பதிவு செய்த நாள்
09 டிச2018
23:50
கமாடிட்டி சந்தை: கச்சா எண்ணெய்
இரண்டு மாத தொடர் சரிவுக்குப் பிறகு, கடந்த வாரம், கச்சா எண்ணெய் விலை சரிவில் இருந்து மீண்டு, உயர்ந்து வர்த்தகம் ஆனது.கடந்த
வாரம் நடைபெற்ற, ஒபெக் எனும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின்
கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பில் இல்லாத பிற முக்கிய உற்பத்தி
நாடுகளின் கூட்டமானது, வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில்
நடைபெற்றது.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில், கச்சா எண்ணெய்
விலை, ஒரு பேரலுக்கு, 26 அமெரிக்க டாலர் அளவுக்கு சரிந்தது. இதனால்,
உற்பத்தி நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகின. எனவே,
விலை சரிவை கட்டுப்படுத்த, உற்பத்தி குறைப்பில் ஈடுபட
முடிவெடுத்தனர்.
தினசரி, ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரல்கள்
உற்பத்தி குறைப்பு அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இதனால், சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.மேலும்,
உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா,
கடந்த வெள்ளியன்று, தினசரி, 2 லட்சம் பேரல் உற்பத்தி குறைப்பு செய்ய
தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தது. இதனாலும் சந்தையில் விலை
மளமளவென உயர்ந்தது.
சவுதி அரேபியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய மூன்று
நாடுகளின் மொத்த உற்பத்தி, ஒட்டுமொத்த உலகின் நுகர்வு தேவையில், 60
சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. எனவே, இந்நாடுகளில் ஏற்படும்
உற்பத்தி ஏற்றத் தாழ்வுகள், விலையை பாதிக்கும்.
தங்கம், வெள்ளி
தங்கம்
மற்றும் வெள்ளி, சில வாரங்களுக்குப் பிறகு, கடந்த வாரம் உயர்ந்து
வர்த்தகம் ஆனது. ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் ஏற்பட்ட உயர்வுக்கு
பிறகு, அதிகப்படியான வார உயர்வு, கடந்த வாரம் ஏற்பட்டது தான்.
அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிறிய தொய்வு, இதற்கு ஒரு
காரணமாகும்.
அந்நாட்டின் வட்டி விகிதங்கள், இம்மாதம் மற்றும்
அடுத்த ஆண்டுகளில் மூன்று முறை உயர்த்தப்படும் என்று
அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், தங்கம் விலை சரிவில் இருந்து
வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த சூழல் காரணமாக, வட்டி
விகிதம் உயர்வு தள்ளிப் போகும் என்ற கண்ணோட்டம் உருவானது. இதனால்,
டாலரின் விலை சரிந்து, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து
வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்காவின் நடப்பு கணக்கு
பற்றாக்குறை, 10 ஆண்டு உச்சத்தில் உள்ளது. அக்டோபர்
மாதத்திலிருந்து இறக்குமதி அதிகரித்ததும், ஏற்றுமதி
குறைந்ததும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.பொதுவாகவே தங்கம்,
ஆபரண தேவையைக் காட்டிலும், அரசு மற்றும் மக்கள் மத்தியில்,
முதலீட்டு தேவைக்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
எனவே தான், வட்டி விகிதங்கள் உயரும்போது, அது விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக,
வட்டி விகிதம் உயரும்போது, அரசு சார்ந்த கருவூலங்கள் மற்றும்
பத்திரங்களின் ஆதாயம் அதிகரிக்கும். அப்போது முதலீட்டாளர்கள்
தங்கத்தின் மீதான முதலீட்டை குறைத்து, அரசு சார்ந்த துறைகளில் முதலீடு
செய்வர்.
இதற்கு மாறாக, வட்டி விகிதம் குறையும்போது, தங்கம்
மற்றும் அது சார்ந்த பிற முதலீடுகளில் அதிகமாக முதலீடு செய்வர்.
எனவே தான், வட்டி விகிதம் குறித்த பேச்சுகள், எதிர்பார்ப்புகள்,
மாற்றங்கள் போன்றவை சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது.
நடப்பு
நிதியாண்டில், இந்திய ரிசர்வ் வங்கி, 8.6 டன் தங்கத்தை கொள்முதல்
செய்துள்ளது. இவ்வளவு அதிகமாக வாங்குவது, ஒன்பது
ஆண்டுகளுக்குப் பிறகு, இதுவே முதல் முறை ஆகும். இதற்கு முன், 2009ம்
ஆண்டில், பன்னாட்டு நிதியத்திடமிருந்து, 200 டன் கொள்முதல்
செய்திருந்தது. தற்போது மொத்த இருப்பானது 557.77 டன்களாக உள்ளது.
உலக அளவில் மத்திய வங்கிகளின் மொத்த தங்க இருப்பு பட்டியலில்
இந்தியா, 11-ம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தை
வகித்து வருகிறது.
அமெரிக்காவில், புதிதாக விவசாயம் சாராத அரசு
பணிகளில் அமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை மாதம் தோறும்
வெளியாகும். கடந்த வெள்ளியன்று வெளியான அறிக்கையில், எண்ணிக்கை
எதிர்பார்த்ததை விட குறைவாக வந்ததன் காரணமாக, அமெரிக்க நாணய
குறியீடு வலுவிழந்தது. இது, சந்தையில் தங்கம், வெள்ளி விலைகளுக்கு
சாதகமாக அமைந்தது.
செம்பு
இந்த ஆண்டின் ஆரம்பம்
முதல் தற்போது வரை, 17 சதவீதம் அளவுக்கு, சர்வதேச சந்தையில்
செம்பின் விலையில் சரிவு நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே, பொருளாதார
காரணிகள், செம்பின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
பொருளாதாரம்
உயரும்போது, செம்பின் விலை உயர்வதும்; பொருளாதாரம் வீழ்ச்சி
அடையும் போது, சரிவதுமாக, ஒருமித்த போக்குடன் காணப்படும். 2015ம்
ஆண்டுக்கு பிறகு, முதன்முறையாக இந்த ஆண்டில் விலை சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் செம்பு நுகர்வில், சீனா முதலிடம் வகிக்கிறது.
ஐரோப்பிய
ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு,
அமெரிக்கா அதிகப்படியான வரி விதிக்கும் என்று அறிவித்து
இருந்தது. பின் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில், இதை விலக்கிக்
கொள்வதாக கூறியது. நிலவி வரும் இச்சூழலில், செம்பு விலை ஏற்றம்
கண்டது.இருப்பினும், லண்டன் பொருள் வாணிப சந்தையில், செம்பின்
இருப்பு அதிகரித்து வருவது, இதன் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|