பதிவு செய்த நாள்
20 நவ2018
01:09
மும்பை : சில்லரை முதலீட்டாளர்கள், மொபைல்போன் மூலம், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வசதியை, தேசிய பங்குச் சந்தையான – என்.எஸ்.இ., அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, ‘NSE goBID’ என்ற மொபைல்போன், ‘ஆப்’ உருவாக்கப்பட்டு உள்ளது.
இதை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர், அஜய் தியாகி வெளியிட்டு பேசியதாவது:அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வந்திருக்கும் மொபைல் ஆப், தற்போது பெருகி வரும் மின்னணு பணப் பரிவர்த்தனைகளின் வளர்ச்சிக்கான முக்கிய மைல் கல் எனலாம். வங்கிகளின், ‘பிக்சட்’ டிபாசிட்டில் கிடைக்கும் வருவாயை விட, அரசு கடன்பத்திரங்களின் வட்டி வருவாய், தற்போது அதிகமாக உள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு கடன் பத்திரங்களில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு மிகக் குறைவாகவே உள்ளது. இதை, விளம்பர பிரசாரங்கள் மூலம் அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள, வர்த்தக உறுப்பினர்களின் கீழ் உள்ள அனைத்து சில்லரை முதலீட்டாளர்களும், மொபைல் ஆப் மூலம், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். புதிய முதலீட்டாளர்களுக்கும் இவ்வசதி கிடைக்கும்.
பங்குச் சந்தைகளின் பல்வேறு வர்த்தகங்களை, ‘செபி’ தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும் இச்சந்தைகளுடன் இணைந்து, அவற்றின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
ஒதுக்கீடு :
கடந்த, 2016- -– 17ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டில், ரிசர்வ் வங்கி மூலம், பங்குச் சந்தைகளில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, ரிசர்வ் வங்கி, வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களில், 5 சதவீதம், சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|