பதிவு செய்த நாள்
05 டிச2018
23:37
மும்பை:‘‘பணப் புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி உதவிக் கரம் நீட்ட வேண்டிய அவசியம் இல்லை,’’ என, அவ்வங்கியின் துணை கவர்னர், விரால் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்திற்கு ஏற்பட்ட, நிதி நெருக்கடியின் தாக்கத்தால், பணப்புழக்கம் குறைந்து, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அதனால், இந்நிறுவனங்களுக்கு உதவும் வகையில், நேற்று, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, புதிய திட்டத்தை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கான காரணம் குறித்து, விரல் ஆச்சார்யா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களாக, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணப்புழக்க பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதனால், பணப்புழக்க நெருக்கடி குறைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ளது.ஆகவே, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு உதவுவதற்கு என, தனி திட்டம் தேவையில்லை.
அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்காத பட்சத்தில் தான், கடைசி கட்டமாக, ரிசர்வ் வங்கியின் உதவிக் கரம் நீளும்.வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி கடன் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கடன் வழங்கும் வங்கிகள், பிணையாக பெறும் அரசு கடன் பத்திரங்கள் மூலம், அதிக தொகையை பெறலாம். அதற்கான வரம்பை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட, அனைத்து துறைகளிலும் வங்கிகளின் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதனால், எந்த துறைக்கும் ரிசர்வ் வங்கியின் தனி உதவி தேவைப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|