பதிவு செய்த நாள்
21 நவ2018
23:22
புதுடில்லி : கடந்த, செப்டம்பர் மற்றும் அக்டோபரில், பங்குச் சந்தைகளின் திடீர் வீழ்ச்சிக்கான காரணம் குறித்து, விசாரிக்குமாறு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, செப்., 21ல், பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே, வீட்டு வசதி கடன் வழங்கும், திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, 60 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டது. இதனால், சந்தை மூலதனத்தில், 10 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்தது.
வதந்தி :
இந்நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக பரவிய வதந்தி தான் இதற்கு காரணம். இதன் தாக்கத்தால், வீட்டு வசதி கடன் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகளும், சரிவை சந்தித்தன.
அதனால், மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இடையே, ‘சென்செக்ஸ்’ 1,100 புள்ளிகளை இழந்தது. உடனே, திவான் ஹவுசிங், வதந்திகளை மறுத்து வெளியிட்ட அறிக்கையால், பங்கு விலை சரிவு, 43 சதவீதமாக குறைந்தது. சென்செக்ஸ் சரிவும், 279 புள்ளிகளாக குறைந்தது.
இந்த சரிவுக்கு, ஐ.எல்.எப்.எஸ்., நிறுவனத்தின் நிதி நெருக்கடி தான், மூல காரணம் என, அப்போது, சந்தையில் பேசப்பட்டது. ஆனால், ஐ.எல்.எப்.எஸ்., விவகாரம், ஆகஸ்ட் மாதமே வெளிச்சத்திற்கு வந்தபோதும், சந்தை சரியவில்லை.
கடன் பத்திரங்கள்:
அதனால், மூல காரணம் அதுவல்ல; அன்னிய நிதி நிறுவனமான, டி.எஸ்.பி., மியூச்சுவல் பண்டு அதிக அளவில், திவான் ஹவுசிங் நிறுவனத்தின் கடன் பத்திரங்களை விற்பனை செய்ததே காரணம், என, தெரியவந்தது.டி.எஸ்.பி., நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், ஏற்ற, இறக்கமின்றி இருந்தது. முதலீட்டாளர்களுக்கு, பெருந்தொகையை திரும்ப அளிக்க வேண்டிய கட்டாயமும் அந்நிறுவனத்திற்கு இல்லை.
அத்தகைய சூழலில், திவான் ஹவுசிங் கடன் பத்திரங்களை ஏன், இயல்புக்கு மாறாக அதிக அளவில் விற்பனை செய்து, சந்தை சரிவிற்கும், முதலீட்டாளர்களின் இழப்பிற்கும் காரணமாக இருந்தது என, புரியவில்லை.இது, அன்னிய நிதி நிறுவனங்களின் கூட்டுச் சதியா எனவும் தெரியவில்லை.எனவே, செப்., 21க்கு முன், பின் நாட்களில், திவான் ஹவுசிங் நிறுவனம் தொடர்பாக, அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொண்ட வர்த்தக முறைகளை அறியவும், சந்தையின் வழக்கத்திற்கு மாறான சரிவு குறித்து விசாரிக்கவும், பிரதமர் அலுவலகம், செபிக்கு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பதில் அனுப்பியுள்ளோம் :
திவான் ஹவுசிங் நிறுவன கடன் பத்திரங்கள் விற்பனை குறித்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, விளக்கம் கேட்டது. அதற்கு, உரிய பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது போன்று விளக்கம் கேட்பதும், பதில் அளிப்பதும், வழக்கமான நடைமுறை தான். திவான் ஹவுசிங் நிறுவனத்திற்கும், கடிதம் அனுப்பியுள்ளோம்.
-டி.எஸ்.பி., மியூச்சுவல் பண்டு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|