பதிவு செய்த நாள்
12 நவ2018
00:24
கமாடிட்டி சந்தை: கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து ஆறாவது வாரமாக சரிந்து வர்த்தகமாகி வருகிறது. 2015ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட முதல் தொடர் சரிவு இதுவேயாகும். பொருள் வாணிப சந்தையில், கச்சா எண்ணெய், அக்., 4ம் தேதி முதல், விலை சரிய ஆரம்பித்து, தொடர்ந்து, 27 நாட்கள் விலை சரிந்த வண்ணம் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதே காலகட்டத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, பெரிய அளவில் உயராமல், சிறிய அளவு மட்டுமே உயர்ந்ததன் காரணமாக, உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச அளவில் ஒப்பிடும்போது, குறைந்த அளவிலேயே குறைந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில், கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்து, தற்போது, 20 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தது. நவம்பர் மாதத்தில் அமெரிக்கா, ஈரான் நாட்டின் மீது கொண்டுவந்துள்ள பொருளாதாரத் தடை மற்றும் எண்ணெய் ஏற்றுமதித் தடை அமலுக்கு வரும்; இதனால் சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என்ற கண்ணோட்டத்தில் விலை அதிகரித்தது.
ஆனால், தற்போது, ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி, செய்ய முக்கிய சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. அந்நாடுகள் தொடர்ந்து ஈரானிடம் இருந்து கொள்முதல் செய்யலாம் என்றும் அறிவித்து உள்ளது. இதில் இந்தியாவும் அடங்கும். ஈரான் ஏற்றுமதியானது தற்போது தினசரி, 1.4 மில்லியன் முதல், 1.5 மில்லியன் பேரல்கள் இருக்கக்கூடும் என்று கணக்கிடப்படுகிறது.
அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி தற்போது அதிகரித்து வருகிறது, உலக அளவில், தினசரி உற்பத்தியில், அமெரிக்கா அதன் ஷெல் ஆயில் உற்பத்தியுடன் சேர்த்து பார்க்கும்போது, முதலிடம் வைக்கிறது.
இரண்டாவதாக சவுதி அரேபியாவும், மூன்றாவதாக ரஷ்யாவும் உள்ளது. அமெரிக்காவில் இயங்கிவரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, 886 குழாய்கள் செயல்பட்டு வருகின்றன. மார்ச் 2015ம் ஆண்டுக்கு பின், இதுவே அதிகமாகும்.
வாரம் ஒரு முறை வெளியாகும் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு விபரம், கடந்த வாரம் புதன் அன்று வெளியானது. அதில் எதிர்பார்த்ததைவிட, இருப்பு விபரம், 5.8 மில்லியன் பேரல்கள் அதிகரித்துள்ளது. தேவையைக் காட்டிலும் உற்பத்தி அதிகமாக இருந்த சூழலில், இருப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது சந்தையில் விலைக்கு பாதகமாக அமைந்தது.
பதினோரு மாதங்களுக்கு பின், கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 60 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. வரும் நாட்களிலும் சரிவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 55.50 டாலர் என்ற நிலை நல்ல சப்போர்ட் ஆகும்.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை, தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவில் வர்த்தகம் ஆனது. ஆகஸ்ட் மாதத்திற்கு பின் ஏற்பட்ட, அதிக அளவிலான வார சரிவு, கடந்த வாரம் ஏற்பட்டதாகும். அமெரிக்க நாணய குறியீடு எண், டாலர் இண்டெக்ஸ் தொடர்ந்து வலுப்பெற்று உச்சத்தில் வர்த்தகமாகி வருவதே, தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
கடந்த வியாழன் அன்று நடைபெற்ற, அமெரிக்காவின், வட்டி விகித கூட்டத்தில், வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. அடுத்த மாதம் நடைபெற உள்ள வட்டி விகித கூட்டத்தில், உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, தங்கம் விலை, 1.3 சதவீதம் சரிந்தது.
தங்கம் முதலீட்டு பொருளாக பார்க்கப்படும் சூழலில், அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் போது, முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை, அரசு சார்ந்த கருவூலங்களில் அதிக அளவில் முதலீடு செய்வர். அப்போது அவர்கள், தங்கம் மீதான முதலீட்டை குறைத்து கொள்வது வழக்கம்.
மேலும், உலகில் உள்ள அனைத்து நாடுகளும், தங்கத்தை பணவீக்கத்திற்கு எதிரான ஒரு முதலீடாக கருதுகின்றன. கடந்த சில வாரங்களாக தொடர் சரிவில் கச்சா எண்ணெய் இருந்து வருவதால், பணவீக்க விகிதம் சிறிதளவு குறைந்ததும், தங்கத்தில் முதலீடு தேவை குறைந்தது. இதுவும் விலைக்கு பாதகமாக அமைந்தது.
வெள்ளியை பொறுத்தவரை கடந்த வார சரிவு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின் ஏற்பட்ட பெரிய அளவிலான வார சரிவாகும்.கடந்த வார இறுதியில் வெளிவந்த அமெரிக்காவின் பொருளாதார காரணிகளில் ஒன்றான, பி.பி.ஐ., எனப்படும் புரொடியூசர் பிரைஸ் இண்டெக்ஸ், எதிர்பார்த்ததைவிட, 0.6 சதவீதம், அக்டோபர் மாதத்தில் அதிகரித்திருந்தது.
இது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பதால், வரும் காலங்களில், இது வட்டி விகித உயர்வுக்கு, ஊன்றுகோலாக அமையும் என்ற கண்ணோட்டத்திலும் விலை சரிவு நிகழ்ந்தது.ஆபரண தங்கத்தின் நுகர்வில், சீனா அதிக பங்கு வகிக்கிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் வர்த்தக மோதல் காரணமாக, சீனாவின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. இச்சூழலில் நாட்டு மக்களின் தங்கம் கொள்முதல் மற்றும் முதலீடு குறையும் என்று கருதப்படுகிறது.
செம்பு
செம்பு விலை கடந்த வாரம் சரிந்து வர்த்தகம் ஆனது. ஆகஸ்ட் மாதத்துக்குப் பின் ஏற்பட்ட அதிக அளவிலான சரிவும் இதுவேயாகும்.பொருளாதார காரணிகளின் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, எண்ணெய் விலையில் சரிவு போன்றவை காரணமாக, அடுத்த மாதம் நடைபெற உள்ள அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற ஒருமித்த கருத்து நிலவுகிறது.
இதனால், அமெரிக்க டாலர் குறியீடு உயர்ந்தது. அதன் காரணமாக, பொருள் வாணிப சந்தையில் அனைத்து பொருட்களும் விலை சரிந்தது. மேலும், சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்து வரும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக மோதல் காரணமாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலை முதலீட்டு பொருட்களின் தேவை குறைந்து, அதன் காரணமாகவும் செம்பு விலை சரிந்து வருகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|