியம், கோபால்ட் சுரங்கங்களை வாங்கிப் போட முயற்சி மேற்கொண்டுவருகிறோம். அது எவ்வளவு விரைவாக நம் உற்பத்திக்கும், தேவைக்கும் வந்து சேரப் போகிறது என்று தெரியவில்லை.
எல்லாவற்றையும் விட முக்கியம், உற்பத்தியாளர்களுக்கு லாபம் வந்தால்தான், மின் வாகனங்களைத் தயாரிக்கவே முன்வருவர். அவர்கள், மத்திய அரசின் கொள்கை ஆதரவுநிலைப்பாட்டுக்கும், நிதிச் சலுகைகளுக்கும் காத்திருக்கின்றனர்.அரசு, ‘ஆம்’ என்று தலையாட்டினால் போதும், அடுத்த ஐந்தாண்டுகளில், சாலைகளில் சத்தமில்லாமல், உங்கள் மின் வாகனங்கள் வழுக்கிக்கொண்டு ஓடுவது நிச்சயம்!
-ஆர்.வெங்கடேஷ்,பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|