பதிவு செய்த நாள்
12 டிச2018
23:16
புதுடில்லி:‘ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர், சக்திகாந்த தாஸ், தற்போதைய முன்னுரிமை கொள்கைகளில் ஏதாவது மாற்றம் செய்தால், அது, வங்கித் துறையை பாதிக்கக் கூடும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ எச்சரித்துஉள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல், திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து, அப்பதவிக்கு, முன்னாள் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர், சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்கிகளின் வாராக் கடன் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணவும், நீண்டகால அடிப்படையில், வங்கிகள் ஆரோக்கியமாக செயல்படவும், ரிசர்வ் வங்கி முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது.இது, சமீபகாலமாக, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு துணை புரிந்துஉள்ளது.அதேசமயம், வாராக் கடன் காரணமாக, 11 வங்கிகள், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், அவற்றால் கடன் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அழுத்தம்
இந்நிலையில், ஐ.எல்., அன்ட் எப்.எஸ்., நிறுவனத்தின் நிதி நெருக்கடி அம்பலமானதை அடுத்து, கடன் கிடைப்பது கடினமாகியுள்ளது.அதனால், மத்திய அரசு, தீவிர கண்காணிப்பு வளையத்தில் இருந்து, சில வங்கிகளை வெளியேற்றி, அவை மீண்டும் கடன் கொடுக்க அனுமதிக்குமாறு, ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்தது.
இந்தாண்டு துவக்கத்தில், ரிசர்வ் வங்கி அறிவித்த, வாராக் கடன் தொடர்பான விதிமுறைகளை தளர்த்துமாறும் கோரியது.ஐ.எல்., அன்ட் எப்.எஸ்., பிரச்னையால், நிதி நெருக்கடிக்கு ஆளான, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, அவசர கால பணப்புழக்கத்திற்கு வழி செய்யுமாறும், மத்திய அரசு வலியுறுத்தியது.இத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை, உர்ஜித் படேல் ராஜினாமா செய்து, புதிய கவர்னராக, சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வருவதால், அரசியல் ஆதாயத்திற்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் இருக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்பும். அவ்வாறு, தற்போதைய முன்னுரிமை கொள்கைகளில் மாற்றம் செய்தால், அது, வங்கிகளின் கடன் தகுதி மதிப்பை குறைக்க வழி வகுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி, மிக உயரிய, மதிப்புமிக்க ஓர் அமைப்பு. நிர்வாகத்திலும், முடிவெடுப்பதிலும், ரிசர்வ் வங்கிக்கு சுய அதிகாரம் உள்ளது. அதன் தன்னாட்சி அமைப்பில், எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது. உர்ஜித் படேல் வகுத்துக் கொடுத்த கொள்கைகள் தொடருமா என்பது தான், தற்போதைய கேள்வி.
அரவிந்த் சுப்ரமணியன்
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|