பதிவு செய்த நாள்
09 டிச2018
23:47
இந்த ஆண்டு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ள நிலையில், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. வரும் ஆண்டில் இதே போக்கு தொடருமா?
நடப்பு, 2018ம் ஆண்டு விடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு நீங்கள் வங்கியில் கடன் வாங்கியிருந்தால், அதற்கான வட்டி விகிதம் அதிகரித்து இருப்பதை உணர்ந்திருக்கலாம். அதே நேரத்தில் வைப்பு நிதிகளில் முதலீடு செய்திருந்தால், அவை தரும் வட்டி விகிதம்
உயர்ந்திருப்பதையும் கவனித்து இருக்கலாம். பொதுவாக, 2018ம் ஆண்டு கடன் பெறுபவர்களுக்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை.
வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் போக்கை கடைப்பிடித்தன. இதற்கு மறுபக்கத்தில்
வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தையும் வங்கிகள் உயர்த்தி வழங்கத் துவங்கின.
வட்டி விகித உயர்வு
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து, வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தி இருக்கின்றன. உதாரணமாக, நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் வங்கி, ஓராண்டு காலத்திற்கான வைப்பி நிதி வட்டி விகிதத்தை நான்கு முறை உயர்த்தியது.
இந்த ஆண்டு வங்கிகள், 'லிக்விடிட்டி கவரேஜ்' விகிதத்தில் கவனம் செலுத்தியதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான வங்கிகள் சில்லரை வைப்பு நிதி திரட்டுவதில் அதிக கவனம் செலுத்திய
நிலையும் காணப்பட்டது.முந்தைய ஆண்டில் இருந்த நிலை மாறி, 2018ல் வட்டி விகித சுழற்சி மாறியது. வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கத் துவங்கியது.
ரிசர்வ் வங்கி நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியது.
இதன் விளைவாக, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்டேட் வங்கி வீட்டு கடன் தொடர் பான ஓராண்டு, எம்.சி.எல்.ஆர்., விகிதத்தை இந்த ஆண்டு நான்கு முறை உயர்த்தியுள்ளது. இந்த விகிதத்தின் அடிப்படையிலேயே வங்கிகள் பெரும்பாலான கடன்களை வழங்குகின்றன.
இந்த பின்னணியில், 2019ம் ஆண்டில் வட்டி விகித போக்கு எப்படி இருக்கும் எனும் கேள்வி, முதலீட்டாளர்கள் மனதில் எழுந்து உள்ளது. வரும் ஆண்டில் கடனுக்கான வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பிருப்பதாக வங்கியாளர்கள் கருதுகின்றனர். வைப்பு நிதி விஷயத்திலும் இதே போக்கு தொடரும் என்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே, முதலீட்டாளர்கள் மற்றும் கடன் பெறுபவர்கள் இதற்கேற்ப தங்கள் உத்திகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.
2019ல் முதலீடுவைப்பு நிதிகளில் முதலீடு செய்யும் எண்ணம் கொண்டவர்கள், பல்வேறு வங்கிகள் அளிக்கும் வைப்பு நிதி வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்த்து, தங்களுக்கு ஏற்ற முதலீட்டை தேர்வு செய்யலாம். வழக்கமான வங்கிகளைவிட, ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் அதிக வட்டி விகிதம் அளிக்கும் போக்கும் காணப்படுகிறது.
வைப்பு நிதி முதலீடு முதிரும் நிலையில் இருந்தால், அவற்றை விலக்கி கொண்டு, அதிக வட்டி விகிதத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம். புதிதாக கடன் பெறுபவர்களை பொறுத்தவரை மாறும் வட்டி விகிதத்தை தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்.
வங்கிகள் தங்கள், எம்.சி.எல்.ஆர்., விகிதம் மீது வழங்கும் ஸ்பிரெட் விகிதத்தையும் மனதில் கொள்ள வேண்டும். ஏற்கனவே கடன் பெற்றவர்கள், கடனை மாற்றுவதற்கான செலவை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் வேறு வங்கிக்கு கடனை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு குறித்து தீர்மானிக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|