பதிவு செய்த நாள்
10 டிச2018
00:00
புதிய
தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்
நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன் உள்ள சவால்கள் என்னென்ன? அவற்றை
எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
முன்னாள் தலைமை பொருளாதார
ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன், சொந்தக் காரணங்களைச் சொல்லி,
தன் பதவியை ராஜினாமா செய்தார். ஏப்ரல் 2019 உடன், பா.ஜ.,வின்
பதவிக்காலம் முடிவு பெறவிருப்பதால், புதிய பொருளாதார ஆலோசகரை,
இந்த அரசு நியமிக்காது என்றே கருதப்பட்டது.ஆனால், இளம் பொருளாதார வல்லுனரான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், தற்போது மூன்றாண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில்
இருந்து ஒரு விஷயம் தெளிவு. இந்த அரசு, முறையான பொருளாதார
தேர்ச்சியுள்ள ஒருவரை தமது ஆலோசகராக, பக்கத்தில் வைத்துக்கொள்ள
விரும்புகிறது. அப்படியானால், கிருஷ்ணமூர்த்தி
சுப்ரமணியனுக்கு, அரசு தரப்பில் இருந்து ஏராளமான
எதிர்பார்ப்புகள் இருக்கும் என்றே இதற்கு அர்த்தம்.அந்த எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன், அவரின் தேர்வை கொஞ்சம் புரிந்து கொள்வோம்.
இந்திய தன்மை
விரால்
ஆச்சாரியாவோடு இணைந்து, பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்
கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன். இந்திய, ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்.,
ஆகியவற்றில் கல்வி கற்றதோடு, அமெரிக்கா சென்று, முனைவர் பட்ட ஆய்வை
செய்தவர்.ரகுராம் ராஜனது மாணவர். பின் இந்தியாவுக்கே திரும்பி,
ஆசிரியப் பணியை மேற்கொண்டிருக்கிறார். பல்வேறு இந்திய
வங்கிகளில், அமைப்புகளில் ஆலோசகராக இருந்துள்ளார்.இவையெல்லாம் ஒரு செய்தியை சொல்கின்றன. இவர், இந்தியர்களின் நிலைமை அறிந்த, இந்திய மனதும், சிந்தனையும் உடையவர்.
முன்னாள்
தலைமைப் பொருளாதார ஆலோசகர்களான ரகுராம் ராஜன், அரவிந்த்
சுப்ரமணியன் ஆகியோர் மீது வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டு,
அவர்களது அணுகுமுறையில், ‘இந்தியத் தன்மை’ இல்லை; அவர்கள்
மேலைநாட்டு, ‘இறக்குமதி’கள் என்பது தான்.மேலை கல்வியும்,
மேலைநாட்டு பணி வாய்ப்புகளும் அவர்களை முற்றிலும் இந்திய
யதார்த்தங்களை புரிந்துகொள்ள விடாமல் செய்துவிட்டன என்றும்
சொல்லப்பட்டது.
அந்த குறையை இவர் தீர்ப்பார் என்றே கருதலாம்.
சர்வதேச அளவில் இன்றைய பொருளாதார மாற்றங்களை உணர்ந்த மேலை
கல்வியும், அதேசமயம் இந்திய பணி அனுபவமும் இவருக்கு
அணிகலன்கள்.
ஆர்.பி.ஐ.,யோடு உறவுபொதுவாக, ஆர்.பி.ஐ.,
கவர்னர்களும் தலைமைப் பொருளாதார ஆலோசகரும் எதிரெதிர்
துருவங்கள். அதாவது, அரசு ஒன்றை செய்ய விரும்பும் ஆர்.பி.ஐ., மாற்றுக்
கருத்து கொண்டிருக்கும். இந்த நிலைமை, தற்போது மாறும் என்று
எதிர்பார்க்கலாம்.ஏனெனில், ஆர்.பி.ஐ.,யின் பல ஆலோசனைக்
குழுக்களில் சுப்ரமணியன் ஓர் அங்கம். ஒரு கட்டத்தில்,
ஆர்.பி.ஐ.,யின் நிதி கொள்கைக் குழுவில் நியமிப்பதற்காக, இவரது பெயர்
பரிசீலனையில் இருந்ததாகத் தெரிகிறது.
விரால் ஆச்சாரியா
இவரது நண்பர். அதனால், ஆர்.பி.ஐ.,க்கு, இவர் ஒன்றும் புதியவரல்ல.
