பதிவு செய்த நாள்
12 நவ2018
00:19
சரியான முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ள பெரும்பாலானோர் வழக்கமாக செய்யும் மூன்று தவறுகளை தவிர்ப்பது அவசியம்.
முதலீடு தேர்வு, நிதி மற்றும் பொருளாதாரம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டாலும், உளவியலும் இதில் தொடர்பு கொண்டிருக்கிறது. அதாவது, நிதி காரணிகளை மட்டும் அடிப்படையாக கொண்டு முதலீடு முடிவுகள் எடுக்கப்படுவதில்லை.
மனம் சார்ந்த விஷயங்களும் இதில் தாக்கம் செலுத்துகின்றன. இதை பழக்கவழக்கம் சார்ந்த விஷயங்கள் என குறிப்பிடுகின்றனர். பழக்கவழக்கம் சார்ந்த சிந்தனைகள் தவிர்க்க இயலாதவை என்றாலும், பழக்க வழக்கம் சார்ந்த சார்புக்கு இலக்காகாமல் இருப்பது அவசியம் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். தினசரி முடிவுகளுக்கு இவை ஏற்றதாக அமைந்தாலும் நிதி விஷயத்தில் இவை காலை வாரி விடுபவையாக இருக்கின்றன.
மந்தை அணுகுமுறை
முறையான ஆய்வு மற்றும் தகவல்கள் அடிப்படையில் முடிவு எடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுக்க துாண்டும் விஷயங்களை பழக்க வழக்க சார்பு நிலை என்கின்றனர். இவை பெரும்பாலும் தர்க்கத்திற்கு மாறான முடிவுகளை எடுக்க வைப்பதாகவும் கருதப்படுகிறது. இத்தகைய சார்பு நிலை எல்லா முதலீட்டாளர்களையும் பாதிக்கிறது. குறிப்பிட்ட விதமாக சிந்தித்து செயல் படும் நிலையை இவை உண்டாக்குவதால் பாதிப்பு ஏற்படலாம்.
இந்த வகையில் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய சார்பு நிலைகளை பார்க்கலாம்.பெரும்பாலான நேரங்களில் மற்றவர்கள் செய்வதை பின்பற்றுவது சரியாக இருக்கலாம். உதாரணமாக ஒரு ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தால் அங்கு உணவு சுவையாக இருப்பதாக கொள்ளலாம். அதே போல, சூப்பர் மார்க்கெட்டில் அதிக தள்ளுபடி தரும் கவுன்டரில் அதிக கூட்டம் இருக்கலாம்.
எனவே மற்றவர்கள் செய்வதை நாமும் செய்தால் பலன் கிடைக்கும். ஆனால் மற்றவர்கள் செய்வதை பின்பற்றி முதலீடு முடிவுகளை மேற்கொண்டால் அது தவறாகவும் அமையலாம். முதலீடு என்பது ஒருவரின் நிதி இலக்கு, தேவை, ரிஸ்க் தன்மை, பலன் எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் அடிப்படையில் அமைகிறது. எனவே, எல்லாரும் செய்கின்றனர் என, நாமும் ஒரு முடிவை மேற்கொண்டால் முதலீடு நோக்கில் பலன் தர வாய்ப்பில்லை. சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.
நிதி சாதனங்களை தேர்வு செய்யும் போது மற்ற விஷயங்களோடு விலை ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. பலரும் தள்ளுபடி சலுகை அல்லது குறைந்த விலையை நாடுகின்றனர். ஒரு சிலர் விலை அல்லது கட்டணம் அதிகமாக இருந்தால் சேவை தரமாக இருக்கும் என கருதுகின்றனர். ஆனால் நிதி சாதனங்களை வாங்கும் போது மதிப்பு மற்றும் விலை முக்கிய அம்சம் அல்ல.
உதாரணமாக பங்கு விலை ஏறி இறங்கலாம், ஆனால் நீண்ட கால பலனே முக்கியம். எனவே விலையை மட்டும் பார்க்காமல், வளர்ச்சி வாய்ப்பு, டிவிடெண்ட், வட்டி விகிதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
மாற்று கருத்து தேவை
பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் கருத்திற்கு ஏற்ற தகவல்களையே தேடும் மனநிலை கொண்டு உள்ளனர். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட துறை பங்கு பிரகாசமானது என கருதினால், அதற்கு வலுசேர்க்கும் தகவல்களை அதிகம் தேடுகின்றனர். இப்படி தங்களது கருத்திற்கு ஆதரவான தகவல்களை நாடி, தங்கள் நிதி முடிவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் போக்கை உறுதி செய்யும் சார்பு என்கின்றனர். இது தவறான முடிவுக்கு அழைத்துச் செல்லலாம்.
இதை தவிர்க்க நம் கருத்திற்கு எதிரான தகவல்களையும் பரிசீலித்து, தேவை எனில் முதலீட்டு முடிவையும் மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|