பதிவு செய்த நாள்
21 நவ2018
23:15
புதுடில்லி : ரியல் எஸ்டேட் துறையில், முன்னணியில் உள்ள, 100 தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு, 2.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.ஹூருன் இந்தியா ரிப்போர்ட் நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில், இந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி, 100 பெரும் பணக்காரர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்திய ரியல் எஸ்டேட் துறையில், இந்தாண்டு, 100 தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு, 1.86 லட்சம் கோடியில் இருந்து, 27 சதவீதம் உயர்ந்து, 2.36 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதில், லோதா குழுமத்தின் நிறுவனர், மங்கள் பிரபாத் லோதா, 27,150 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், முதலிடத்தை பிடித்துள்ளார்.அடுத்த இரண்டு இடங்களில், எம்பசி குழுமத்தின், ஜிதேந்திர விர்வானி, டி.எல்.எப்., துணை தலைவர், ராஜிவ் சிங் ஆகியோர், முறையே, 23,160 கோடி மற்றும் 17,690 கோடி ரூபாய் சொத்துக்களுடன் உள்ளனர்.
பெண்களில், டி.எல்.எப்., நிறுவனத்தின் சர்வதேச பிரிவு தலைவர், ரேணுகா தல்வார் முதலிடம் பிடித்துள்ளார்.இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர்களில், 59 சதவீதம் பேர், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் சராசரி வயது, 59 ஆகவும், சராசரி சொத்து மதிப்பு, 2,366 கோடி ரூபாயாகவும் உள்ளது. நான்கு பேர் மட்டுமே, 40 வயதுக்கு உட்பட்டவர்கள். மிக இளம் தொழிலதிபர்களில், 24 வயதான, ஆர்.எஸ்.இசட்., நிறுவனத்தின், குணால் மென்டா இடம் பெற்று உள்ளார்.
பட்டியலில், ஈஸ்ட் இந்தியா ஓட்டல்ஸ் நிறுவனத்தின், 89 வயது, பிரித்வி ராஜ் சிங் ஒபராய், அதிக வயதானவராக இடம் பிடித்துள்ளார்.ரியல் எஸ்டேட் துறையில், பெண் பணக்காரர்களில், 19 பேர் இடம் பெற்றுள்ளனர்.
புதியவர்கள் :
பட்டியலில் புதிதாக இடம் பெற்ற, 10 பேரில், மை ஹோம் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தின், ரமேஷ்பர் ராவ் ஜூபாளி, 14வது இடத்தை பிடித்துள்ளார்.இது குறித்து, ஹூருண் ரிப்போர்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ரஹ்மான் ஜூனைத் கூறியதாவது: நாட்டில், சொத்து உருவாக்கத்தில், ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து, முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.
பட்டியலில் உள்ள, 100 பேரின் சொத்து மதிப்பு, கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள, சைப்ரஸ் நாட்டின், ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட, 7,200 கோடி ரூபாய் அதிகம். ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள், தங்கள் சொத்துக்களை பெருக்குவதுடன், குடியிருப்புகள் வாயிலாக, நுகர்வோருக்கு சொத்துக்களை உருவாக்கித் தரும் சேவையையும், சிறப்பாக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை முதலிடம் :
ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் குடியிருக்க விரும்பும் நகரங்களில், மும்பை, முதலிடத்தில் உள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டோரில், 35 பேர், மும்பையைச் சேர்ந்தவர்கள். அடுத்து, டில்லியில், 22 பேரும், பெங்களூரில், 21 பேரும் வசிக்கின்றனர்.
–குரோஹி ஹூருன் இந்தியா, ஆய்வறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|