சொல்லப் போனால், இந்திய மண்ணில் விளைந்த உள்நாட்டுத் தங்கம். அதனால், இரு அமைப்புகளுக்கும் இடையே தற்போது நிலவும் கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு அதிகம்.
மேஜிக் பட்ஜெட்இரண்டு
பெரிய வேலைகளை கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் செய்ய வேண்டும்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல். அதற்கு முன், இடைக்கால பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும்
வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டிய பொறுப்பு இவருடையது.
இன்றைக்கு
இருக்கும் நிதிப் பற்றாக்குறை, பணவீக்கம், கடன் வளர்ச்சி சரிவு போன்ற
பல்வேறு காரணிகளை சீர்துாக்கிப் பார்த்து, அரசின் செயல்
திட்டங்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டியது இவரது பொறுப்பு.வரும்,
2019 பட்ஜெட், நிச்சயம் ஒரு, ‘மேஜிக்’ பட்ஜெட்டாக இருந்தாக
வேண்டும்; அதற்கான முயற்சிகளை ஆட்சியாளர்கள் செய்வர்.
அதற்குப் போதுமான கொள்கை ரீதியான அடித்தளத்தையும், நியாயங்களையும், வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும்.இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு முகங்களை அறிந்தவரால் மட்டுமே, இத்தகைய ஆலோசனைகளை அரசுக்கு வழங்க முடியும்.
அனுமானத்தின்
அடிப்படையில் அல்லாமல், வலுவான பொருளாதார தரவுகளின்
அடிப்படையில், இவரது ஆலோசனைகள் அமையுமானால், அது பட்ஜெட்டை
சட்டென்று வேறு ஒரு உயரத்துக்குக் கொண்டு போகும்; அதன் மூலம்,
மக்களும் ஆட்சியாளர்களும் மகிழ்ச்சி அடைவர்.
இரண்டாவது பெரிய
வேலை, தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி அமையும்போது, சமர்ப்பிக்க
வேண்டிய, 2019- – 20க்கான பொருளாதார ஆய்வு அறிக்கை.அடுத்த
ஐந்தாண்டுகளுக்கான கொள்கை வழிகாட்டுதலாக அந்த அறிக்கை அமையும்
என்பதால், தொலைநோக்கு பார்வையோடும், சர்வதேச நிலவரங்களை
கணித்தும் வகுக்கப்பட வேண்டிய திட்டம் அது. சரியாகச் சொல்ல
வேண்டுமென்றால், இந்தியாவின், ‘பொருளாதார தலையெழுத்து’
மடிக்கணினி மேல் உட்காரும் இவரது விரல் நுனியில் தான் இருக்கிறது.
விமர்சனங்கள்
பண
மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்தார். அதனால், இவர்
ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே திகழ்வார் என்றொரு விமர்சனம்
எழுந்துள்ளது. அதேசமயம், பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால்,
வங்கித்துறை வளர்ச்சி அடையாது என்று எதிர் கருத்தை இவர் முன்வைத்தது,
எவர் கண்ணில் படமாட்டேன் என்கிறது.
அரசின் கருத்துகளுக்கு
பின்பாட்டு பாடாமல், தரவுகளின் அடிப்படையில், அனுபவத்தின் தராசு
கொண்டு, சர்வதேச நிலைமைகளை அனுசரித்து, கோடானுகோடி மக்களின்
எதிர்காலத்தை மனதில் கொண்டே, பொருளாதார ஆலோசகர்கள் தம்
பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவர். அதை ஏற்பதும், ஏற்காததும்
அரசின் பாடு. ஆனால், அரசின் மனசாட்சியாகத் திகழவேண்டியது
அவசியம். இவர் அரசுக்குத் தான் பொருளாதார ஆலோசகர்,
ஆளுங்கட்சிக்கு அல்ல. இவரது கவனம் இந்தியப் பொருளாதாரத்தின் மீதே
இருக்கும்.
இவருக்கு முன் இருந்த பொருளாதார ஆலோசகர்கள்
எத்தகைய சுயேச்சை தன்மையோடு செயல்பட்டனரோ, அதே தான் இவரது
பாதையாகவும் இருக்கும். இதைத் தான் நாடும் மக்களும்
விரும்புகின்றனர். வெல்கம் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்!
ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|